Friday, December 31, 2010

34வது சென்னை புத்தகக் காட்சி



தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த வருட புத்தகக் காட்சி (34வது புத்தகக் கண்காட்சி) இன்னும் இரண்டு தினங்களில் தொடங்க இருக்கின்றது.

இடம்:-பூந்தமல்லி நெடுஞ்சாலை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே) சென்னை

தொடக்கநாள்:-ஜனவரி 4, 2011.

இம்முறை வழக்கம் போல் 12 தினங்கள் அல்லாமல் 14 தினங்க‌ள் காட்சி நடக்க உள்ளது. காட்சி இறு‌தி‌ நாள் ஜனவரி 17, 2011. காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவேதிதா புத்தகப் பூங்காவின் அரங்கு எண் - 274. காட்சியில் சந்திக்கலாம்.


Monday, December 6, 2010

கேட்டதில் ரசித்தது

தமிழ் ஸ்டுடியோ மின்னிதழில் 'கதை சொல்லி' எ‌ன்றொரு அற்புதமான பகுதி இருக்கிறது. அதில் தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமைகளின் படைப்புகளை யாராவது ஒரு படைப்பாளியை விட்டு விமர்சனம் செய்ய சொல்கிறார்கள். ஆடியோ ஃபார்மெட்டில் கேட்க அருமையாக இருக்கிறது.


எ.ஸ்.ராமகிருஷ்ணின் "மிருகத்தனம்" எ‌ன்ற சிறுகதையை மனுஷ்யபுத்திரனின் உணர்ச்சிகர குரலில் கேட்க முடிந்தது. மிருகத்தனம் சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்த விதம் அருமை. குறிப்பாக சுஜாதாவின் "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்து விமர்சனம் செய்திருந்த பகுதியை ரசித்து கேட்டேன். சுஜாதாவின் சிறுகதைகளை பற்றி எனக்கு சில கருத்துகள் உண்டு. பொதுவாக சிறுகதைகள் எழுதும்போது கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். ஆனா‌‌‌ல் சுஜாதாவின் கதைகளில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக அவர்கள் பேசும் வசனம் மூலமாக கதையின் மைய ஓட்டம் கட்டமைக்கப்பட்டிருக்கும். சுஜாதா கதைகளில் கதாபாத்திரங்கள் அதிபுத்திசாலியாக பேசுவார்கள். சுஜாதா வசனம் எழுதிய திரைப்படங்களிலும் இதே போக்கை காணலாம். எ‌னவேதான் பெரும்பாலும் சுஜாதா கதைகள் நாடகம் எ‌ன்ற கலைவடிவத்துக்கு (சினிமாவுக்கு கூட) நெருக்கமாக இருந்தது. வெள்ளைக்கப்பல் சிறு கதையை மனுஷ்யபுத்திரன் விமர்சனம் செய்த மனுஷ்யபுத்திரனும் இதே கருத்துகளை சொல்லி சொல்லி முடித்திருந்தார். எனக்கென்னவோ சுஜாதா சிறுகதைகளை ‌விட எஸ்.ரா கதைகள் பிடித்துள்ளது. எஸ்.ராவை தமிழின் இந்த நூற்றாண்டில் பிறந்த மாபெரும் கதை சொல்லி எ‌ன்று கூறலாம். முன்பு சொன்னபடி கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். எஸ்.ராவை மாபெரும் கதை சொல்லி எ‌ன்று கூற நான் தேர்வு செய்வது இந்த இரண்டு காரணிகளை வைத்துதான். "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை விட, எஸ்.ராவின் "மிருகத்தனம்" சிறுகதையை மனுஷ்யபுத்திரனா‌‌‌ல் ரசித்து உணர்ச்சிகரமாக கூறமுடிந்தது. ‌மிக நுட்பமாக விவரிக்க முடிந்தது. அவரது குரலை கேட்டு பாருங்கள்.கூடு இதழில் வெளிவரும் இந்த கதைசொல்லி பகுதி புதுமையாக இருக்கின்றது. ஆர்வமாக தொடர்ந்து கேட்க ஆரம்பித்துள்ளேன். ஆதவன்,லா.ச.ரா குறிப்பாக எனது ஆல்டைம் ஃபேவரைட் அசோகமித்திரன் சிறுகதைகளை கேட்க ஆர்வமாக இருக்கிறது.

Saturday, November 6, 2010

நவீன விருட்சம் - தந்தைமை

கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் தளத்திற்கு நன்றி

தந்தைமை

என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, November 4, 2010

சொல்வனம் - இரண்டு கவிதைகள்

சொல்வனம் இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகளை வாசிக்க... கவிதைகளை வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி..

நிபுணன்
-----------
ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர்
நோயாளியின் நாடித்துடிப்பை
முத‌லி‌ல் பரிசோதிக்கிறார்
மரத்துபோகும் ஊசியை
கனிவாக பேசியபடியே
அவனுக்கு போடுகிறார்
அவன் நினைவுகள்
மெல்ல மெல்ல நழுவி
கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
தனது வேலையை தொடங்குகிறார்

கத்தியால் மெலிதாக கீறுகிறார்
இளஞ்சூடாய் கருவில் இருக்கும்
சிசு போல இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது
காலில் உள்ள அசுத்த ரத்தத்தை
இதயத்திற்கு கொண்டு செல்லும்
ரத்தக்குழாயை கவனமாக பரிசோதிக்கிறார்
நோயாளியும் கடவுளும்
எதையோ தீவிரமாக
விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்

இதய அறுவை சிகிச்சை நிபுணர்
இடது மற்றும் வலது
ரத்தக்குழாய்களை பரிசோதிக்கிறார்
எந்த குழாயில்
அடைப்பென்று கண்டுபிடித்தவர் முகத்தில்
அப்படியொரு சாவதானம்

இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்

நோயாளியும் கடவுளும்
தர்க்க சாஸ்திரத்தில் இறங்கி
தீவிரமாக வாக்குவாதம் செய்யும்போது
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
ரத்தக்குழாய்களில் படிந்துள்ள
அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சியெடுக்கிறார்

இதுநாள் வரை
இரத்தம் செ‌ன்றுக்கொண்டிருந்த
குழாயை தவிர்த்து வேறொரு
குழாய் வழியே இரத்தத்தின்
பயணத்தை மாற்றி அனுப்புகிறார்
ஒரு போக்குவரத்து காவலரை போல
பாதி வழியில் நின்றுபோன
பேருந்து பயணிகளை
பிறிதொரு பேருந்திற்கு மாற்றும்
ஒரு நடத்துனரை போல
ஒரு இறைத்தூதன் போல
ஒரு கடவுள் போல

கடவுள் சிரித்தபடியே
நோயாளியிடம் விடைபெற
நோயாளி மெல்ல மெல்ல
பூமிக்கு திரும்புகிறார்

வெற்றிகரமாக
ஒரு அறுவை சிகிச்சை முடிக்கும்
இதய அறுவை சிகிச்சை நிபுணரின்
முகத்தில் அப்படியொரு சாந்தம்
அப்படியொரு தெய்வீகம்
இரத்தம் கொழுப்பு
சூடான சதைத்துணுக்குகள்
துடிக்கும் நரம்புகள்
இவற்றினூடே
அவருக்குக்கே அவருக்கு
மட்டும் தெரிந்திருக்கலாம்
அந்த இதயத்தில் ஒளிந்திருந்த
‌சில துரோகங்கள்
‌‌சில வலிகள்
‌சில புறக்கணிப்புகள்
சில கேவல்கள்
‌சில ரகசியங்கள்


கலைஞன்
-------------
இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

முன்பு இந்த உலகத்தில் தோன்றி
மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்
மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்
கண்களை மூடிக்கொள்கிறான்
எதையோ தீவிரமாக யோசிக்கிறான்
அந்தக்கோழியை விட்டுவிட்டு
இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

அதன் கழுத்தை திருக
அவனுக்கு தயக்கமாக இருக்கிறது
கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்
கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்
கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்
கடவுளை தொழுகிறான்

இறைச்சிக் கடை உரிமையாளர்
அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்
தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்
ஆற்றுப்படுத்துகிறார்
கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்
சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்
கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்
கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்
அவன் கொலை செய்யும் உயிர்கள்
துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

பருவத்துக்கு வந்துவிட்ட
போர்வீரனாய் கர்வம் கொள்ளும்
அந்த சிறுவன்
செய்யும் முத‌ல் கொலை
மிகுந்த கொடூரமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் எடுத்துக்கொண்ட கால அளவு
மிகுந்த நீளமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் மனதில் விவாதித்தது
மிகுந்த தத்துவார்த்தமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் வாழ்ந்த வாழ்க்கை
மிகுந்த சிக்கலானது
அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்
‌மிகுந்த எண்ணிக்கையிலானது

அந்த சிறுவனது
மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன

இப்போதெல்லாம்
அவன் விரல்கள்
ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்
ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்
ஒரு மிருதங்க கலைஞனாய்
இறைச்சியை வெட்டுவதற்கு
பழக்கமாகியிருந்தது



நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, October 30, 2010

இவருக்கு ஓட்டு போடுங்க

நண்பர்களுக்கு...

நவம்பர்-14 க்குள் இவருக்கு ஓட்டு போடுங்க




இவரைப்பற்றி
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/




நன்றி
என்.விநாயக முருகன்

Friday, October 29, 2010

ஆற்றுப்படை

மருத்துவக் காப்பீடு விற்கும்
நண்பரை சந்திக்க நேரிட்டது
உடல்நலனை விசாரித்தார்
உள்ளம் நெகிழ

என் நெஞ்சுவலிப் பற்றி கேட்டார்
மிகுந்த அக்கைறையோடு
சுவரிருந்தால் சித்திரமென்றார்

மூட்டுவலிப் பற்றி விசாரித்தார்
கனிவாய் தாயன்போடு
உடல் வளர்த்தால்
உயிர் வளருமென்றார்

பு‌திதாக வந்திருந்த
காப்பீட்டுத் திட்டத்தை
பரிவாக விவரித்தார்

பத்து வகை நோய்களுக்கு
பணம் தருவதாக நம்பிக்கையளித்தார்
சுலபத்தவணை வசதியென்றார்
குறைந்தப்பணமே ஆகுமென்றார்

இறந்துப்போனா‌‌‌ல்
பணம் கட்ட தேவையில்லையென்றார்
ஆறுதலாக இருந்தது





நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, October 24, 2010

தனிமைச்சிறை - குறும்படம்

சென்னை வ‌ந்து வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் பகலெல்லாம் நண்பர்களது ரூமில் அடைந்து கிடப்பேன். அநேகமாக எல்லா நண்பர்களும் வேலைக்கு செ‌ன்று விட எஞ்சியவர்களும் அவர்களது தோழிகளுடன் சினிமா அல்லது பீச் செ‌ன்று விட்டிருப்பார்கள். நான் மட்டும் ரூமிற்குள் அடைந்து கிடப்பேன். பத்து மணிக்கு ஜெராக்ஸ் கடைக்கு செ‌ன்று பயோடேட்டா பிரிண்ட் அவுட் எடுப்பேன். டீக்கடை செ‌ன்று ஒரு தம் அடித்து டீ சாப்பிடுவேன். எவ்வளவு நேரம் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது? டீக்கடைக்காரன் ஒருமாதிரி நினைப்பான் எ‌ன்று மீண்டும் கிளம்பி ரூமுக்கு வ‌ந்து விடுவேன். பரணில் ஏதாவது சினிமா கவர்ச்சி புத்தகம் இருக்கும். எடுத்து படிப்பேன். அடு‌த்த சிகரெட் பற்ற வைக்கும்போது பசி உலுக்கும். இன்னொரு டீ கூட வடை சாப்பிட டீக்கடை செல்வேன்.


காலை பதினொரு மணிக்கு வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒரு ரூமிற்குள் அடைந்துகிடப்பது இருக்கிறதே. அந்த கொடுமையை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மதியம் இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை போவது தெரியாது. மெஸ்ஸில் சாப்பிட்டு வ‌ந்து உறங்கி விடலாம். காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை தனிமைச்சிறையில் இருக்கும்போது பலநேரங்களில் விபரீத எண்ணங்கள் ஓடும். தற்கொலை; வலி, புறக்கணிப்பு, கோபம் எ‌ன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் மனதுக்குள் பல அலைகள் ஓடும்.

எனது அலுவலகத்தில் வேலைபார்க்கும் லதாமகன் மூலமாக இந்த குறும்படத்தை பார்க்க நேரிட்டது.லதாமகனுக்கு நன்றி. படம் உலுக்கி விட்டது. காரணம் நான் இந்த வலியை வெறுமையை உணர்ந்துள்ளேன். நீங்களும் உணர்ந்திருக்கலாம். கவிஞர் அய்யப்ப மாதவனை டிஸ்கவரி புக் பேலஸில் (சொற்கப்பல் இலக்கிய நிகழ்ச்சி எ‌ன்று நினைவு) சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசியுள்ளேன். அவரைப்பற்றி அதிக எண்ணிக்கையிலான கவிதைகள் எழுதக்கூடியவர் எ‌ன்றுதான் என் மனதுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. இந்த குறும்படம் மூலம் அவரது இன்னொரு பரிமாணம் எனக்கு அறிமுகமாகியுள்ளது. படத்தில் வந்திருக்கும் ‌மிக நேர்த்தியான ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.

யூட்யூப் சுட்டி:

1. http://www.youtube.com/watch?v=mXPnbSiry5Q
2. http://www.youtube.com/watch?v=D6WVxC2wAx4

Friday, October 15, 2010

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞன்

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞனை "ஆண்கள் படித்துறை" என்னும் அவரது அற்புதமான சிறுகதையோடு அறிமுகப்படுத்துகிறேன். அன்னம்மாள் கணவனை இழந்தவள். மத்திய வயதை தாண்டியும் கட்டுடலோடு அந்த ஊர் ஆண்களை அலைய விடுபவள். அன்னம்மாள் காசுக்காக உடம்பை விற்கும்பாலியல் தொழிலாளி அல்ல. அவளை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அவள் முடிவு செய்யும் ஆண்களே அவளோடு படுக்க முடியும். ஆண்களை ஒரு பரிதாபத்துகுரிய பிறவியாகவோ, அற்ப ஜீவனாகவோத்தான் அவள் பார்த்திருக்க முடியும். உறவுக்குக்காக அவள் பணம் ஏதும் பெற்றுக் கொள்வதுமில்லை. அல்லது காமத்தின் மூலம் ஆண்களை வென்று விட்டதாக அவளுக்கு உள்ளுக்குள் உவகை. அதன் மூலம் பகலில் தைரியமாக ஆண்களது முகங்களை எதிர்கொள்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம். அவளுக்கு லலிதா என்றொரு மகள். லலிதா அம்மாவுக்கு நேர் எதிரி. கற்பு, குடும்பம் பற்றிய கறாரான மதிப்பீடுகளை கொண்டிருக்கும் அவள் செல்வம் என்ற வாலிபனை காதலிக்க, செல்வத்திற்கோ லலிதா உடல் மீதுதான் ஆசை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகுதான் செக்ஸ் என்பதில் லலிதா கறாராக இருக்கிறாள். அன்னம்மாள் முதல்முறையாக தனது மகள் திருமணத்துக்காக காமத்தை விலை பேசுகிறாள். விலை பேசுவது வேறு யாரிடமும் இல்லை. செல்வத்திடம். அன்னம்மாள்,செல்வம் உறவை பார்க்கும் லலிதா தூக்கு மாட்டிக் கொள்கிறாள். ஆணாதிக்க சூழலில் கணவனை இழந்த ஒரு பெண் தன் சுயத்தையும், இருப்பையும் காப்பாற்ற காமத்தைத்தான் ஆயுதமாக எடுத்தாக வேண்டிய நிலையை ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் அவலத்தை அன்னம்மாள் கதாபாத்திரம் காட்டுகிறது. ஆண்களை எதிர்க்க காமத்தை விட்டால் மரணம் தவிர வேறு வழி இல்லை என்பதை லலிதா காட்டுகிறாள். காமத்தை ஆண்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றியும் அன்னம்மாள் கடைசியில் தோற்றுவிட, ஆண்கள் எல்லா நேரத்திலும் வெற்றிப்பெற்றவர்களாக மாறுவதை வாழ்வின் முரண் என்பதை விட வேறு என்ன சொல்ல முடியும்? கதா - காலச்சுவடு போட்டியில் இந்த சிறுகதை முதல் பரிசு பெற்றது. எஸ்.ரா முன்பொருமுறை தனக்கு பிடித்த நூறு சிறுகதைகளில் "ஆண்களின் படித்துறையை" குறிப்பிட்டுள்ளார்.

“பிளாக் டிக்கட்” சிறுகதையில் அலிபாபா பிளாக் டிக்கட் விற்கும் ரவுடி. பாரி தியேட்டர் கெளண்டரில் டிக்கட் குடுக்கும் வேலை செய்கிறான். தியேட்டர் நிர்வாகம் பெரியவர் கையிலிருந்து அவரது மகன் சின்ன செட்டியார் கைக்கு மாறுகிறது. பெரியவர் இருந்தவரை சுதந்திரமாக தியேட்டரில் பிளாக் டிக்கட்டும், செய்து வந்த விளிம்புநிலை மனிதர்களுக்கு சின்னவர் அதிகாரத்துக்கு வந்ததும் சோதனை வருகிறது. போலீஸ்காரர்களும், சில நாகரீகமான ஆட்களும் கூட பிளாக் டிக்கட் விற்கிறார்கள். இவர்களோடு அலிபாபாவால் போட்டியிட முடியவில்லை. அலிபாபாவும், பாரியும் சமாதானமாகி கூட்டாக தொழில் செய்யும் நேரத்தில் அலிபாபாவை யாரோ வெட்டி விடுகிறார்கள். பாரியை போலீஸ் கைது செய்கிறது. விளிம்புநிலை மனிதர்களை மோதவிட்டு அதிகார வர்க்கம் வேடிக்கை பறக்கிறது. திட்டம் போட்டு செஞ்சிட்டானுவ என்று அவர்கள் பேசிக்கொள்வதோடு கதை முடிகிறது. பிளாக் டிக்கெட் கதையில் சாணக்யா விவரிக்கும் புற உலக வர்ணணைகள் துல்லியமானதும், யதார்த்தமானதுமாய் அமைந்துள்ளது. குறிப்பாக தியேட்டர் கழிவறைகளில் நடக்கும் பாலியல் தொழில், பிளாக் டிக்கட் விற்கும் சிறுவர்களின் புற உலகத்தை யதார்த்தமாக சாணக்யா பதிவு செய்கிறார்.

“கடவுளின் நூலகம்” என்ற சிறுகதை செம ஜாலியாக செல்லும். ஒரு நாற்பது வயது ஆள். பிரம்மச்சாரி. தினமும் அவனை ஒரு கல்லூரி பெண் சைட் அடிக்கிறாள். இருவரும் பேசாமலேயே பலநாட்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் அவளே உரிமையோடு வந்து அவரிடம் பேசுகிறாள். என் மீது என்ன கோபம்? என் காதல் பொய்யில்லை. ஏன் என்னிடம் பேச மறுக்கின்றீர்கள்? கேட்கிறாள். இவருக்கு குழப்பம். என்னடா இது? நாம் எப்ப இவளிடம் இதற்கு முன்பு பேசியுள்ளோம். மூளை குழம்பிவிட்டதா? செம ரகளையாக இருக்கும் இந்த கதை ஒரு வித திடுக்கிடலோடு சோகமாய் முடிகிறது. இது என்ன மாதிரி கதை? மேஜிக்கல் ரியலிசமா? எதார்த்தமா? தர்க்கத்தை மீறிய ஒரு வித பூடகத்தன்மை இந்தக்கதையின் முக்கிய அமசமாக இருக்கிறது. எது எப்படியோ.. எனக்கு சாணக்யாவை பிடிக்கிறது. சிடுக்குகளற்ற மொழி நடையில் இந்தக்கதை சலசலவென ஓடும் நீரோடை போல ஓடி திடீரென ஹோவென்ற சத்தத்துடன் விழும் பிரம்மாண்ட பேரருவி ஓசையில் முடிகிறது. (இந்தக்கதையின் முன் பகுதியில் லேசாக ஹாருகி முரகாமியின் ஒரு சிறுகதை வாடையடித்தது)

இந்தக்கதையின் கனவுத்தன்மை பற்றி சொல்லும்போது இன்னொரு கதையை பேசாமல் இருக்க முடிவதில்லை. ஜே.பி.சாணக்யா "கனவுப் புத்தகம்" சிறுகதையில் மிக செறிவாக காலத்தை கலைத்துப்போட்டு விளையாடியுள்ளார். ஒரு குளம். அதில் பால்யகாலத்தில் இருக்கும் இரண்டு சகோதரிகள் அவர்களது பால்யகாலத் தோழனுடன் நீந்தி விளையாடுகிறார்கள். தாமரை மலர்களை பறிக்க குளத்தில் முங்குகிறார்கள். காலம் ஓடுகிறது. அவர்கள் வளர்கிறார்கள். வாழ்ந்துக்கெட்ட குடும்பம். திருமணம் தடைபடுகிறது. முதிர்கன்னிகளை சந்திக்க வரும் அதே பால்யகாலத்தோழன் அவர்களோடு உறவு கொள்ளுகிறான். நீருக்கடியிலிருந்து மூன்று பிணங்களை கிராம மக்கள் மீட்டெடுக்கிறார்கள். அதுவரை அவர்கள் வாழ்க்கை எல்லாம் கனவுலகத்திலிருந்து கூறப்பட்டவையாக முடிகிறது.

சாணக்யாவின் எல்லா கதைகளிலும் காமம் அடிநாதமாக இழையோடுகிறது. காமத்தை பில்டர் செய்துவிட்டால் எந்தக் கதையுமே கதையாக இருக்காது. காமத்தை சாணக்யா சரளமாக எழுத்தில் கையாள்கிறார். அவன் வெற்றிலைப் போட்டு வாயை கொப்பளித்தான். என்று சரளமாக சொல்வது போல “அவள் மார்புகளைத் திரை விலக்கி உதடு பொருத்திக் கவ்வினான்” என்று எழுதிவிட்டு போகிறார். இந்த பாணியே அவரது கதைகளில் வணிக எழுத்துக்குரிய மேலோட்டமான பாலியல் கிளர்ச்சியை தராமல் , முகம் சுழிக்க வைக்காமல் நம்மை சகஜமாக கதைக்குள் இழுத்து செல்கிறது. உண்மையில் இவர் காட்டும் காமச்சித்தரிப்புகள் கிளுகிளுப்பாக இருப்பதில்லை. காமம் அதுவாகவே அதாவது அதன் சகஜத்தன்மையோடனே இவரது கதைகளில் வெளிப்படுகிறது. சாணக்யாவின் கதைகளில் வரும் பெண்கள் காமத்தை மிக இயல்பாக எதிர்கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. "கோடை வெயில்" சிறுகதையில் வேலையில்லாமல் இருக்கும் கணவனுக்காக அவள் மனைவி வசந்தா அவளது உறவினர் அண்ணன் முறை சொல்லி அழைக்கும் ஒரு போலீஸ்காரரோடு உறவு கொள்கிறாள். "ஆண்கள் படித்துறை"யில் அன்னம்மாள். “ரிஷப வீதி” கதையில் பாலியல் தொழிலாளர்களது உலகத்தையும், சிறுமிகளை புணர்வதில் இன்பமடையும் ஒரு வக்கிர ஆணின் செய்கைகளையும் சாணக்யா பதிவு செய்கிறார்.

காமம் தவிர இவரது சிறுகதைகளில் மனப்பிறழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதர்களை அதிகம் பார்க்க முடிகிறது. “பூதக்கண்ணாடி” கதையில் தீவிர மனப்பிறழ்வு ஒரு கொலையில் முடிகிறது. பூதக்கண்ணாடியின் சித்தி கொலை செய்யப்பட்டு அவளது குடிசைக்குள் புதைக்கப்பட்டு, சில வருடங்கள் கழித்து குடிசை புல்டோசரால் இடிக்கப்படும்போது பிணம் வெளியே வருகிறது. “மிகு மழை” சிறுகதையில் வரும் வேணியக்காளுக்கு அவள் கொடுமைக்கார கணவனால் மனப்பிறழ்வு ஏற்படுகிறது. முடிவில் அவள் ஆடைகளை கிழித்துக்கொண்டு தெருவில் அம்மணமாக நடக்க வீட்டிற்குள் வைத்து பூட்டி வைக்கிறார்கள். “அமராவதியின் பூனைகள்” கதையில் ரசாக் என்னும் ஒரு சிலம்பாட்டக்காரன் வருகிறான். ஊரே மெச்சும் ரசாக் அவன் மனைவி முன் தோற்று போகிறான். ஒருக்கட்டத்தில் அவனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போகிறது. ரசாக்கின் மனைவி அமராவதிக்கும், ரசாக்கின் நண்பன் காசிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அமராவதி வளர்க்கும் பூனையை சிலம்பால் அடித்துக் கொன்று கத்தியால் கீறி தூக்கில் தொங்க விடுகிறான்.

சாண்க்யாவின் கதைகளில் வரும் ஆண்களும் சரி. பெண்களும் சரி. பாலியல் சுயதேவை சரிவர பூர்த்தியடையாமல் ஏங்குகிறார்கள். ஒருக்கட்டத்தில் பாலியல் வேட்கையால் தீவிரமாக மனம் பிறழ்ந்து விபரீதமாய் மாறுகிறார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் காமமே அடிப்படையாக இருக்கிறது. சாணக்யா அவரது உலகத்தில் காட்டும் மனிதர்களுக்காக நாம் கடவுளை பிரார்த்திக்கிறோம். அவர்கள் இப்படி செய்யலாமா? என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள்? என்று திகைக்கிறோம்.என்ன செய்வது? இப்படியும் ஒரு உலகம் இருக்கத்தானே செய்கிறது. அங்கு மனிதர்கள் இப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்களது உளவியலையும்,புறச்சூழலையும் துல்லியமாக எழுத்தில் வடிக்கும், தனது அடர்த்தியான சிறுகதைகள் மூலம் கவனம் பெற்றுள்ள சாணக்யா என்னும் கலைஞனுக்கு, நவீன தமிழ் இலக்கிய உலகத்தில் தனி இடமொன்று எப்போதும் இருக்கும்.

(ஜே.பி. சாணக்யாவின் "கனவுப் புத்தகம்", "என் வீட்டின் வரைப்படம்" மற்றும் காலச்சுவட்டில் வெளியான சில சிறுகதைகளை முன்வைத்து எழுதப்பட்ட விமர்சனம்)

Thursday, October 14, 2010

The Proposal - அழகான காமெடி+காதல் கதை


எனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவாக பிடிக்காது. கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன். இ‌து ‌மிக அருமையான படம். ஆஹோ... ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ஆரம்பம் முத‌ல் இறுதி வரை ரசிக்க முடிந்தது. பல இடங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இ‌ல்லை. ‌சில இடங்களில் தமிழ்ப்படங்களை போலவே குடும்ப செண்டிமெண்ட். சில இடங்களில் ரொமான்ஸ். குறிப்பாக சாண்ட்ரா புல்லாக்கின் (ஸ்பீடு படத்தில் பேருந்து ஓட்டும் அம்மணிதான்) நடிப்பு படத்தை தொய்வில்லாமல் இறுதிவரை ரசிக்க வைக்கிறது. படம் பெயர் The Proposal.

மார்கரெட் (சான்டாரா புல்லாக்) ஒரு புத்தக பதிப்பக கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் கனடாவிலிருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவரை பார்த்தாலே கம்பெனியில் இருக்கும் ஊழியர்கள் நடுங்குகிறார்கள். நம்ம ஆன்சைட் மேனஜர்கள் போல டெரர் ஆக இருக்கிறார். ஒருகட்டத்தில் அவரது அமெரிக்க விசா காலாவதியாகிறது. அவர் கனடாவிற்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம். சான்டாரா புல்லாக்கின் உதவியாளராக வேலை பார்க்கும் ரேயான் ரெனா‌‌‌ல்டை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். அதன் மூலம் அமெரிக்கா குடியுரிமை விசாவை தக்க வைத்துக்கொள்வது சான்டாரா புல்லாக்கின் எண்ணம். முதலில் ரெனா‌‌‌ல்ட் இத்திட்டத்திற்கு மறுக்க, சான்டாரா புல்லாக் அவனுக்கு வேலையில் புரோமோஷன் வாங்கி தருவதாக சொல்ல ரெனா‌‌‌ல்ட் சம்மதிக்கிறான். இவர்கள் திருமணத்தை சந்தேகிக்கும் குடியுரிமை அலுவலர்கள் அவர்களை வேவு பார்க்கிறார்கள். தம்பதிகள் இருவரும் அலாஸ்காவில் இருக்கும் ரெனா‌‌‌ல்ட்டின் வீட்டிற்கு செல்கிறார்கள். ரெனா‌‌‌ல்ட்டின் அப்பா,அம்மா மற்றும் பாட்டி சந்தோஷமாக புதுமண தம்பதிகளை வரவேற்கிறார்கள்.


பிறகுதான் படத்தில் கச்சேரி களை கட்டுகிறது. அ‌ங்கு நடக்கும் ரகளைதான் படமே. இருவரும் போலியாக புதுமண தம்பதிகள் போல நடிக்கிறார்கள். ரெனா‌‌‌ல்ட்டின் பாட்டியாக வரும் மேரி ஸ்டீன் பெர்க் அடிக்கும் ரகளையும், சாண்ட்ரா புல்லாக் மாட்டிக்கொண்டு முழிப்பதும் செம ஜாலியாக படத்தை பல இடங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. ஒரு கட்டத்தில் சாண்ட்ரா புல்லாக்கால் தாங்க முடியாமல் உண்மையை ஒத்துக்கொண்டு அலாஸ்காவை விட்டு ஓட, அப்புறம்? மீதிக்கு படத்தை பார்க்கவும்.

அண்மையில் நான் ரசித்து பார்த்த ரொமான்ஸ் கலந்த ஒரு காமெடி படம் The Proposal. இந்த படத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது. ஒருவேளை ஹாலிவுட்காரர்கள் குடும்ப உறவுகளை அன்பை மையப்படுத்தி எடுத்திருப்பதால் எனக்கு பிடித்துள்ளதோ..என்னவோ?

Monday, October 11, 2010

வித்தை - அகநாழிகை சிறுகதை


செப்டம்பர் மாத "அகநாழிகை" இதழில் வெளியான எனது வித்தை எ‌ன்ற சிறுகதை வாசிக்க.. சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி...


வித்தை

கடைசி பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பொன்ராஜ்தான் அந்த கேள்வியை என்னிடம் கேட்டான். பள்ளிக்கூட காம்பவுண்டு பக்கத்தில் மண்டிக்கிடந்த கருவேலக்காட்டில் நானும்,அவனும் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த கேள்வியை கேட்டான். எனக்கும் ஏற்கனவே அந்த சந்தேகம் இருந்தது.


பொன்ராஜ் வீட்டை தாண்டி தெருமுனையில் செல்லும்போது “அது எப்படிடா மூனு நாளா ஒன்னுக்கு கூட போகாம சைக்கிள் சுத்தறான்?” பொன்ராஜ் கேட்ட கேள்வி மனதில் ஓடியது. எனக்கு இருந்த அதே சந்தேகம் பொன்ராஜுக்கும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அருகே செல்ல,செல்ல திடலில் கட்டியிருந்த லவுட்ஸ்பீக்கரின் ஒலி அதிகரித்தது. “நான் ஆணையிட்டால்…” எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் அவன் சைக்கிள் சுற்றிக் கொண்டிருப்பது இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

தெரு முனையில் இருந்த காலித்திடலின் நடுமையத்தில் மூங்கில் கம்பு நட்டிருந்தது. மூங்கில் கம்பில் ஒரு ட்யூப்லைட் கட்டியிருந்தார்கள். அவன் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். திடலை சுற்றி வட்டவடிவத்தில் ஐந்து மூங்கில் கம்புகள் ஐந்தடிக்கு ஐந் தடி இடைவெளியில் அரண் போல ஊன்றியிருக்க, ஒவ்வொரு கம்பிலும் சணல் கயிற்றால் ட்யூப்லைட் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. ஐந்து மூங்கில்களையும் கயிற்றால் இணைத்து வட்ட திடலை சுற்றி வட்டவடிவத்தில் அரண் உருவாக்கியிருந்தார்கள்.

இன்று இரண்டாம் நாள். இரண்டு நாட்களாக அவன் கால்கள் தரையில் படவில்லை ; இரண்டு நாட்களாக அவன் உறங்கவில்லை என்பதுதான் ஊருக்குள் அதிசயமான பேச்சாக இருந்தது. அதைவிட பொன்ராஜ் சொன்னதுதான் எனக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாட்களாக அவன் வயக்காட்டுப்பக்கம் ஒதுங்கவில்லை. சைக்கிள் வித்தைக்காரன் காலையில் குளிக்கும்போது குடம், குடமாக தலையில் தண்ணீரை வாரி வாரி கொட்டினா‌‌‌ன். குளிக்கும்போதே அவன் ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவலை பொன்ராஜ் சொன்னபோது அது எனக்கு அதீத கற்பனையாக பட்டது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

நேற்று இரவு அவன் சைக்கிள் சுற்றும்போது மூன்று பேர் வட்டமாக சூழ்ந்து நின்றார்கள். பழைய ப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை கையில் வைத்து அவன் வேகமாக சைக்கிள் சுற்றி வர,வர ஒவ்வொரு லைட்டாக அவன் முதுகில் நெஞ்சில்,முதுகில் அடித்து உடைக்க மக்கள் மெய்மறந்து நின்றார்கள். சிறுவர்கள் கைதட்டி உற்சாகமூட்ட கடைசி ட்யூப்லைட்டை அவன் நெற்றியில் அடித்து உடைத்தார்கள். இவ்வளவுக்கும் அவன் கொஞ்சம் கூட சைக்கிளின் வேகத்தை குறைக்காமல் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அதைவிட ஆச்சர்யமாயிருந்தது பொன்ராஜ் சொன்னது. அந்த வித்தைக்காரன் குளிக்கும்போதே ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவல். அப்படியென்றால் இரண்டுக்கு? பொன்ராஜ்ஜிடம் அதுகுறித்து தெளிவான பதிலில்லை.

“நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா…” எம்.ஜி.ஆர் பாடல் மைக் செட்டில் ஒலித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் வித்தைக்காரனை பார்த்தேன். அவனை சுற்றி சிறுவர்கள் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் சைக்கிளின் ஹேண்டில்பாரை இரண்டு கைகளால் பலமாக பிடித்துக் கொண்டு சற்று படுத்த நிலையில் சைக்கிளை ஓட்டியபடியே சுற்றினான். வலது காலை உயர்த்தியபடி இடதுகாலால் மட்டும் பெடல் ஓட்டி சைக்கிளை ஓட்ட சிறுவர்கள் விசிலடித்தார்கள்.

சைக்கிள் வித்தைக்காரனின் உதவியாளன் கையிலிருந்த சிறிய மைக்கை பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி, சுற்றி நடந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் கயிற்றை தாண்டி சென்று அருகிலிருந்த துணி கூடாரத்திற்குள் நுழைந்தான். எம்.ஜி.ஆர் பாடுவதை நிறுத்திவிட்டு வந்தான்… கையிலிருந்த மைக்கில் கத்தினான்.அவன் குரல் கொடூரமானதொரு காட்டெருமை குரலையொத்திருந்தது.

“அம்மாமாரே..அய்யாமாரே உசுர வச்சு வெளையாடுற ஆட்டம். ஜோரா கைதட்டுங்க…காசு போடுங்க.. ” இடதுகையிலிருந்த மைக்கில் பேசியபடியே வலது கையிலிருந்த ஒரு பெரிய கறுப்புநிற குடையை சைக்கிள்வித்தைக்காரனிடம் தூக்கிப்போட, அவன் சைக்கிளை ஓட்டியபடியே குடையை கேட்ச் பிடித்தான். சைக்கிள் ஹேண்டில்பரிலிருந்து கைகளை எடுத்து குடையை பிரித்தான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. கால்கள் தரையை தொடவில்லை. விரித்த குடையை தலைகீழாக பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி ,சுற்றி சைக்கிள் ஓட்டினான்.

சில பெண்கள் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நின்றபடி சில்லறைகாசுகளை தூக்கி குடைக்குள் வீசினார்கள். ஒரு வெள்ளைவேட்டிக்காரர் கயிற்றை தாண்டி சென்று கசங்கி போயிருந்த ஐந்துரூபாய் தாளொன்றை குடைக்குள் போட்டு திரும்பினார்.

இனி பாக்கபோறதுதான் ஜோரு..நெருப்பு வெளையாட்டு…மைக்கில் கத்திக்கொண்டிருந்தவன் சொல்ல கூட்டமே ஒருக்கணம் அமைதியானது. பெண்கள் திகைத்துபோய் சைக்கிள் வித்தைக்காரனை பார்தத்து. மைக்காரன் கூடாரத்துக்குள் சென்று ஒரு மண்ணெண்ணை கேனுடன் வந்தான். ஒரு கையில் சிறிய பந்தத்தை பற்ற வைத்து கேனை சைக்கிள் வித்தைக்காரனிடம் தர அவன் கேனிலிருந்து நாலைந்து மிடக்கு எண்ணெயை விழுங்கினான்.

பொன்ராஜும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். முன்னால் கூட்டத்தின் தலை மறைக்க உயரமான கல்லின் மேல் நானும் பொன்ராஜும் ஏறிக்கொண்டோம். சைக்கிள் வித்தைக்காரன் பந்தத்தை வாங்கி வலது கையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். குடையும்,சில்லறை காசுகளும் மைக்காரனிடம் இருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் வாயிலிருந்து எண்ணையை காற்றில் கொப்பளித்து துப்பி பந்தத்தால் தீமூட்ட பெரும் ஜூவாலையுடன் காற்றில் நெருப்பு பறந்தது. கொள்ளிவாய் பிசாசு திடலில் சைக்கிள் ஓட்டுவது போலிருந்தது. கூட்டம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஒரு கையாலா ஹேண்டில்பாரை பிடித்து ஓட்டியபடியே சுற்றி வந்துக் கொண்டிருந்தான். மெய்மறந்து நின்ற கூட்டத்திற்கு ஒரு கையால் டாட்டா காட்டியபடியே சைக்கிள் ஓட்டினான். மைக் பிடித்திருந்தவ்ன் துணிக்கூடாரத்துக்குள் சென்றான். லவுட்ஸ்பீக்கரில் டி.எம்.சவுந்தராஜன் பாடல்கள் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்தது. கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக களைய ஆரம்பித்தது. சைக்கிள் வித்தைக்காரன் இப்போது வேகத்தை குறைத்து சுற்றி வந்துக் கொண்டிருந்தான்.

இரவெல்லாம் தூங்காமல் சைக்கிள் ஓட்டுவான் என்று பக்கத்துதெரு பொன்ராஜ் சொன்னான். நேற்று இரவு விழித்திருந்து கவனிக்க முடியவில்லை. திண்ணையில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டே தூங்கிவிட காலையில் வாசலுக்கு சாணி தெளிக்க வந்த அம்மாவின் சலசலப்பில் விழித்து பார்த்தேன். அதிகாலை பனியிலும் சளைக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். தலையில் சிவப்பு நிற மப்ளரை சுற்றியிருந்தான். உடம்பில் போர்வை சுற்றியிருக்க குளிரிலும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். ஒருவேளை சைக்கிளை விட்டு இறங்கி துணிக்கூடாரத்துக்குள் சென்று உறங்கியிருப்பானோ?தெரியவில்லை.

இன்று இரவு எப்படியாவது உறங்காமல் பார்க்க வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து பள்ளிக்கூடம் வரும் பால்பாண்டி அவன் ஊரில் இதுபோல சைக்கிள் வித்தை நடந்தபோது விடிய விடிய தூங்காமல் இருந்து உறுதி செய்ததை சொன்னான். துருவி,துருவி கேட்டபோது கண் அசந்துவிட்டதாக சொன்னான். அவன் அப்பாதான் கண் விழித்து அவன் காலை இறக்காமல் சைக்கிள் ஓட்டுவதை கவனித்ததாக சொன்னான். எனக்கு அதைவிட சந்தேகம் பொன்ராஜ் சொன்னதுதான். தூங்காமல் இருக்கலாம். அது எப்படி ஒன்னுக்கு இருக்க கூட இறங்காமல் ஓட்ட முடியும்? யாராவது லேசாக கண் அசரும் சமயம் பார்த்து இறங்கிபோய் வந்துவிடுவானோ?

சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வந்தேன். திண்ணையிலிருந்து பார்த்தால் திடலில் சைக்கிள் ஓட்டுவது தெரியும். இரவு பழுத்து கிடந்தது. ட்யூப் லைட்டுகள் வெளிச்சம் கண்கூசியது. துணிக் கூடாரத்துக்குள்ளிருந்து மைக்செட்காரன் சாப்பிட்டு முடித்து வந்தான். அம்பலக்காரர் வீட்டு பெண் தட்டில் இட்லிகளை எடுத்து வந்து சைக்கிள் ஓட்டுகிறவனிடம் தந்து விட்டு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்

சைக்கிள் ஓட்டுகிறவன் திடலின் நடுமையத்திலிருந்த மூங்கில் கம்பை இடது கையால் இறுக்கமாக பிடித்தபடி சைக்கிளை பேலன்ஸ் செய்து நிறுத்தியிருந்தான். கால்களை பெடலிலிருந்து எடுக்கவில்லை. தட்டை ஹேண்டில் பார் மீது லாவகமாக வைத்து வலது கையால் இட்லியை தின்றுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்ததும் அம்பலக்காரர் வீட்டு பெண் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வர அதை குடிக்காமல் நன்றாக கொப்பளித்து துப்பிவிட்டு மீண்டும் சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். திடலின் ட்யூப் லைட் வெளிச்சம் என் கண்களுக்கு ஆயாசமாய் இருந்தது. திடலை சுற்றி, சுற்றி வரும் சைக்கிளை திண்ணையிலிருந்து பார்த்தபடியே இருந்தேன்.

கண்கள் வலிப்பது போலிருக்க லேசாக தலையணையில் சாய்ந்து படுத்தபடியே அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிடுவானோ என்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும். தெருவை ஒரு முறை பார்த்தேன். அநேகமாக எல்லாரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். அவன் சாவதானமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.

மைக்செட்காரன் கூடாரத்திலிருந்து வெளியே வந்து போர்வையையும், மப்ளரையும் தந்துவிட்டு செல்ல சைக்கிளை மிதித்தபடியே மப்ளரை தலையில் கட்டிக்கொண்டான். போர்வையை உடலில் சுற்றியபடியே சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். தெருநாய்களின் அரவம் கூட குறைந்து கிடந்தது. சுவர்கோழிகள் க்ரீச்..க்ரீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் என்னை பார்த்து லேசாக புன்னகைப்பது போலிருந்தது. அவன் கண்டிப்பாக ஒன்னுக்கு இருக்க இறங்கியாக வேண்டும். தெருவை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். தெருவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தவர்கள் நன்றாக குறட்டை விடும் சத்தம் கேட்டது. ஒருவேளை நான் கவனிப்பது தெரிந்து அவன் இறங்காமல் ஓட்டுவது போல நடிக்கிறானோ…?

சைக்கிள் முன்பு போல சீராக இல்லாமல் வளைந்து, வளைந்து சுற்றி வந்தது.சைக்கிள் வித்தைக்காரன் தடுமாறி, தடுமாறி ஒட்டுவது போல எனக்கு பட்டது. சைக்கிள் வித்தைக்காரன் மூங்கில் கம்பை பிடித்தபடியே சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட அவசர, அவசரமாக அவன் கால்களை பார்த்தேன். திண்ணையிலிருந்து நான் பரபரப்பாய் எழுவதை சைக்கிள் வித்தைக்காரன் கவனித்திருக்கவேண்டும். என்னை பார்த்து சிரித்தபடியே அவன் மீண்டும் சைக்கிளை ஒட்ட அரம்பித்தான். மெல்ல,மெல்ல நானும் அந்த சைக்கிள் வித்தைக்காரனின் ஆட்டத்தில் பங்கேற்பது போலிருந்தது.

ஒவ்வொரு முறை அவன் சைக்கிளை ஸ்லோ செய்யும்போதோ, தடுமாறும்போதோ நான் அவன் கால்களை உன்னிப்பாக கவனிப்பதும் பதிலுக்கு அவன் என்னை கேலியாக பார்த்தபடி மீண்டும் சைக்கிளை மிதிப்பதும் ஒரு முடிவற்ற ஆட்டம் போல இருந்தது

இரவின் அடர்ந்த கானகத்தினுள் தண்ணீர் அருந்தும் ஒரு மறிமான் போலவோ வழி தெரியாமல் மரத்தை சுற்றி,சுற்றி வரும் ஒரு மறிமான் குட்டி போலவோ அவன் இருந்தான். மரத்தடியில் உன்னிப்பாக எந்த நேரமும் அதை அடிக்க காத்திருக்கும் சிங்கத்தை போல விழிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். சைக்கிள்வித்தைக்காரன் வேகத்தை குறைக்கும்போதெல்லாம் தூக்க கலக்கத்திலிருக்கும் நான் பதறிப்போய் விழித்தெழும் போதெல்லாம் , என்னை கிண்டல் செய்வது போலிருந்தது அவன் பார்வை. அதுபோன்ற தருணங்களில் அவன் இன்னும் உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

ட்யூப்லைட் வெளிச்சம் கண்களை வலிக்க வைத்தது. மணியென்னவென்று தெரியவில்லை. இரவின் மடியில் தெரு கிறங்கி கிடந்தது. தூரத்தில் ஒற்றை கூட்ஸ் வண்டி ஓடும் சத்தம் இரவின் அமைதியை கிழிப்பது போலிருந்தது. பின்பனி இறங்குவது உணர முடிந்தது.அப்படியே உறங்கிப்போனேன். கண்விழிக்கும்போது அவன் வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கேலியாக பார்ப்பது போல இருந்தது. என்னை நினைக்க அவமானமாகயிருந்தது. எப்படி உறங்கினேன்? பாய், தலையணையை சுருட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது பால்பாண்டி கிண்டல் செய்தான். “நாந்தான் அப்பவே சொன்னேனில்ல… அவன் ஒன்னுக்கு கூட இருக்க இறங்க மாட்டான்”

“அது எப்படிடா முடியும்?”

“அவன் தண்ணி குடிக்கமாட்டான்டா. தண்ணி குடிக்காமா ஒருவாரம் கூட எங்க ஊர்ல சைக்கிள் சுத்தியிருக்கான்.” பால்பாண்டி சொன்னான்.

“அப்படியில்லடா. காலம்பறவே கிளம்பி கக்கூஸ் போயிட்டு வந்துடுவாண்டா” பொன்ராஜ் சொல்ல பால்பாண்டி அதை மறுத்தான்.

எனக்கு குழப்பம் அதிகமானது. இன்று மூன்றாவது நாள். கடைசி இரவு. பேசாமல் நாம இன்னைக்கு கண்முழிச்சு பாக்கலாமே பொன்ராஜ் சொன்னது சரியென்று பட்டது.“முதல்ல நீ தூங்கிடு…நான் கண்முழிக்கறேன். அப்புறம் நான் உன்னை எழுப்பி வுடறேன்..நீ கண்முழிச்சு பார்த்துக்கோ.. ” பொன்ராஜ் இரவு சாப்பிட்டுவிட்டு பாய்,தலையணையுடன் என்வீட்டு திண்ணைக்கு வந்துவிடுவான். இன்று எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம்.

தெரு முனையில் பாட்டு சத்தம் கேட்டது. “நான் செத்து பொழச்சுவண்டா..எமன பார்த்து சிரிச்சவண்டா….” வழக்கம்போல எம்.ஜி.ஆர் பாடல். அம்பலக்காரர் ஒரு செவ்வந்தி மாலையை சைக்கிள்வித்தைக்காரனுக்கு போட்டு, பத்து ரூபாய் தாளொன்றை அவன் சட்டைப்பையில் திணிப்பது இங்கிருந்து தெரிந்தது. லவுட்ஸ்பீக்கர் பாடல் நின்றது.

“அம்பலக்காரர் அய்யாவுத்தேவர் அன்பளிப்பு பத்துரூபாஏய்ய்ய்…” மைக்செட்காரன் மைக்கில் உற்சாகமாக கத்திக்கொண்டிருக்க, அய்யாவுத்தேவரின் இரண்டாவது பெண் அந்த மாலையுடன் சுற்றும் சைக்கிள்காரனை விட்டு வாசல்படியில் நின்று ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தது.

கடைசி நாள் களை கட்டியது. திடலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு சில்வர் குடத்தை வாயால் கவ்வியபடியே சைக்கிள்வித்தைக்காரன் சைக்கிளை மிதித்தான். கைதட்டல் விசில் காதை கிழித்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. திடலின் ட்யூப் லைட்டுகள் எரிய ஆரம்பித்தது. அவன் சைக்கிளின் முன் சக்கரத்தை மட்டும் உயர்த்தி பின்சக்கரத்தின் பேலன்ஸில இப்போது ஓட்டிக்கொண்டிருந்தான். சிறுவர்கள் கைதட்டினார்கள். திடலிலிருந்த கூட்டம் படிப்படியாக வடிய ஆரம்பிக்க அம்பலக்காரார் வீட்டிலிருந்து வழக்கம்போல இட்லித்தட்டு வந்தது. அம்பலக்காரரின் பெண் இட்லித்தட்டை சைக்கிள் வித்தைக்காரனிடம் கொடுத்துவிட்டு களுக்கென வெட்கத்துடன் சிரித்தபடியே வீட்டுக்குள் ஓடியது.

இரவு உணவை சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வெளியே வரும்பொது பொன்ராஜ் தலை தெரிந்தது. பொன்ராஜ் எனக்கு பக்கத்தில் திண்ணையில் பாய் தலையணையுடன் அமர்ந்தான். எங்கள் மூவரை தவிர மொத்த தெருவும் உறங்க ஆரம்பித்திருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் எங்களை பார்த்தபடியே சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தான். இன்று அவனை கண்காணிக்க இரண்டு ஆட்கள் இருக்கிறோம்.

சைக்கிள் வித்தைக்காரன் நேற்று போல சிநேகமாக என்னை பார்த்து சிரிக்கவில்லை. மெளனமாக ஓட்டிக்கொண்டிருந்தான். எனக்கு தூக்கம் வந்தது. பொன்ராஜுக்கு தூக்கம் வந்தால் என்னை எழுப்பிவிட்டு அவன் தூங்க வேண்டும். கண்களை இழுத்துக்கொண்டு சென்றது. எவ்வளவு நேரம் தூங்கினேன் தெரியவில்லை. எல்லாரும் திடலுக்குள் ஓடினார்கள். சலசலவென சத்தம்.

“இதோ இறங்கப் போகிறார்” மைக்செட்டில் அலறியது. வந்த கோபத்தில் பொன்ராஜை அடித்து எழுப்பினேன்.அவன் தூக்க கலக்கத்தில் பேந்த ,பேந்த விழித்தான். திடலுக்கு முன் குவிந்திருந்த கூட்டம் மறைத்தது. அருகே ஓடினேன். சைக்கிள் வித்தைக்காரன் ஒரு பறவை போல இரண்டு கைகளை விரித்தபடி சைக்கிளில் இருந்து குதிக்க மைசெட்காரன் தனியாக வந்த சைக்கிளை பிடித்துக் கொண்டான். சைக்கிள் வித்தைக்காரன் குதித்து, குதித்து திடலை வட்டமாக சுற்றி வந்தான். மூன்று இரவுகளாய் தரையில் படாத அவன் கால்கள் தரையை தொட தயங்குவது போலிருந்தது. இரண்டடிக்கு ஒரு முறை கால்களை தரையில் அழுந்த பதித்து நடனமாடியபடியேவும், அந்தரத்தில் பறப்பது போலவும் சுற்றி,சுற்றி ஓடி வந்துக்கொண்டிருந்தான். மக்கள் ரூபாய், நெல்,அரிசி என போட்டி போட்டப்படி தந்தார்கள்.

ஒரு நீர்ப்பறவையின் தரைப்பயணம் போல் தடுமாற்றமாய் ஆரம்பத்தில் சுற்றி,சுற்றி ஓடியவன் இப்போது சரளமாக கால்களை நிலத்தில் ஊன்றி ஓடிக்கொண்டிருந்தான். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை;இது ஊரறிந்த உண்மையென்று லவுட்ஸ்பீக்கர் அலறியது. சைக்கிள் வித்தைக்காரன் கூட்டத்தில் நின்ற என்னை பார்த்து சிரித்தான். பொன்ராஜ் என்னை பார்த்தான். கோட்டை விட்ட பொன்ராஜ் மீது கடுப்பாக இருந்தது.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது திடல் வெறிச்சோடி இருந்தது.மூங்கில் கம்புகள் நட்டிருந்த இடத்தில் மண் குழிகள் மட்டுமே இருந்தது.மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உயிர்ப்போடு இருந்த திடல் பார்க்க மயானம் போல தெரிந்தது. அந்த சைக்கிள் வித்தைக்காரன் எப்படி சிறுநீர் கூட கழிக்காமல் மூன்று நாட்களாக சைக்கிள் ஒட்டினான் என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போனதில் வருத்தமாயிருந்தது.

கடைசிப்பக்கம் கிழிந்துப்போன மாயாஜால கதையொன்றின் புதிர்த்தன்மையும்,ரகஸ்யங்களும் நிறைந்ததாய் இருந்தது அவனது வருகை யும் பொன்ராஜ் சொன்ன அந்த தகவலும். முக்கியமான அந்த தகவல் பின்னிருந்த ரகசியமொன்றை கண்டுபிடிக்காமல் போனதில் வருத்தமாக இருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஊரைவிட்டு சென்றிருந்த இரண்டாம் நாள் எனது மாமா வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன். அம்மாவுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அதிகாலை இருட்டில் இறங்கியபோது அவனை பார்த்தேன். அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதிகாலை இருட்டி ல் அந்த முகமும் உயரமும் தெளிவாகவே அடையாளம் தெரிந்தது. பேருந்து நிலையத்தின் வெளி வாயிலில் இடிந்திருந்த சுற்றுச்சுவர் அருகே குத்துக்காலிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். சிறுநீர் கழித்து முடித்தவன் பழுப்பேறிய அழுக்கு வேட்டியை கணுக்கால்கள் தெரிய மடித்துக்கட்டி வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுற்றி ஒருமுறை பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த பழைய துருபிடித்த அட்லஸ் சைக்கிளை காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, October 4, 2010

சாமுத்ரிகா - உயிரோசை சிறுகதை


இந்த வார உயிரோசையில் வெளியான எனது சாமுத்ரிகா என்ற சிறுகதை வாசிக்க...


காசி தியேட்டரில் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டேன். அவராக இருக்குமோ? என்ற கணநேர தயக்கம் கூட எழவில்லை. பத்துவருட இடைவெளியில் மாமாவின் உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. முன் நெற்றி மட்டும் சற்று ஏறி வழுக்கையைக் காட்டியது. முகத்தில் லேசான சுருக்கங்கள். அன்று பார்த்தது போலவே இன்றும் காதோரம் டை அடித்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது. காபி சாப்பிட்டபடியே ஸ்ரேயா ஸ்டில்களை ரசித்துக் கொண்டிருந்தார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவரை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததற்கு காரணம் அவரது சில்க் சட்டையோ, தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டியோ,கழுத்தில் சட்டை காலரில் அழுக்குப் படாமல் இருக்க கட்டியிருந்த கர்ச்சிப்போ இல்லை. தியேட்டரில் கண்ணாடிப் பெட்டியில் ‘கந்தசாமி’ பட எழுத்துகளுக்கு நாயகி ஸ்ரேயா நின்றிருந்த போஸ். அதை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மாமாவின் பார்வை. அவரால் மட்டுமே இப்படி உலகத்தில் இருபத்திநாலு மணிநேரமும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருக்க முடியும்.

ஸ்ரேயா ஸ்டில்களை மறைக்கும்படி அவருக்கு முன்னால் நின்று அவரைப் புன்சிரிப்போடு பார்த்தேன். ஸ்டில்களிலிருந்து கவனம் கலையப்பெற்றவராய், கிருஷ்ணமூர்த்தி மாமா என்னைக் குழப்பமாகப் பார்க்க நான் சிரித்தேன். என் கண்களை ஒருகணம் உற்றுப் பார்த்தார்.

"என்னைத் தெரியலையா மாமா? நான் பாஸ்கி. கும்பகோணம். சாரங்கபாணி கோயில்..."

"டேய்..திருட்டுப் பயலே..முட்டைக்கண்ணா... எப்படியிருக்கடா?"

சந்தோஷத்துடன் கத்தியபடியே வயிற்றில் குத்தியபடி கட்டிப்பிடிக்க, நாலைந்து பேர் எங்களைக் கவனித்துவிட்டு, பிறகு சமோசா சாப்பிடுவதைத் தொடர்ந்தார்கள். என் கைகளைப் பற்றி குலுக்கக் கையெல்லாம் மரிக்கொழுந்து வாசம் ஏறியது.எனக்கு சங்கோஜமாக இருந்தது. மாமா இப்படித்தான். எப்போது பேசினாலும் எட்டூருக்குக் கேட்கும் சத்தத்தில் பேசுவார். வலது காலைத் தரையில் ஊன்றியபடி, இடது காலைப் பின்னாலிருந்த தூணில் சாய்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இருவரும் காபி சாப்பிட்டபடியே பரஸ்பரம் விசாரிப்புகள், நிறைய நினைவூட்டல்கள். பரஸ்பரம் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். பேச்சினூடே அவரது கண்கள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடிப் பெட்டியிலிருந்த ஸ்ரேயா ஸ்டில்கள் மீது அடிக்கடி சென்று வருவதைப் பார்க்க முடிந்தது.

மாமா சிரித்தபடியே, "செமையா இருக்காடா.இடுப்பா அது? பவர் ஸ்டியரிங் போல லட்சணமா இருக்கு.சாமுத்ரிகா லட்சணப்படி" என்றார்.

"என்ன மாமா..இன்னும் உங்க ஆராய்ச்சி முடியலையா? " சிரித்தபடியே கேட்டேன்.

தியேட்டரில் காலைக்காட்சிக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெளியே மழை நசநசவென பெய்துகொண்டிருந்தது. தியேட்டர் மாடியிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கச் சாலையில் மழைத்துளிகள் இறங்குவது தெரிந்தது. சாலையில் சில மனிதர்கள் விரித்த குடைகளைப் பிடித்தபடி சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் முகம்,உடல் தெரியவில்லை. சாலையில் குடைகள் நகர்ந்து செல்வது பெரிய சைஸ் ஆமை ஓடுகள் நகர்ந்து செல்வது போல இருந்தது. காலையிலிருந்து விடாமல் தூறிக்கொண்டிருக்கும் மழையின் காரணமாக இன்றைய தினம் மகா சோம்பலுமாய், அலுப்புமாய் இருந்தது. அலுவலகம் செல்லவில்லை. ரூமில் தனியாக இருப்பது போரடிக்க, பக்கத்திலிருந்த தியேட்டரில் காலைக்காட்சிக்கு கிளம்பி வந்து விட்டேன். சினிமா இடைவெளியில் வெளியில் வந்த என் கண்களில் கிருஷ்ணமூர்த்தி மாமா தெரிந்தார். தியேட்டரில் இடைவேளை பெல் ஒலிக்க, உள்ளே நுழைந்தோம். எனது இருக்கை பி-3. மாமா டி-5ல் அமர்ந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் இல்லாததால் நிறைய சீட்கள் காலியாகவே இருந்தன. நான் மாமா பக்கத்து சீட் காலியாகவே இருந்தது. அவரது சீட் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.

"இன்னுமா கல்யாணம் பண்ணாம இருக்கே?" மாமா என்னைப் பார்த்துக் கேட்டார்.

"வீட்டுல பார்த்திக்கிட்டு இருக்காங்க மாமா. திருச்சியிலருந்து நேற்றுக்கூட ஒரு வரன் வந்துச்சு. முடிஞ்சுடுமுனு நினைக்கிறேன்" சொன்னேன்.

"சென்னைல எங்க மாமா இருக்கறீங்க?"

"போரூர்" என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மாமா அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஸ்ரேயா அபாயகரமாய் ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருக்க, மாமா வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது தியேட்டர் இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த சென்னை நகரம் விசித்திரமானது. ஒரே ஊரிலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளோம். இதே சென்னையில் நானும் மாமாவும் பத்து வருடங்களாக வசித்து வருகிறோம். இதுவரை ஒருவர் கண்ணில் ஒருவர் தென்பட்டதில்லை. இவ்வளவுக்கும் போரூருக்கும், ஜாபர்கான்பேட்டைக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நிகழும் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

திரையில் விக்ரம் பத்துப் பதினைந்து ஆட்களை சேவல் வேடம் போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்.மாமா அசுவாரசியமாக கொட்டாவி விட்டார். ஸ்ரேயா வந்த காட்சிகளில் இருந்த மலர்ச்சி முகத்தில் இல்லை. பெண்களைப் பற்றியும், அந்த மாதிரி சப்ஜெக்ட்டிலும் மாமாவுக்கு பி.எச்.டி. பட்டம் கொடுக்கலாம்.அந்தளவுக்கு அவருக்கு விஷயம் தெரியும். அந்தக் காலத்தில் அரண்மனைகளில் பெரிய,பெரிய ஓவியர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று கதைகளில் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் பெண்ணின் தலைமுடியையோ,நகத்தையோ வைத்தே அவளது முழு உருவத்தை வரையும் ஆற்றல் கொண்டவர்கள் என்றும் படித்திருப்பீர்கள். காலப்போக்கில் அந்த ஆற்றலுடைய ஓவியர்கள் படிப்படியாக மறைந்து அதுபோன்றதொரு கலை முற்றிலும் அழிந்திருக்கலாம். ஆனால் மாமாவைப் பார்க்கும் போதெல்லாம் அது முற்றிலும் அழியவில்லை என்றே நினைக்கத்தோன்றும். மாமாவை வுமனைசர் என்று சொல்ல முடியாது. ஆனால் பெண்களின் சகலமும் அவருக்கு அத்துபடி. சாமுத்ரிகா லட்சணம் என்ற கலையை கரைத்துக் குடித்தவர் மாமா. ஒரு பெண்ணின் முகத்தையோ,முகத்தில் இருக்கும் மூக்கையோ, நெற்றிமேட்டையோ, கன்னத்தில் விழும் குழியையோ அவ்வளவு ஏன் அவள் நடையையோ, கால் கட்டைவிரலை வைத்தோ கூட அவள் முழு ஜாதகத்தையும் சொல்லிவிடுவார். உச்சபட்ச ஆச்சர்யமாக அந்தப் பெண்ணின் பெயரையோ கூட சொல்லி விடுவார். நம்புங்கள். உண்மை. பெரும்பாலும் அது சரியாகவே பொருந்தும்.

எனது பள்ளி நண்பர்களுடன் தேநீர்க்கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். மாமா சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வருவார். ஒரு ‘டீ சொல்லுடா’ என்று என்னை அதட்டிவிட்டு பெஞ்சில் அமர்வார். தேநீர் அருந்திக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு பெண் தேநீர்க்கடையை கடந்து செல்வாள். அவள் முகம் கூட பார்த்திருக்கமாட்டார். அப்படி எதைத்தான் பார்த்துச் சொல்வாரோ? அவள் பெயர் மலரில் ஆரம்பிக்கும். அநேகமாக அவள் வீட்டிற்குப் கடைசிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்வார். விசாரித்தால் அந்தப் பெண் பெயர் மல்லிகாவாக இருக்கும். சொன்னது போலவே அந்தப் பெண் வீட்டிற்கு கடைசிப்பெண்ணாக இருப்பாள். குத்துமதிப்பாக அடித்து விடுகிறாரோ என்று கூட ஆச்சர்யமாக இருக்கும். பெண்களை எப்படிக் கவர்வது என்று டிப்ஸ் தருவார். என்னடா நாற்பது வயதில் இப்படி பள்ளிக்கூட பசங்களிடம் போய் சகவாசம் வைத்துக் கொள்கிறோமே. அதுவும் அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பேசுகிறோமே என்று துளிக்கூட மாமாவிடம் அசூயை இருந்ததில்லை.

"காமசூத்ராவில் இருக்கும் கஷ்டமான போஸ் எது தெரியுமா?" எங்களைப் பார்த்துக் கேட்பார்

"இது என்ன குவிஸ் புரோகிராம் மாதிரி கேட்கிறார்?" எனக்குக் கடுப்பாக வரும். ஆனாலும் அது என்ன போஸ் என்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஆசை இருக்கும். மாமா எங்களை அற்பமாகப் பார்த்து சிரித்தபடியே விளக்க ஆரம்பிப்பார். டீக்கடை வைத்திருக்கும் மாணிக்கம் திட்டுவார்.

"ஏலே அறிவிருக்கா? சின்னப் பசங்கட்ட பேசுற பேச்சா?" கத்துவார்.

"போடா அறிவுகெட்டவனே.இதைவிட உலகத்துல உருப்படியான விஷயம் என்ன இருக்கு? ஏதோ நமக்குத் தெரிஞ்ச அனுபவத்தை சொல்லித்தரோம். பின்னால இவனுங்களுக்கு உதவுமில்லை."

டீக்கடை மாணிக்கத்தைப் பார்த்து மாமா சொல்வார்.

"நீ வூட்டுல உன் பொண்டாட்டிகிட்ட செய்யாததையா நான் சொல்லித் தரேன். மாமா கேட்க, ஏண்டா இவரிடம் வாயைக்கொடுத்தோம் என்றிருக்கும் டீக்கடை மாணிக்கத்துக்கு.

சபை கலையும் நேரத்தில் மாமா டீக்கடைப் பக்கத்தில் இருக்கும் பூக்கடையில் குண்டுமல்லி ஒரு முழம் வாங்கிக் கொள்வார். டீக்கடையில் காராசேவு பொட்டலமும் வாங்கிக் கொள்வார். உற்சாகமாக சைக்கிளை மிதித்தபடி வீட்டுக்குச் செல்வார். மாமா தலை மறைந்ததும் டீக்கடை மாணிக்கம் எங்களைப் பார்த்து ஒரு மாதிரி சிரிப்பார். "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்" என்று சொல்லிவிட்டு விஷமத்தோடு சிரிப்பார். டீக்கடை மாணிக்கம் சொல்வதன் அர்த்தம் வெகுநாள் வரை எனக்குப் புரியவேயில்லை. ஏதோ அறுக்க..ஆயிரத்தெட்டு என்று ரைமிங்காகச் சொல்வது மட்டுமே சுவாரசியமாக இருக்கும். அடுத்த நாள் மாலை மீண்டும் டீக்கடையில் சபை கூடும். மாமா கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் முதல் நாள் அவர் வீட்டில் நடந்த விஷயங்களைச் சொல்வார். எல்லாமே பச்சை,பச்சையாக இருக்கும். டீக்கடை மாணிக்கம் தலையில் அடித்துக்கொள்வான். நாளடைவில் எனது பள்ளிக்கூட நண்பர்கள் மாமாவை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். மாமா தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நாளுக்கு,நாளுக்கு விரிவடைந்து கொண்டே போனது.

படம் முடிந்து வெளியே வந்தோம். வெளியே மழைத் தூறலாக பெய்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் இரண்டு பக்கமும் தண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. காசி தியேட்டர் எதிரே இருந்த சிக்னல் மந்தமாய் இயங்கியது. ஓரிரு டூவீலர் ஓட்டுநர்கள் மட்டுமே மழையில் நனைந்து சென்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் டூவீலர்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகளின் முன் ஒதுங்கியிருந்தார்கள். சிலர் சாலையோரத் தேநீர்கடைகளில் நின்று டீக்குடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு சாரலுக்கு இதமாக தம்மடிக்க வேண்டும் போல இருந்தது. மிதமாய் பசியெடுத்தது. மாமா ஏதாவது சாப்பிட்டுப் போகலாமென்று சொன்னார். திரையரங்கு பக்கத்திலேயே சரவணபவன் இருந்தது. நுழைந்தோம். மாமா அவருக்கு மசால் தோசை ஆர்டர் சொல்ல, நான் புரோட்டா சொன்னேன். ஹோட்டலில் ஆட்கள் மந்தமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மழை வந்தால் மனிதர்கள் ஏன் சற்று மந்தமாய் மாறுகிறார்கள் என்று யோசித்தேன். இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் தேர்ச்சக்கரம் சற்று வேகம் குறைந்திருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது.

எங்கள் எதிரே நாலு டேபிள்கள் தள்ளி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் தலைமுடி காற்றில் அலை அலையாக பறந்து கொண்டிருந்தது. முடியை மிக நேர்த்தியாக, அதிக சிரத்தையுடன் ஸ்ட்ரெயிட் பண்ணியிருப்பாள் என்று தோன்றியது.அவள் நிமிடத்திற்குப் பத்து முறை நெற்றியில் விழும் தலைமுடியை இடது கையால் ஒதுக்கிவிடுவது பார்க்க அழகாக இருந்தது. அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு பெண் அவளது தோழியாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். அவளும் அழகாக இருந்தாள். இரண்டு பேரில் யார் பேரழகி என்று போட்டியே வைக்கலாம். மாமா இரண்டு பேரையுமே ரசித்துக்கொண்டிருந்தார்

மாமா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கோரை முடி குடி கெடுக்கும். சுருட்டை முடி வாழவைக்கும். கூடவே சங்கு மாதிரி கழுத்திருக்கும் பெண்களைக் கல்யாணம் செய்தால் யோகம் அடிக்கும் என்பார். நீளமான மூக்கிருந்தால் செல்வம் நிறைய இருக்கும் என்பார். எனக்குக் குழப்பமாக இருக்கும்.எங்கள் தெரு முனையில் சதா சர்வநேரமும் ‘பசிக்குது...பசிக்குது’ என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் மூக்கு கூட நீளமாக இருப்பதாக பட்டது. ஒருநாள் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு என்ன தோன்றியதோ அன்றிலிருந்து என்னிடம் பிச்சை கூட கேட்பதில்லை.

நான் கல்லூரி சேர்ந்திருந்தபோது மாமா முன்பை விட மோசமானவராக மாறியிருந்தார். எப்போது பார்த்தாலும் செக்ஸ் ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள். அத்தை வீட்டில் இல்லாதபோது பீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு என்னையும், என் நண்பர்களையும் வீட்டுக்கு அழைப்பார். மொட்டை மாடியில் அவருடன் பீர் அடித்தபடி ஊர்க்கதைகள் பேசுவோம். பலான படம் பார்க்கச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி திரும்பிய பி.டி வாத்தியாரைப் பற்றி சிரிக்க, சிரிக்க, பேசுவோம். எங்கள் ஸ்கூல் பிசிக்ஸ் வாத்தியார் தன்னிடம் டியூசன் படிக்க வந்த பெண்ணை தஞ்சாவூர் அழைத்துச் சென்று சினிமா பார்த்து திரும்பியது. எல்லாரும் சிரிக்க, சிரிக்க மற்றவர்கள் அந்தரங்களை வம்புக்கிழுத்து ரசித்துக் கொண்டிருப்போம். பேச்சின் இறுதியில் எப்படியாவது அவரது ஆராய்ச்சியைக் கொண்டுவந்துவிடுவார். மாமா எங்களிடம் சமர்ப்பிக்கும் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகளும், நுண்மையான தகவல்களும் பெருகி கொண்டே சென்றது. மூக்கு நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலியாக இருப்பார்கள் என்பார். எலி மூக்கு போல லேசாகத் தூக்கி இருந்தால் "அந்த" விசயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என்பார். என் நண்பர்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்பார்கள்.

"சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா கால் சுண்டு வெரலு தரையில படணும். தரையில படாம தூக்கிட்டு நின்னா அவ குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டா. அப்புறம் கால் கட்டைவெரலு வளைஞ்சிருந்தா அவளுக்கு ரெண்டு புருஷன் இருப்பாங்க..." மாமா சொல்வதை என் நண்பர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"காலு இல்லாத பொண்ணுங்கள பத்தி உங்க சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதாம்?" நான் கிண்டலாய்க் கேட்பேன்.மாமாவுக்கு சுள்ளென்று கோபம் வரும்.

"நீ சின்ன பையன்டா. மீசை கூட மொளைக்கலை. இதெல்லாம் ஆயிரம் ஆயிரம் வருசமா அனுபவித்து எழுதுனது. உனக்குப் புரியாதுடா.நீ இப்பதான் பால்குடியை மறந்திருப்பே." மாமா சிரித்தபடியே சொல்வார். நண்பர்களும் ஆரவாரமாக மாமாவுடன் சேர்ந்துகொண்டு சிரிப்பார்கள்.

மாமாவுக்கு எப்படிப் பேசி எதிராளியை அடித்து வீழ்த்துவது என்பது நன்றாகவே தெரியும். மீசை முளைக்காத முகத்தைக் கிண்டல் செய்தால் அதன் மூலம் என் சுயத்தைக் காயப்படுத்தி என்னைத் தோற்கடித்துவிடலாம் என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய மற்ற நண்பர்கள் மாமாவுடன் சேர்ந்துக்கொண்டு சிரிப்பதன் காரணம் அவர்கள் மீசை முளைக்காத லிஸ்ட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டேயாக வேண்டும் என்ற வேட்கையில் இருந்திருக்கலாம். மாமாவின் கட்சியில் சேர்ந்து அதன் மூலம் தாங்களும் பெண்கள் குறித்த அனைத்து விஷய ஞானங்களும் நிரம்பியவர்கள் என்று காட்ட விரும்பியிருக்கலாம். எனக்கு எரிச்சலாக வரும். மாமாவை ஒருமுறை கூட என்னால் பேசி ஜெயிக்க முடிந்ததில்லை. "இந்த ஆராய்ச்சியெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். எவனோ பைத்தியக்காரன் அந்தக் காலத்துல எழுதியிருக்கணும். இதை எழுதினவன் நிச்சயம் செக்சுவல் பெர்வெர்ட்டாகதான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் மனதின் இன்னொரு மூலை ரகசியமாக மாமா சொன்னதை ரசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டும். குறிப்பாகத் தனிமையில் இருக்கும்போது பெண்களைப் பற்றி மனதில் கிளர்ச்சி எழும்போது அவர் சொன்ன அனுபவங்களும், கதைகளும் மண்டைக்குள் இடைவிடாது மோதிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு காலில் நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒட்டியிருந்தால் பணம் கொட்டுமென்பார் மாமா. இப்போதும் நகரப் பேருந்திகளிலோ, சினிமா தியேட்டர்களிலோ, சாலை நடைபாதைகளிலோ நடந்துபோகும் பெண்களை எல்லாம் பார்க்கும்போதும் அவர்களது கால் பக்கம் என் கண்கள் ரகசியமாக செல்லும். நாளடைவில் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரது பேச்சை எதிர்க்கவேண்டும் என்று ஏனோ நான் விரும்புகிறேன். அவர் இல்லாத நேரங்களில் அவர் சொன்ன வித்தைகளையும், ஆராய்ச்சிகளையும் பற்றியுமே அதிக நேரம் நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை.

மாமாவைப் பார்த்தேன். மாமா உற்சாகமாய் காபியை டம்ளருக்கும், டபராவுக்குமாய் மாற்றிக் கொண்டிருந்தார். எதிரே சாலையில் சிக்னலுக்குக் காத்திருந்த ஏஸி.பஸ்ஸை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மழைத்துளிகள் பேருந்தின் மீதிருந்து வழிந்து கொண்டிருந்தன. மழைக்காலத்திலும் ஏ.ஸி பஸ்களில் பயணம் செய்கிறவர்களைப் பார்க்க வினோதமாக இருந்தது. மாமா என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். அவர் பார்வை என்னிடம் "அந்த இரண்டு பெண்களைப் பார்த்தியா? அவர்களது ஜாதகமே என் கையில்." என்பது போல இருந்தது. அந்த பெண்களைப் பற்றி இப்போது எதையாவது அளந்துவிட போகின்றார் என்று பட்டது. நான் மறுத்துப் பேசினால் அவர் ஏடாகூடமாக ஏதாவது சொல்லுவார். அல்லது என்னை கிண்டல் செய்து என் வாயை எப்படியும் அடைத்துவிடுவார். மாமா எதிர்ப்புறம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீன்ஸ் போட்ட பெண்ணை விழுங்கி விடுவது போல பார்த்தபடியே காபி குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் முடியை சுருள்,சுருளாக கர்லிங் செய்திருந்தாள். எனக்குச் சிரிப்பாக வந்தது. "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்." டீக்கடைக்காரன் சொல்லும் வாக்கியம் நினைவுக்கு வந்தது. மாமாவைப் பார்த்தேன்.

நான் தஞ்சாவூர் கல்லூரியில் படிக்கும் போதுதான் அது நடந்தது. நன்றாக நினைவுள்ளது. கடைசி செமஸ்டருக்காகத் தஞ்சாவூரிலேயே ரூம் எடுத்து கல்லூரி நண்பர்களோடு தங்கிவிட்டேன். எப்போதாவது மட்டுமே கும்பகோணம் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை கும்பகோணம் சென்றபொழுது ஊரிலிருந்த பள்ளி நண்பர்கள்தான் அந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். விஜயலட்சுமி அத்தை யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று சொன்னார்கள். என்னால் நம்பமுடியவில்லை. டீக்கடை மாணிக்கம் என்னைப் பார்த்து அதே விஷமத்தோடு சிரித்தார். மாமாவை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. அவர் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஊருக்குள் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பற்றி எல்லாரும் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். எனது மனதில் மாமாவின் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் மங்கலாகத் தொடங்கியது. தஞ்சாவூருக்கு மீண்டும் கிளம்பி வந்துவிட்டேன். இறுதியாண்டு அரியர்ஸ்களை க்ளியர் செய்யும் முயற்சியில் மூழ்கியிருந்தேன். நான் கல்லூரி முடித்துப் பட்டமேற்படிப்புக்கு சென்னை வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து காலம் உருண்டோட இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் இதோ காசி தியேட்டரில் சந்தித்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

"கோரை முடி தரித்திரம்டா.. சுருள் முடிதான் அதிர்ஷ்டமுனு சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது." நான் எதிர்பார்த்தது போலவே மாமா என்னிடம் சொன்னார்.

"என்ன மாமா..இன்னும் அடிச்சு வுடுற பழக்கம் போகலையா" கிண்டலுடன் கேட்டேன்.

"அடப் பயலே என் அனுபவம் உன் வயசுடா. சுருள்முடி பத்தி சாமுத்திரிகா லட்சணத்துல என்ன சொல்றாங்க தெரியுமா?" சொல்லிவிட்டு மாமா காபியை உறிஞ்சினார். மாமாவுக்கு எப்படி பதிலடி தருவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றும் சின்னப் பயல் இல்லை. மனதின் ஒரு மூலை என்னை வேகமாகப் பதில் தர தூண்டியது. சுள்ளென்று சூடாக அந்தப் பதில் இருக்க வேண்டும். அனிச்சையாக என்னை மீறி என் வாயிலிருந்து வந்த கேள்வியைக் கேட்டேன்.

"எதுனாச்சும் அடிச்சு வுடாதீங்க மாமா. சுருள்முடி இருக்கறவங்க எல்லாம் குடும்பப் பொண்ணுங்களா?" நான் முடிக்கவில்லை.

சட்டென மாமா முகம் மாறியது. அவரது முகம் ஒருகணம் இருண்டது போல தெரிந்தது. அதுவரை அவர் முகத்திலிருந்த மலர்ச்சி சட்டென மறைந்து இறுக்கமாக அவர் என்னைப் பார்த்தது போல தோன்றியது. கடுப்பில் நான் சற்று குரலை உயர்த்திப் பேசியது கிட்டத்தட்ட கத்தியது போல உணர்ந்தேன். பார்சல் கட்டிக்கொண்டிருந்த இரண்டொரு சர்வர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பில்லைக் கொடுத்துவிட்டு அமைதியாக என்னுடன் வெளியே வந்தவர் காசி தியேட்டர் பஸ் நிறுத்தம் வரும்வரை எதுவும் பேசவில்லை. பஸ் வந்தவுடன், "பார்க்கலாம் மாப்பிள்ளை" என்று என் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு பஸ்சில் ஏறினார். தவறாக ஏதாவது சொல்லி விட்டேனா? குழப்பமாக இருந்தது. ஒருகணம் டீக்கடை மாணிக்கம் முகம் நினைவுக்கு வந்தது. விஜயலட்சுமி அத்தையை இழுத்துக் கொண்டு ஓடின சைக்கிள் கடைக்காரன் முகம் மங்கலாக வந்து மறைந்தது. குறிப்பாக, விஜயலட்சுமி அத்தையின் நெற்றியில் விழும் அந்த அழகான சுருள்முடிகள் வந்துப் போனது.


நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, September 26, 2010

பரத்தை கூற்று
















சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தலித் பிரச்சினை பற்றி அந்த வலியை அனுபவித்த ஒரு உண்மையான தலித்தால் மட்டுமே அதை துல்லியமாக எழுத முடியுமென்றார். பெண்களின் வலியை பற்றி பெண் கவிஞர்கள் எழுதும்போது இருக்கும் வலியும்,வீர்யமும்,உக்கிரமும் ஆண் கவிஞர்கள் எழுதும்போது இருப்பதில்லையென்றார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை.

காமத்தை பற்றிய நவீனக்கால எழுத்துகளில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ்,வா.மு.கோமு போன்றோரும் (சிறுகதைகள், நாவல்கள்) கவிதைகளில் கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், மகுடேஸ்வரன் போன்ற சில ஆண் படைப்பாளிகள் மட்டுமே ஆங்காங்கு சில பாய்ச்சல்களை காட்டியுள்ளார்கள்.

குறிப்பாக பரத்தையர் உலகம் பற்றியும் அவர்களது அக உலகின் சிக்கல்களையும் பற்றி மிகச்சில ஆண் எழுத்தாளர்களே எழுதியுள்ளார்கள். பரத்தையர் என்ற சங்ககால சொல் வேசி, விபச்சாரி என்றெல்லாம் மாறி இறுதியில் பாலியல் தொழிலாளி என்று இன்று உருமாறியுள்ளது.

தமிழில் அருவி என்றொரு சொல் உள்ளது. ஆங்கிலத்தில் இருந்த Watter Falls என்ற சொல்லை நீர்வீழ்ச்சி என்று தமிழ் படுத்தியது போல, Sex Worker என்ற சொல்லை பாலியல் தொழிலாளி என்று பொது வழக்கில் கொண்டுவந்துள்ளோம். பரத்தை என்ற சொல் இருந்தபோது அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தனவோ, அவையே வேசி என்னும் சொல் இருந்தபோதும் இருந்தன. விபச்சாரி என்ற சொல் இருந்தபோதும் இருந்தன. பாலியல் தொழிலாளி என்ற சொல் இருந்தபோதும் இருக்கின்றன. அன்று இன்று எல்லாக் காலங்களிலும் பெண்கள் ஒரு பண்டமாகவே பார்க்கப் படுகின்றார்கள். வீட்டில் வளர்க்கும் ஒரு பசுமாட்டை பார்க்கும் அதே அணுகுமுறையில்தான் பெண்களும் பார்க்கப் படுகிறார்கள்.அதிலும் குறிப்பாக பாலியல் தொழிலாளிகளது வாழ்க்கை இன்னும் கொடுமை. அது மேட்டுக்குடி பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் (Female Escort) சரி. லாரிகளை மறிக்கும் சாலையோர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி. அவரவர்கள் மட்டத்தில் அவரவர்களது பொருளாதார அளவுகளில் சுரண்டப்படுகிறார்கள். சுரண்டல் என்பது பணம் என்ற அளவீட்டில் மட்டும் அர்த்தம் கொள்ளகூடாது. போலீஸ் தொந்தரவு-கெடுபிடி.சக மனிதர்களது ஏளனப் பார்வை,இழிச்சொல் எல்லாம்...சரவணகார்த்திகேயனின் "பரத்தையர் கூற்று" என்ற கவிதைத்தொகுப்பை வாசித்தேன். பல இடங்களில் அந்த வலியை உணர முடிகின்றது.

இத்தொகுப்பில் வரும் பரத்தையர்கள் கோபப்படுகிறார்கள். சமூகத்தை பார்த்து திட்டுகிறார்கள். சலித்துக்கொள்கிறார்கள். சில இடங்களில் கிண்டல் செய்கிறார்கள்.இடங்களில் பெருமைப்படுகிறார்கள். அதே பெருமையை களைந்துவிட்டு அழுகிறார்கள். சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். வரிசையாக இருக்கும் கவிதைகளில் இவையெல்லா உணர்ச்சிகளையும் மாறி,மாறி தருகிறார்கள்.

தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதை...

ஓரிரவில் பதினோரு பேர்
இது எனது ரெக்கார்ட்-ம்!
அதெல்லாம் அந்தக்காலம்.

இந்த வலியை சொல்லும் பெண் ஒரு மூதாட்டியாக இருக்கலாம். அல்லது நோயுற்று மெலிந்து மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு நடுத்தர வயது பெண்ணாக இருக்கலாம். அவளை பற்றிய சித்திரம் மனதில் ஓடுகிறது.அதைவிட அந்த சித்திரம் ஏற்படுத்தும் வலி அதிக அதிர்வுகளை தருகின்றது.

கண்களும் காம்புகளும்
பெரிதாயிருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாயிருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை இது.

பரத்தையர் பற்றிய பார்வையில் கவிஞரின் சில கவிதைகளில் முரண்பாடுகள் தெரிகின்றன. தொகுப்பின் முதல் கவிதை இப்படி இருக்கிறது.

சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுப்பது

அடுத்த பக்கத்திலேயே இன்னொரு கவிதை இப்படி சொல்கிறது.

என்ன இருந்தாலும்
எம் மகளிரைப் போல்
ஆண்களை உறவுக்கு
அழைக்கும் மறுக்கும்
உரிமையில்லையுன்
இல்லக்கற்பரசிகட்கு.

இந்த கவிதை பரத்தையர்க்கு புணர மறுக்கும் சுதந்திரம் இருப்பதாக சொல்கிறது.

சிறிசு பெருசு கருப்பு சிவப்பு
ஒல்லி தடிமன் கூர்மை மொக்கை
வகைவகையாக் குறிகளை
உள்வாங்கிக் களைக்கிறெதென்
திருயோனி பெருஞ்சரிதம்

சரவண கார்த்திகேயனின் இந்த கவிதை 'எல்லா அறிதல்களோடும் விரிகிறெதென் யோனி ' என்னும் சல்மாவின் வரிகளை நினைவூட்டுகிறது.

படிமங்களின் சுமையோ, இருண்மையோ இன்றி மிக எதார்த்தமாக இருக்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.பின்னட்டையில் பொன்.வாசுதேவன் சொல்லியிருப்பது போல,வடிவம் சார்ந்த அணுகுதல்களுக்க்கப்பாற்பட்டு, மரபு வடிவ கவிதைகளாகவோ வெறும் துணுக்குகளாகவோ இல்லாமல் இக்கவிதைகளின் உன்னதக் கேள்விகள் முக்கியமானவையாகப் படுகிறது.

பரத்தை கூற்று (கவிதைகள்)
சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-

Monday, September 20, 2010

பலூன்கள்


உயிரோசை இணைய இதழில் வெளியான எனது பலூன்கள் எ‌ன்ற சிறுகதை...








காட்சி-1
————–

ஏறுவெயில் லேசாகச் சுட கட்டுமரமொன்றின் மறைவில் அமர்ந்தபடி கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரே கடலலைகள் இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. வெயில் சுள்ளென்று அடிக்க, மேலே பார்த்தேன். சில தட்டான்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. அடிக்கும் இந்த வெயிலுக்கு சாயங்காலம் மழை பெய்யலாம். கடற்கரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சற்றுத்தள்ளி இன்னொரு கட்டுமரம் அருகில் இளம் காதல்ஜோடி ஒன்று உலகத்தை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார். இடதுபக்கம் பார்த்தேன். தூரத்தில் ஒரு புள்ளி மெதுவாக வந்துகொண்டிருந்தது. ஒரு சில மூடிக்கிடந்த தள்ளுவண்டி கடைகள் மீது கட்டியிருந்த நீல நிற படுதாக்கள் காற்றில் பறந்துகொண்டிருந்தது. புள்ளி அருகே வந்தது. புள்ளியிலிருந்து புறப்பட்ட உருவத்தில் ஒரு பெரியவர் தெரிந்தார் . நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார். வயது எழுபது இருக்கலாம். வெள்ளை வேட்டியா, காவி வேட்டியா என்று தெரியவில்லை. ஒருவேளை வெள்ளையாக இருந்த வேட்டி அழுக்கேறி காவி நிறமாக மாறியிருக்கலாம். சட்டை கொஞ்சம் தொள தொளவென்றிருந்தது. தூரத்தில் நின்றபடியே கடலைப் பார்த்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரேயொரு காலி தள்ளுவண்டி நின்றிருந்தது. பெரியவருக்கு சற்று தள்ளி பலூன் சுடும் கடை இருந்தது. சற்று முன் அந்தக் கடையைத் தாண்டி நான் வரும்போது அவன் ஏதோ ஒரு பாக்கெட் நாவல் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பலூன் கடைக்காரன் இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி இன்னமும் அதே நாவலைத்தான் சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருந்தான். பெரியவர் அந்தக் கடையை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிந்தது. பலூன் சுடும் அந்தக் கடை முன்னால் தயக்கத்துடன் நின்றார். கடைக்காரன் படிப்பதை நிறுத்திவிட்டு தலையைத் தூக்கி அவரை ஆச்சர்யமாகப் பார்ப்பது தெரிந்தது. கடைக்காரனிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.இந்த தூரத்திலிருந்து பேச்சுக்குரல் கேட்காது. எனக்கு ஏதோ சுவாரசியமாகப் பட அந்த பெரியவரையும் பலூன் சுடுபவனையும் பார்க்க ஆரம்பித்தேன்.

பெரியவர் முன்னால் ஒரு மரத்தட்டியில் பச்சை,நீலம், சிவப்பு மஞ்சள் என்று விதம்விதமாய் ஊதப்பட்ட பலூன்கள் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தன. பலூன்கள் கடல் காற்றில் படபடப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அவன் அமர்ந்திருந்த இரும்பு ஸ்டூல் பக்கத்தில் கீழே சில அட்டைப்பெட்டிகள் கிடந்தன. ஒரு எவர்சில்வர் தூக்குவாளி வெயில் பட்டு கடற்கரையெங்கும் மின்னியது. பெரியவர் பலூன்களைக் கையால் சுட்டிக்காட்டி ஏதோ கேட்பது போல தெரிந்தது. கடைக்காரன் சிரித்தபடியே ஏதோ சொன்னான். பெரியவர் அந்த நீண்ட மரத்துப்பாக்கியையும், ஈயக்குண்டுகளிருந்த பெட்டியையும் பார்த்துக் கடைக்காரனிடம் கேட்டார். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. திடீரென அந்தப் பெரியவர் ஒருமுறை கடற்கரையை சுற்றி நோட்டம் விட்டார். அவர் பார்வை எல்லைகள் வரை யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் நின்றிருக்கும் இடத்திலிருந்து காதல்ஜோடிகளைப் பார்க்க வாய்ப்பிருக்காது என்று நினைத்தேன். ஒருவர் மடியில் ஒருவர் கட்டுண்டு இருந்த காதல் ஜோடிகள் இந்த உலகத்தில் இல்லை. எனக்குக் காதல் ஜோடிகளைப் விட அந்த பலூன் சுடும் கடையும், அந்த பெரியவரும் வசீகரம் நிறைந்ததாக பட்டது. கடைக்காரனிடம் அந்தப்பெரியவர் ஏதோ சொல்ல கடைக்காரன் பெரியவரை ஒருவித சந்தேகத்துடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தான். கடைக்காரன் அந்தப் பெரியவர் பின்னால் வந்து நிற்க, பலூன் கட்டியிருந்த தட்டியில் பலூன்கள் காற்றில் பட படவென அடித்துக்கொண்டன. கடைக்காரன் சிரித்தபடியே அந்தப் பெரியவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தான். அவர் கை லேசாக நடுங்கியது. கடைக்காரன் ஏதோ சில உத்திகளை அவருக்குச் சொல்லித்தருவது போல எனக்குப் பட்டது. கடைக்காரன் இப்போது அவரை விட்டு சென்றிருந்தான் .அந்த பெரியவர் சில விநாடிகள் குறிபார்த்தபடியே நின்றிருந்தார். டொப்பென ஒரு சிவப்புநிற பலூன் உடைந்தது. பெரியவர் சந்தேகத்துடன் துப்பாக்கியை ஒருகணம் பார்த்தார். மேலே சூரியனைப் பார்த்தார். மீண்டும் சுட்டார். இன்னொரு பலூன் உடைந்தது. அடுத்து சுட எதுவும் உடையவில்லை. இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கடைக்காரன் பீடியொன்றைக் கடல்காற்றை எதிர்த்து லாவகமாக பற்றவைத்தான். டொப் டொப்பென வரிசையாக பலூன்கள் உடைந்து கொண்டே வந்தன. ஜிப்பாக்குள் கைவிட்ட பெரியவர் கடைக்காரனிடம் ஏதோ சொல்ல, கடைக்காரன் தலையை அசைத்தான். ஒன்றிரண்டு குறி தப்பினாலும் பெரியவர் எல்லா பலுன்களையும் ஏறக்குறைய சரியாகவே சுட்டார். ஒரேயொரு பச்சை நிற பலூன் மட்டும் இரண்டாவது வரிசையில் எஞ்சியிருந்தது. பெரியவர் தயங்கி நிற்பது போல தெரிந்தது. பிறகு ஒரு முடிவுடன் துப்பாக்கியால் குறி பார்த்தார். பலூன் காற்றில் படபடத்தது. அந்தக் காதல் ஜோடி இப்போது இடத்தை காலிசெய்து என்னைத் தாண்டி சென்றார்கள்.

இந்த வயதில் இவ்வளவு சரியாகச் சுடுகிறாரே. பால்யத்தில் போலீசாக இருந்திருப்பாரோ என்று எனக்கு மனதில் தோன்றியது. இவர் வயதில் எத்தனை என்கவுண்டர் செய்திருப்பார்? ச்சே..ச்சே இருக்காது. ஏதாவது துப்பாக்கி சுடும் வீரராகக் கூட இருந்திருக்கலாம்.இல்லை. கிராமத்தில் கவண் வைத்து கொக்கு.குருவி அடித்த அனுபவம் கூட இருந்திருக்கலாம். அவரை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைக்காரன் பெரியவரை ஆச்சர்யமாகப் பார்த்தான்.நீண்ட தயக்கத்துக்குப் பிறகு டொப்பென அந்த பச்சைபலூனும் உடைந்தது. பெரியவர் கடைக்காரனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாய் நடந்தார். அவர் இந்தப் பக்கமாகத்தான் வந்துகொண்டிருந்தார். கிட்டே வருகையில்தான் அவரது சவரம் செய்யப்படாத வெண்மை நிற முள் தாடியும், முன் வழுக்கையும், குழி விழுந்த கண்களும் தெளிவாகத் தெரிந்தது. அவர் என் பக்கம் வரவில்லை. எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நின்றார்.காதல்ஜோடி முன்பு அமர்ந்திருந்த கட்டுமர மறைவில் அமர்ந்தார். திடீரென அவரது உடல் குலுங்க ஆரம்பித்தது. கேவல் சத்தமாக இருந்தது. அவரது கேவல் சத்தம் கடல்காற்றையும் மீறி சன்னமாக என் காதுகளில் ஒலித்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் எழுந்து இந்த பக்கமாக சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என் முதுகுக்குப் பிறகு அந்த பெரியவர் கட்டுமர மறைவில் தனிமையில் பலமாக அழுது கொண்டிருப்பதை உணர முடிந்தது. கண்டிப்பாக அந்த பலூன்கள் உடைந்ததற்கு அவர் அழுதிருக்கமாட்டார் என்று உறுதியாகப் பட்டது எனக்கு.



காட்சி-2
—————

ம்யூசிக் வேர்ல்டு கடையில் ஆங்கிலப்பட டி.வி.டி.க்களை மேய்ந்துவிட்டு வெளியே வந்தேன். வெளியே லேசாக மழை தூறுவது போலிருந்தது.ஸ்பென்சரில் இன்று அவ்வளவாக கூட்டம் இல்லை. பக்கத்துக் கடையில் ஒரு கோக் வாங்கிக்கொண்டு முதல் மாடியில் இருக்கும் எஸ்கலேட்டர் அருகிலிருந்த தூண் ஓரமாக நின்று கொண்டேன். செல்போனில் பீப்,பீப் என்று ஒலித்தது. ஏதோ விளம்பர எஸ்.எம்.எஸ். மணியைப் பார்த்தேன். நான்கு பத்து என்று காட்டியது. கோக்கைக் குடித்தபடியே எதிர் வரிசைக்கடைகளை வேடிக்கை பார்த்தேன். ஸ்பென்சருக்கு வந்த மக்கள் எல்லாரும் கையிலோ, காதிலோ அலைபேசி வைத்திருந்தார்கள்.

முதல் மாடியில் நான் நின்றிருந்த தூணுக்கு எதிர் வரிசைக் கடைகளில் ஒன்றிரண்டு பூட்டிக்கிடந்தது. மற்ற கடைகள் மந்தமாக இயங்கிக்கொண்டிருந்தன. எதிர்ப்புறம் தூணுக்குப் பக்கத்தில் ஒரு செருப்புக்கடை இருந்தது. செருப்புக்கடை முன்னால் நீலநிற ஜீன்சும்,வெள்ளைநிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். தோளில் ஒரு லெதர் பை தொங்கிக் கொண்டிருந்தது. போனி டெய்ல் ஹேர் அவளுக்கு அழகாக இருந்தது. வயது இருபதா அல்லது பதினெட்டா என்று தெரியவில்லை. நேற்று பார்த்த இந்திப் படமொன்றில் வந்த புது கதாநாயகியை நினைவூட்டுவது போல உயரமும், தெலுங்கின் முன்னணி நடிகையொருத்தியின் உடலும் அவளுக்கு இருந்தது. மார்புகளின் வளர்ச்சி விசேஷ கவனம் பெற்றிருந்தது. அவள் கையிலும் செல்போன் இருந்தது. அவள் பதற்றமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. இடது கையிலிருந்த செல்போனில் இரண்டு விரல்களால் ஏதேதோ வேகமாக டைப் செய்வதை இங்கிருந்து பார்க்க முடிந்தது. யாருக்கோ எஸ்.எம்.எஸ். அடித்துக் காத்திருக்கின்றாள் என்று யூகிக்க முடிந்தது. சில வினாடிகள் கழித்து கோபத்துடன் யாருக்கோ அலைபேசியில் போன் செய்தாள். நம்பர் பிஸியா அல்லது எதிர்முனை நபர் பேசவில்லையா என்று தெரியவில்லை. சலிப்புடனும், கோபத்துடனும் செல்போனை இடது கையில் வைத்தபடி வலது கையில் இருந்த பலூனில் அடித்துக் கொண்டிருந்தாள். சுற்றிலும் ஒருமுறை பார்த்தபடி கைக்குட்டையால் கண்களை நாசூக்காகத் துடைத்துக்கொண்டாள்.

அப்போதுதான் கவனித்தேன். அவள் வலது கையில் இதய வடிவ பலூனொன்று இருந்தது. சற்றுமுன் மூன்றாவது தளத்தில் சிறப்புத் தள்ளுபடியென்று பொம்மைத் தலையை முகத்தில் மாட்டியபடி நின்றிருந்த ஒருவன் போவோர், வருவோருக்கெல்லாம் அச்சடித்த தாள்களையும், பிங்க் நிறத்தில் இருக்கும் இதய வடிவ பலூன்களையும் விநியோகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி வாங்காமல் தவிர்த்துவிட்டு வந்த அந்த பலூன்தான் அவள் கையில் இருந்தது. அவள் முகத்தில் மட்டும் வருத்தமும் சோகமும் இல்லாமல் இருந்திருந்தால்,அவள் கையில் அந்த பலூன் அமர்ந்திருப்பது காதல் தேவதை புன்னகை பூத்து நின்றிருப்பது போல இருக்கும். தூணுக்கு இந்தப் பக்கம் நான் நின்றிருந்த இடத்திலிருந்து அவளை நான் பார்க்க முடிவது போல, அந்தப் பக்கமிருந்து அவளால் என்னைப் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை. அவளது செய்கையை பார்க்க பயமாகவும் இருந்தது. பாவமாகவும் இருந்தது. யாருக்கோ நீண்ட நேரமாகக் காத்திருப்பதன் வலியும்,ஏமாற்றமும் அவளது முகத்திலும் அவள் அங்குமிங்குமாய் நடந்து எஸ்கலேட்டரையும், லிஃப்ட்டையும் பார்க்கும் பார்வையிலிருந்து தெளிவாகவே ஊகிக்க முடிந்தது. என் கையிலிருந்த குளிர்பானம் தீர்ந்து போக அதை அருகிலிருந்த குப்பைக்கூடையில் வீசினேன்.

அவள் யாருக்கோ வேக வேகமாக எஸ்.எம்.எஸ். டைப் செய்வது தெரிந்தது. செருப்புக் கடைக்காரன் கல்லாவில் அமர்ந்தபடியே அருகே தூங்கிக் கொண்டிருந்தான். அவள் எஸ்.எம்.எஸ். அடித்து முடித்தவுடன் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். எஸ்கலேட்டரில் ஒரு தலை மேலேறி வருவது தெரிந்தது.அவள் ஆர்வமாக எஸ்கலேட்டரைப் பார்த்தாள். எஸ்கலேட்டரிலிருந்து வெளியே வந்த நடுத்தர வயது மனிதர் மெதுவாக கடைகளின் விளம்பர போஸ்டர் பெண்களைப் பார்த்தபடியே மெதுவாக நடந்தார். எதிரே பார்த்தேன். அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. செல்போனை பார்த்தபடியே நின்றுக்கொண்டிருந்தாள்.வெளியே நல்ல மழையாக இருக்க வேண்டும். வெளியே சென்று தம்மடித்து விட்டு வீட்டுக்குக் கிளம்ப எத்தனித்தேன். எதிரே பார்த்தேன். அவள் இன்னமும் செல்போனில் யாரையோ அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இந்த முறையும் எதிர்முனையிலிருந்து பதில் வரவில்லை என்று நினைக்கின்றேன். அவள் முகம் இறுகி இருந்தது. உறுதியான தீர்மானத்துக்கு வந்தவள் போல தெரிந்தது. அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு லெதர்பையைத் திறந்தாள். கைப்பையை திறந்து ஏதோ பாக்கெட்டை எடுப்பது போல தெரிந்தது. இங்கிருந்து பார்க்கத் தெளிவாக தெரியவில்லை. என்ன அது? அவள் தலையை சற்று உயர்த்தி வலது கையில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டாள். இடது கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே வாயில் கடகடவென கவிழ்த்தாள். அது கண்டிப்பாக மாத்திரைதான். மாத்திரை தவிர வேறு என்ன இப்படி விழுங்க முடியும்? என்ன மாத்திரையாக இருக்கும்? தெரியவில்லை. அது என்ன மாத்திரையென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கூடுதலாகவே எழுந்தது. விழுங்கியவுடன் அவள் கண்கள் கலங்கியிருந்தன. கைக்குட்டையால் வாயையும்,கண்களையும் துடைத்துக் கொண்டாள். எஸ்கலேட்டரில் இறங்க ஆரம்பித்தாள்.

எஸ்கலேட்டரில் இறங்கிய அவள் ஸ்பென்சர் வாசலை நோக்கிச் செல்வதை முதல் மாடியிலிருந்து பார்க்க முடிந்தது. வாசல் அருகே இருந்த ஸ்நாக்ஸ் கடை முன்பு ஒரு கணம் அவள் தயங்கி நின்றாள். அவள் ஏதோ கேட்க, கடைக்காரன் சந்தேகத்துடன் அவள் கையிலிருந்த ரூபாய்த்தாளைப் பார்த்தபடி கல்லாப்பெட்டியைத் திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்தான். கடைக்காரன் அவளிடம் ஆவிபறக்கும் கப்பையும், மீதி பணத்தையும் தர, அதை வாங்கிக்கொண்டு முதல் தளத்தில் இருந்த தூணுக்கு மறைவில் அமர்ந்தாள். அவள் ஒரு கையில் காபி கப்பும் இன்னொரு கையில் அந்த இதய வடிவ பிங்க் பலூனும் இருந்தது. செல்போன் கையில் இல்லை. லெதர் பேக்கைப் பார்த்தேன். காபியைக் குடிக்காமல் பலூனையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நான் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கினேன். அவளைத் தாண்டிதான் வாசலுக்குச் செல்லவேண்டும். முதல் தளத்திலும் கூட்டம் இல்லை. கடைக்காரன் ஏதோ பில்லிங் மெஷினை நோண்டிக்கொண்டிருந்தான். டொப்பென மெலிதாக ஏதோ சத்தம் கேட்டது. தூணுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்தவள் கையிலிருந்த பலூன் வெடித்தது. அவளைக் கடந்து வாசலுக்கு சென்று கொண்டிருந்தேன். அவளின் சன்னமான விசும்பலொலியும், மூக்கை உறிஞ்சும் சத்தமும் என் முதுகுக்குப் பின்னே கேட்டது. திரும்பிப் பார்ப்பது அநாகரிகமாகப் பட்டது. வாசலிற்கு வந்தேன்.வெளியே மழை கொட்டிக்கொண்டு இருந்தது.



காட்சி–3
—————

ஏர்போர்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு செல்போனைப் பார்த்தேன். செல்போனில் மணி ஏழு என்று காட்டியது. துபாயிலிருந்து இந்நேரம் பிளைட் வந்திருக்கலாம். பார்வையாளர் பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ராஜாராமைப் பார்த்து பத்து வருடங்கள் இருக்கும்? ஆள் இப்போது எப்படியிருப்பான்? வீட்டில் அப்பாவுடன் சண்டை போட்டு ஓடிவந்த ராஜாராமை நண்பர்களோடு வடபழனி கோயிலுக்கு அழைத்துச் சென்று அவனுக்குக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் நடத்தி வந்த தினம் மங்கலாக மனதில் ஓடியது. முன்னால் நல்ல கூட்டமாக இருந்தது. வெள்ளை யூனிஃபார்மில் நின்றிருந்த சில டிரைவர்கள் பெயர் அட்டைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு மத்திய அமைச்ச்சர் மலேசியாவிலிருந்து திரும்புகிறாராம்.கரைவேட்டி அணிந்திருந்தவர்கள் மாலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாராமா அது? பக்கத்தில் குண்டாக கழுத்து நிறைய நகைகளோடு. பக்கத்தில் கூட நடந்து வருபவர்கள் அவன் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும். பத்து வருடங்கள் சந்திக்கவில்லையே தவிர, போனில் அவ்வபொழுது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ராஜாராமை பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை. சதைப்போட்டிருந்தான். ராஜாராமுக்கும் என்னைப் பார்த்தவுடன் சட்டென அடையாளம் தெரியவில்லை. சிலவிநாடிகள் சுதாரிப்புக்குப் பிறகே என்னை நோக்கி கையை அசைத்தான். அருகே வந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவன் மனைவி என்னைப் பார்த்து நலம் விசாரிக்க, ராஜாராம் அவன் குழந்தைகளிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான். அங்கிள் என்று சொல்லும்போது என்னைப் பார்த்து லேசாக சிரித்தான். அவர்களை அழைத்துக்கொண்டு கார் பார்க் செய்யும் இடத்திற்கு நகர்ந்தேன். பின்னால் மத்திய அமைச்சருக்காக வாழ்க..வாழ்க வென்று கத்திக்கொண்டிருந்தார்கள். மழை வருமா? காற்று சற்று வேகமாக வீசுவது போல இருந்தது. ராஜாராமை பக்கத்து சீட்டில் அமர, அவன் மனைவி,குழந்தைகள் பின்சீட்டில் அமர்ந்துகொள்ள காரைக் கிளப்பினேன். "ஊருல நல்ல மழை போலிருக்கு…"விசாரித்தான். சென்னை டிரேட் சென்டரில் நாளை ஒரு கான்பிரன்ஸ் என்றும், இன்னும் இரண்டு தினங்கள் மட்டும் தங்கவிருப்பதாக சொன்னான். சென்னையில் எனது வீடு இருக்க அவன் ஹோட்டலில் தங்குவது எனக்குப் பிடிக்கவில்லையென்று சொன்னேன். உண்மையில் எனது சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேருக்கு மேல் தங்கமுடியாது. ஒருவேளை ராஜாராம் எனது வீட்டில் தங்க முடிவெடுத்திருந்தால் எனக்கு மிகப் பெரிய தர்மசங்கடமாய் இருந்திருக்கும். தேங்க் காட். அவன் சிரித்தபடி நாளை கான்பிரன்ஸ் முடிந்து குழந்தைகளை அழைத்து வீட்டிற்கு வருவதாகச் சொன்னான். எனது மகள், மனைவி பற்றி விசாரித்தான்.

. "ராயல் மெரிடியன்ல புக் பண்ணியிருக்கலாம்ல..? டிரேட் சென்டர் பக்கமாச்சே..?" கேட்டேன்.

"எங்க ஆபீஸ்ல புக் பண்ணிக்கொடுத்திருக்காங்க..வழக்கமான பார்க்லதான் புக் பண்ணுவாங்க" சொன்னான்.

பார்க் செல்லும்போது மணி எட்டு. முன்பதிவு செய்து வைத்திருந்த ரூம் விபரங்களை ஹோட்டல் ரிசப்ஸனிஸ்ட் பெண்ணிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ராஜாராம் மனைவி செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள். ராஜாராம் மகனும்,மகளும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். காரில் வரும்போது அந்தக் குழந்தைகள் என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் சரளமாக ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள். அவர்களுக்குத் தமிழ் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ராஜாராம் என்னிடம் பெருமையாகச் சொன்னான். துபாயில் பள்ளிக்கூடங்கள் கல்வி தரமாய் இருப்பதாகச் சொன்னான். ரூம்பாய் சூட்கேஸ்களைச் சுமந்தபடி ரூமிற்கு அழைத்துச் சென்றான். ராஜாராம் ரூமில் அவனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு என்னுடன் புறப்பட்டுக் கீழே வந்தான். "ஹோட்டலில் பார் தரமாக இருக்கும்ல?" கேட்டான். சிகரெட் பற்றவைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவான ஊர் வம்புகளைக் கதையடித்துக் கொண்டிருந்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், அடுத்த எலக்சன், மாவோயிஸ்ட்டுகள்…. ராஜாராம் ஒரு வார்த்தை கூட ஊரில் இருக்கும் அவன் அப்பா பற்றிக் கேட்கவேயில்லை. எனக்கு அதைப்பற்றிக் கேட்கவும் தர்மசங்கடமாக இருந்தது. ராஜாராம் அவன் அப்பாவுடன் சண்டைபோட்டு ஸ்வேதாவைத் திருமணம் செய்து கொண்ட அடுத்த மாதமே அவளை அழைத்துக்கொண்டு துபாய் சென்றுவிட்டான். ராஜாராம் ரூம் பாயிடம் அவன் மனைவி,குழந்தைகளை டின்னர் ஹாலுக்கு வரச் சொல்லி அனுப்பினான். இருவரும் டின்னர் ஹாலுக்குச் சென்றோம்.

டின்னர் ஹால் செல்லும் வழியில் பலூன்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. மாடிப்படியெங்கும் பலுன்கள் பறந்து கொண்டிருந்தன. எதிரே நடந்து வந்த வெயிட்டரிடம், என்ன விசேஷமென்று விசாரிக்க, யாரோ ஒரு பிஸினஸ்மேன் பிறந்தநாளென்று சொன்னான். டின்னர் முடிந்து ராஜாரமுடன் தம்மடிக்கச் சென்றேன். அவன் மனைவி ரூமுக்குப் புறப்பட்டு செல்லக் குழந்தைகள் எங்களுடன் புறப்பட்டு வெளியே வந்தார்கள். அங்கிள்..அங்கிள் இந்த பலூனை ஊதித் தாங்கவென்று அவன் குழந்தைகள் ஆங்கிலத்தில் கேட்டார்கள். சாப்பிட வந்தவர்களில் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஒரு வெயிட்டர் பலூன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஊதிய பலூனை எடுத்தபடியே விளையாட ஓடினார்கள். எனது செல்போன் ஒலிக்க பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன். மனைவி நம்பர் தெரிந்தது. சிக்னல் வீக்காகி சத்தம் கேட்கவில்லை. ராஜாராமிடம் சைகை காட்டிவிட்டு சற்று வெளியே மெயின்கேட் அருகே வந்து பேச ஆரம்பித்தேன். ராஜாராமுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னேன். மனைவி சீக்கிரம் வரச்சொன்னாள். செல்போனில் பேசி முடிக்கையில் பின்னால் டொப்..டொப்பென ஏதோ உடைவது போலிருந்தது. திரும்பினேன். ராஜாராம் சின்னக் குழந்தை போல குழந்தைகள் கையிலிருந்த பலூன்களை சிகரெட்டால் சுட்டு உடைத்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் ஆர்வமாக கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். கடைசி பலுனையும் சிகரெட்டால் சுட்டு உடைக்க அவன் குழந்தைகள் கைதட்டி உற்சாகமாய் எம்பிக் குதித்தார்கள்.



ராஜாராமை ஹோட்டலில் சந்தித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. பலர் கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கடை ஷட்டர்களை இழுக்கும் ஒலிகள் சாலையில் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. கோடம்பாக்கம் பாலம் முன்னால் இருக்கும் கடையில் பெட்ரோல் போட வேண்டும். சாலையைப் பார்த்தேன். மூடியிருந்த கடைகளின் வாசலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட்டுகளின் வெளிச்சமும். சாலையிலிருக்கும் மெர்க்குரி லைட்டுகளின் வெளிச்சமும் கலந்து ஒரு விநோதமான ஒளிக்கலவையை சாலையில் வழிய விட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் சாலையெங்கும் மாலை பெய்த மழை ஈரம் சேர்ந்து ஆங்காங்கே மின்னிக்கொண்டிருந்தது.

எதிரே தூரத்தில் ஒரு உயரமான கட்டிட மாடியில் மெகா சைசில் காற்றடைத்த பலூன் பறந்து கொண்டிருந்தது. துணி விளம்பரத்துக்காகவோ, நகை விளம்பரத்துக்காகவோ கட்டிவிடப்பட்டிருந்த அந்த பலூன் பறந்துக் கொண்டிருந்தது. பலூன் பறந்துவிடாமல் இருக்க தரையிலிருந்து இறுகப் பிடித்த பலமான இரும்புக் கயிறுகளில் சின்னச் சின்ன சீரியல் பல்புகள் கட்டியிருந்தது இருட்டில் பார்க்க அழகாக இருந்தது. காலையிலிருந்து நான் பார்த்த பலூன்கள் யாவற்றிலும் பெரிதாக பறந்து கொண்டிருந்தது. அந்த பலூன் பறக்கும் உயரத்திலிருந்து நின்று பார்த்தால் இந்த நகரம் முழுவதும் பார்வைக்குத் தெரியும் என்று தோன்றியது.



நன்றி
-என்.விநாயக முருகன்

Sunday, September 12, 2010

கடற்கரையில் காந்தி

நேற்று கடற்கரையில்
காந்தியை பார்த்தேன்

என்னைப் பார்த்து சிரித்தார்
முன்னொரு தினம் சந்தித்தது
அடையாளம் தெரிந்தது
காற்று வாங்கியபடியே
காலாற நடந்தோம்

கடற்கரையில்
கார் பார்க்கிங் வசதி
முறையாக இல்லையென்று
குறைப்பட்டார்.

அவருக்கு மூச்சு வாங்கியது
கையிலிருந்த
மினரல் வாட்டர் பாட்டிலை குடித்தார்

கிராமங்களிலும்
கார்பார்க்கிங் வசதி
கிடைக்க வேண்டுமென்றார்

எனக்கு குழம்பியது

விளைநிலங்கள் தோறும்
வணிக மையங்கள்
வரவேண்டுமென்றார்

தரிசுநிலங்களில்
தனியார் நிறுவனங்களை
அமைப்போமென்றார்

மக்கள் மகிழ்ச்சியாக வாழ
மானாவாரி நிலங்களில்
மல்டிபிளக்ஸ் திரையரங்கள்
அவசியம் கட்டவேண்டும்
பிடிவாதமாக சொன்னார்

எல்லா கிராமங்களிலும்
முறையான சாலைகள்
சுங்கசாவடிகள்
மின்சாரம் குடிநீர்
மளிகை கடைகள்
உடற்பயிற்சி கூடங்கள்
பொறியியல் கல்லூரிகள்
தனியார் வங்கிகள்
இன்னும்...இன்னும்
சொல்லிக்கொண்டே போனார்

கிராம பொருளாதார திட்டத்திற்கு
வெளிநாட்டு வங்கியில்
கடன் கிடைக்குமென்றார்

இறக்குமதி ஆடைகளை
அணிய சொன்னார்
கிராம மக்களுக்கு
தன்னம்பிக்கை தருமென்றார்

ஏதோ கேட்க
வாயெடுத்தவனை பார்த்து
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
என்றார்

Friday, September 10, 2010

ஸ்பென்சர் பிளாசாவில் காந்தி










நேற்று
ஸ்பென்சர் பிளாசாவில்
காந்தியை சந்தித்தேன்
அடையாளம் தெரியவில்லை
ஆள் சற்று சதைப்போட்டிருந்தார்.
கைத்தடியை காணவில்லை.
மூக்குக்கண்ணாடிக்கு பதில்
ரேபான் கிளாஸ் இருந்தது.
கதர்வேட்டி இருந்த இடத்தில்
லீ ஜீன்ஸ்(நீலநிறம்) இருந்தது.
காதில் ப்ளூடூத் இருந்தது
கையில் நோக்கியா மொபைல் இருந்தது

நீ..நீங்க காந்திதானே
கேட்ட என்னை
புன்னகையோடு பார்த்து
ஐ'யாம் மிஸ்டர் கேண்டி சொன்னார்

மிஸ்டர் கேண்டியும்,நானும்
நந்திகிராமம் முதல்
தண்டகாரண்யம் வரை பேசிக்கொண்டோம்
நமீதா முத‌ல்
நயன்தாரா வரை
மிஸ்டர் கேண்டிக்கு தெரிந்திருந்தது
ஆயிரம் கோடி ஊழலை
ஆச்சர்யப்படாமல் கேட்டுக்கொண்டார்

எந்திரன் பட வெளியீடு
தள்ளிப்போவதை சொல்லி
கவலைப்பட்டார்
சுதந்திரதினத்துக்கு
தொலைக்காட்சியில்
என்ன பட்டிமன்றம்
ஆர்வத்தோடு கேட்டார்

ஆட்டுப்பால் வேர்க்கடலையை விட
கோக்கும் பீட்சாவும்
உடலுக்கு உகந்ததென்றார்

மிஸ்டர் கேண்டியிடம்
ஆட்டோகிராப் வாங்க
அவசரத்துக்கு எதுவும் கிடைக்காமல்
ஐநூறு ரூபாய் தாளை தந்தேன்
ரூபாய் நோட்டை பார்த்த
மிஸ்டர் கேண்டி
முன்னிலும் அதிகமாய்
பொக்கைவாய் தெரிய
புன்னகைத்தார் நட்பாய்

Thursday, August 26, 2010

என் பெயர் சிவப்பு



பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஓர் ஓவியத்தை பார்த்த நினைவு. ஒரு வயதான பெரியவரின் முகம் கோட்டோவியமாக தீட்டப்பட்டிருக்கும். முகமெங்கும் சுருக்கங்கள் இருக்கும். அந்த கோட்டோவியத்தின் சுவாரசியத்தன்மையே அதனுள் ஒ‌ளிந்திருக்கும் ஒ‌ன்றிற்கும் மேற்பட்ட உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதே. ஓவியத்தின் காதை நன்றாக உற்றுக் கவனித்தால் காதிற்கு பின் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும் ஓவியம் புலனா‌‌‌கும். கண்களை உற்று கவனித்தால் இரண்டு படகுகளின் ஓவியங்கள் புலனா‌‌‌கும். ஓவியத்தின் வசீகரத்தன்மை என்பது அது வெளிப்படுத்தும் உருவத்திலும், கோடுகளிலும், வர்ணங்களிலும் மட்டும் இல்லை. அது வெளிப்படுத்தாத கோடுகளிலும், வர்ணங்களிலும் கூட அதன் நீட்சி இருக்கலாம் எ‌ன்று அந்த விளையாட்டு சொல்லாமல் சொல்லும்.

My Name is Red நாவல் படிக்கும்போது சின்ன வயதில் நாங்கள் அந்த புதிரான ஓவியத்தின் ஊடே மீண்டும்,மீண்டும் ஒடி ‌விளையாடி களைத்து குதூகல தருணங்கள் நினைவுக்கு வந்தன.

ஒரு அழகான காதல் அதனூடே ஒரு கொலை இரண்டு வர்ணங்கள் குழைத்து பாவு நூலினிடையே ஊடு நூலை விட்டு தறியில் அடிக்கும் தேர்ந்த நெசவாளியின் லாவகம் போல ஓரான் பாமுக் இந்த நாவலை படைத்துள்ளார். கிழக்கின் மதக்கட்டுப்பாடுகளையும்,மேற்கின் கலாச்சார படையெடுப்பையும்
இந்த இரண்டு புள்ளிகளும் சேரும் இடத்தில் கலை அதன் இருப்பு குறிப்பாக கலைஞர்களின் சுதந்திரம் அவர்களின் வீழ்ச்சியை நாவல் விவாதிக்கிறது.

நாவலின் பின்புலம்:-

16ஆம் நூற்றாண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் கதை செல்கிறது. ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா முஸ்லீம் ஆண்டின் ஆயிரமாவது தொடக்கத்தைக் குறிக்கும் விழா மலரை உருவாக்க விரும்புகிறார். அதற்காக தேசத்தின் தலைசிறந்த ஓவியர்களை ஒருங்கிணைத்து விழா மலரில் ஓவியங்கள் வரைய சொல்கிறார். ஓட்டாமன் பேரரசின் சிறப்புகளையும், தனது பெருமைகளையும் உலகம் அறியும் வகையில் அந்த ஓவியங்கள் இருக்கவேண்டுமென்று சொல்கிறார்.

நாவலின் கதைச்சுருக்கம் :-

சிறு வயதில் ஊரைவிட்டு ஓடிய கருப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். அவனது மாமா எனிஷ்டே எஃபண்டியின் ஓவியக் கூடத்தில் இஸ்தான்புல் சுல்தானின் ஆணைப்படி ஆண்டு மலர் தயாரிக்கப்படுகிறது. கருப்பும் ஒரு ஓவியன்தான். கருப்பு இஸ்தான்புல்லுக்கு திரும்பும் இந்த பன்னிரண்டு வருடத்தில் ஊருக்குள் எல்லாம் மாறி இருக்கிறது. சிறுவயதில் அவன் நேசித்த மாமாவின் மகள் ஷெகூரேவுக்கு திருமணம் ஆ‌கி இரண்டு மகன்கள் இருக்கின்றன. ஷெகூரே மணந்துக்கொண்ட ஸ்பாஹி குதிரை வீரன் போருக்கு செ‌ன்று திரும்பவேயில்லை.அவன் உயிரோடு இருக்கிறானா‌‌‌ இல்லையாவென்றே தெரியாத நிலையில் ஷெகூரே ஆண்டுக்கணக்காய் மகன்களோடு காத்திருக்கிறாள். ஷெகூரே கணவனின் தம்பி ஹாசன் ஷெகூரே மேல் காமுற்று அவளை மணம் செய்துக்கொள்ள துடிக்கிறான். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய கருப்பு மேல் ஷெகூரேவுக்கு காதல் மலர்கிறது. ஆனாலும் ஷெகூரேவால் உறுதியாக தனது காதலை கருப்பிடம் வெளிப்படுத்த இயலவில்லை. கணவன் இறந்துவிட்டதாக யாராவது நீதிபதிகள் முன்பு சாட்சி சொன்னால் அவள் விதவை எ‌ன்று சட்டம் சொல்லும். பிறகு கருப்பை தாராளமாக மணந்துக்கொள்ளலாம். ஹாசனின் அட்டகாசமும் குறையும். இருந்தாலும் ஷெகூரேவுக்கு அவளது இரண்டு மகன்களின் எதிர்காலம் கண்முன் வ‌ந்து காதலை பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரசெய்யாமல் தடுக்கிறது.

இந்நிலையில் இஸ்தான்புல் சுல்தான் ஆணைப்படி உருவாகும் ஆண்டுமலரில் இறு‌தி‌ ஒவியம் தீட்டுபவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். முதலில் அழகன் எஃபண்டி. அடுத்து ஷெகூரேவின் அப்பா எனிஷ்டே எஃபண்டி கொல்லப்படுகிறார். இவர்களை யார் கொல்கிறார்கள்? அவர்கள் இஸ்தான்புல் சுல்தானுக்காக அவர்கள் தீட்டும் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் பிரச்சினை?

நாவலின் நடை :-

காரா (கருப்பு) , எனிஷ்டே எஃபண்டி (கறுப்பின் மாமா), ஷெகூரே (எனிஷ்டே எஃபண்டியின் மகள்) , ஷெவ்கெத் (ஷெகூரேவின் மூத்த மகன்) , ஒரான் (ஷெகூரேவின் இளைய மகன்) , ஹாசன் (ஷெகூரேவின் கொழுந்தன்) , ஹாரியே(எனிஷ்டே எஃபண்டியின் அடிமைப்பெண்) , எஸ்தர் ,நஸ்ரத் ஹோஜா மற்றும் ஆலீவ், பட்டர்ஃபிளை, நாரை ,மாஸ்டர் ஒஸ்மான் அவ்வளவு ஏன் சிவப்பு வர்ணம், நாய் , குதிரை, ஓவியத்தில் இருக்கும் இரண்டு துறவிகள் எ‌ன்று என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து நாவலை அவர்கள் பார்வையில் நகர்த்தி செல்லும் பின்நவீன உத்தியில் நாவலின் நடை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் ஒவியம் போல காட்சியளிக்கின்றன.

நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. ஓவியன் அழகன் எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஒரு பாழடைந்த கிணற்றில் தலை நசுங்கி கிடக்கிறான். அவனது பிரேதம் முத‌ல் அத்தியாயத்தில் கதை சொல்கிறது. அவனை யார் கொலை செய்திருப்பார்கள்; என்ன காரணம்? அந்த கொலைக்காரன் ஆணா? பெண்ணா? ஓர் ஓவியத்தை முதல்முறை பார்க்கும்போது அந்த ஓவியத்தின் முழு வெளித்தோற்றம் எப்படி பிரமிப்பு தருமோ அப்படி முத‌ல் அத்தியாயம் செல்கிறது. ஓவியத்தின் கோடுகள், வர்ணங்கள் முத‌ல் பார்வைக்கு தட்டுப்படாதது போலவே கொலைக்காரன் யாரென்று தெரியாமல் முதல் அத்தியாயம் கடந்து செல்கிறோம்.

நாவலின் நான்காவது அத்தியாயத்தில் கொலைகாரன் பார்வையில் கதை நகர்கிறது. கொலைக்காரன் பெயர் என்ன அவன் நிறம் என்ன? குள்ளமா? உயரமா எதுவுமே தெரிவிக்கப்படாமல் கொலைக்காரன் தரப்பு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. கொலைகாரன் என்ற ஒவியத்தின் மீதான ஈர்ப்பும்,ஆவலும் இன்னும் அதிகமாகின்றது. நாவலின் 58 ஆவது இந்த ஓவியம் லேசாக புரியும். 59 ஆவது அத்தியாயத்தில் இந்த ஓவியம் முழுமையாக புரியும். ஓவியத்தை நீங்கள் உணரத்தொடங்கும் அந்த தருணத்தில் அந்த ஓவியத்தின் இருப்பு சிதைக்கப்படுகிறது. ஹாசனால் அவன் கொல்லப்படுகிறான்.
ஒரான் பாமுக்கின் படைப்புலகம்:-

ஒரான் பாமுக் காட்டும் நுண்ணோவிய உலகம் அதி அற்புதமானது. மனிதர்கள் பல வண்ணக் கலவைகளால் ஆனவர்கள். ஓவியர்கள் எப்போதும் வரைந்துக்கொண்டே இருக்கிறார்கள். வரைந்து,வரைந்தே கண்கள் குருடாகிப்போவதை பாக்கியமாக கருதுகிறார்கள். குருட்டுத்தன்மை என்பது இன்ஷா அல்லாஹ்வால் வழங்கப்படும் கொடை எ‌ன்று கருதுகிறார்கள். ஒரான் பாமுக் உலகத்தில் நடமாடும் ஓவியர்கள் கண்களால் ஒரு குதிரையை வரைவதேயில்லை. ஆண்டாடுக் காலமாய் அவர்கள் நினைவில் தங்கிவிட்ட மனப்படிமத்திலிருந்தே குதிரைகளை வரைகிறார்கள். ஒரு குதிரையை நேரில் பார்த்து வரைபவன் ஒருநாளும் சிறந்த ஓவியத்தை தீட்டமுடியாது. அவர்கள் குதிரையின் முகத்தையோ, உடலையோ முதலில் வரைவார்கள். குதிரையை மனதில் இருந்தே வரைபவர்கள் குதிரையின் குளம்புகளை முதலில் வரைய ஆரம்பிப்பார்கள். மனக்கண்ணால் பார்க்கும் ஓவியக்கோணமே அல்லாஹ் அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும் பார்வைக்கோணம். அதனாலேயே கண்களை குடுடாக்கிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்பை பற்றி பெருமிதமும், அதீத முகஸ்துதி வேண்டி விழைபவர்களாகவும் வருகிறார்கள். கலையையும்,மரபுகளையும் கட்டிக் காக்க கொலை கூட செய்கிறார்கள். பிற்பாடு அவர்களே பணம்,புகழுக்காக கொள்கைகளை துறந்து கரைந்து காணாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.

My Name is Red எ‌ன்ற இந்நாவலை தமிழிற்கு ‌மிக அருமையாக மொழிப்பெயர்ப்பு செய்திருக்கும் ஜி.குப்புசாமியின் உழைப்பு போற்றத்தக்கது. இலக்கிய மொழிப்பெயர்ப்பில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ஜி.குப்புசாமியின் இட‌ம் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஓவிய உலகத்தை பற்றிய பரந்துப்பட்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை (அகிலனின் ‘சித்திரப்பாவை’ நூலை சொன்னால் கோபம் வரும்) அந்த வகையில் இந்நாவல் முன்னோடி எனலாம் (மொழிப்பெயர்ப்பாக இருந்தாலும்)

என் பெயர் சிவப்பு
(தமிழில் ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்
விலை 350
பக்கங்கள் 663

Saturday, August 14, 2010

அ கவிதை அல்லது A கவிதை

அ கவிதை அல்லது A கவிதை

ச்சீய்
------
பத்தாம் வகுப்புத் தோழன்
சங்கரநாராயணன் ஞானப்பழம்
என்ன சொன்னா‌‌‌லும் வெட்கப்படுவான்
ச்சீய் எ‌ன்பான்


மச்சி அந்த ஃபிகர பார்த்தியா?
ச்சீய்
ஜோதில பிட்டு படம் போகலாமா?
ச்சீய்
கொழந்தை எப்படி பொறக்குது தெரியுமா?
ச்சீய்
இந்த புத்தகம் பார்த்தியா? ஆயில் பிரிண்ட்...
ச்சீய்
ஹனிமூன் எங்கடா போவே?
ச்சீய்
கல்யாணம் ஆனா‌‌‌ல் என்னடா செய்வ?
ச்சீய்...ச்சீய்


பத்தாண்டுகளுக்கு பிறகு
சங்கரநாராயணனை
சத்திரம் பேருந்து நிலையத்தில் பார்த்தேன்


என்னடா செய்யுறே?
ஆசிரமத்தில சேர்ந்துட்டேண்டா
ச்சீய்


நன்றி
-என்.விநாயக முருகன்

Sunday, August 8, 2010

ஆடும் கூத்து- கலையின் உச்சம்













உயிரோசையில் அந்த கட்டுரையை படிக்கும் வரையில் தமிழில் இப்படியொரு படம் வந்திருப்பது சத்தியமாக எனக்கு தெரியவே தெரியாது.

அந்த திரைப்படத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் பர்மா பஜார், தெரிந்த டிவிடி கடைகளில் எல்லாம் ஏறி இறங்கினேன். எல்லாரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள். ஒருவேளை இப்படியொரு படம் வந்திருக்காதோ? என்று திகைப்பாக இருந்தது. அந்த படத்தை தேடி சோர்ந்துப்போன நிலையில் யூட்யூபில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நான் தேடிய அதே திரைப்படத்தின் பெயர். கடவுளே இது அதுவாகத்தான் இருக்க வேண்டும். லிங்கை கிளிக் செய்தேன்.

என் வாழ்வின் மகத்தான மணித்துளிகள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் சேரன்,நவ்யாநாயர்,தலைவாசல் விஜய், பாண்டியராஜன், பிரகாஷ்ராஜ், சீமான் ,மனோரமா, கொச்சின் ஹனீஃபா,ரேகா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.இருந்தும் ஏன் இந்த படம் பேசப்படவில்லை? வருத்தமாக இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மீது ஆத்திரமாகவும் இருக்கிறது. தமிழ் சமூகத்தை தரமற்ற குப்பை படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஆட்கள் மீது கோபம் வருகிறது . இந்த படம் ஏன் வெற்றியடையவில்லை. சாட்டிலைட் டிவிக்களை, தமிழின் கமர்ஷியல் டைரக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போன்ற படங்களை ஊக்குவிக்காத பேசாத நானும், நீங்களும் கூட குற்றவாளிதான். ஈரானிய டைரக்டர் மஜீத் மஜீதியின் படங்களை இந்த படம் தரமானது. அடித்து சொல்வேன். உலக சினிமா,உலக சினிமா என்று சொல்கிறார்களே.. அந்த தர வரிசையில் இந்த திரைப்படத்தை தாராளமாக சேர்க்கலாம். மிக தேர்ந்த பிண்ணனி இசை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை, ஒவ்வொரு நடிக, நடிகைகளின் கச்சிதமான நடிப்பு, முகபாவங்கள், கேமரா கோணம் என்று எல்லாம் சமச்சீரான விகிதத்தில் அடுத்தடுத்து நிற்க ஒரு வானவில் போல என் மனதில் அழகாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது அந்தப்படம். இன்னும் பல வருடங்களுக்கு என் நினைவில் இந்த படம் நிற்க போவது உறுதி.



‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட- வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப்- பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொழியிற் கூடக்- களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.’


-இருட்டான திரையில் டைட்டில் ஓட ஒருவித புதிர்தன்மையோடு கூடிய இசைப் பிண்ணனியில் பாரதியின் வரிகளை கொண்ட பாடல் ஒலிக்கிறது. படத்தில் ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று பார்வையாளர்களுக்கு ஓரளவு முன்கூட்டியே கணித்துக்கொள்ள தோதுவாக இருக்கிறது அந்த பாடலின் இசை கம்போஸிங்.

டைட்டில் முடிந்ததும், ஒரு ஊரின் வாய்க்கால் காட்டப்படுகிறது. இரவு நேரம். ஒரு வாய்க்காலில் மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை அரிவாளால் வெட்டுகிறார்கள். கேமரா அப்படியே கிரேன் ஷாட்டில் மேலே சென்று சற்று தள்ளியிருக்கும் ஊரை காட்டுகிறது. ஊருக்குள் திருவிழா. ராட்டினம் சுற்றுகிறது. ராட்டினத்தில் மேலிருந்து ஒரு பெண் அந்த கொலையை பார்த்து விடுகிறாள். ராட்டினத்தை அவசர ,அவசரமாக கீழிறக்க சொல்லி அவளது அப்பாவிடம் தான் பார்த்த கொலையை சொல்கிறாள். அவளது அப்பா "மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாததெல்லாம் உன் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுதோ?" என்று கேட்கிறார். இந்த வசனம்தான் படத்தின் கருவே.

மணிமேகலை பின்னால் அவளது அப்பா மற்றும் ஊர்க்காரர்கள் சென்று வாய்க்காலை பார்த்தாள் அங்கு எதும் இல்லை. கொலை நடந்ததற்கான துளி அடையாளம் கூட இல்லை. மணிமேகலை திகைக்கிறாள். தான் பார்த்தது பிரமையா? மணிமேகலை வீடு திரும்பியதும் எல்லாரும் அவளை கிண்டல் செய்கிறார்கள்.
"மணிமேகலைக்கு ராட்டினத்துல சுத்தும்போது கூட கனவு வருதா?" கிண்டல் செய்து சொல்லி சிரிக்கிறார்கள்.
மணிமேகலைக்கு ஆத்திரமாக வருகிறது. "அப்படினா நான் கண்டது பொய்யா?" சாப்பிடாமல் கோபித்து கொண்டு அவள் அறைக்குள் அமர்ந்திருக்கிறாள்.

மணிமேகலை (நவ்யாநாயர்) துடுக்குத்தனம் நிறைந்த ஒரு கிராமத்துப்பெண். பெரிய படிப்பாளி. தமிழின் இலக்கிய நூல்களை, சிறந்த ஆளுமைகளை தேடி படிப்பவள். அப்பா அழகியநம்பி பிள்ளை (தலைவாசல் விஜய்) யை பெயர் சொல்லி அழைத்து கிண்டல் செய்யுமளவுக்கு அப்பா செல்லம். அழகியநம்பி பிள்ளையின் சொந்த ஜவுளிக்கடையில் வேலை செய்பவன் முத்து. முத்துவுக்கு அழகியநம்பி பிள்ளை மாமன் முறை. மணிமேகலை மாமன் மகள். இருவரும் காதலிக்கின்றார்கள். முத்து திருவிழாவில் வாங்கிய வளையல்களை காதலி மணிமேகலைக்கு பரிசாக தருகிறான். "இந்த வளையல் அதிசயமானது. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களின் வேஸ்ட் பிலிம்ரோலில் இருந்து இந்த வளையல் செய்யப்பட்டது. இந்த வளையல்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது" என்று முத்து சொல்ல, மணிமேகலை சிரிக்கிறாள். முத்துவின் அப்பாவித்தனமான இந்த பேச்சு அவளுக்கு பிடித்திருக்கிறது.

"உன்னை வளையல் கடைக்காரன் நல்லா ஏமாத்தியிருக்கான்" என்று கிண்டல் செய்கிறான். மறுநாள் மணிமேகலை ஆற்றுக்கு துணிதுவைக்க செல்கிறாள். தனியாக அமர்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கும்பொது அந்த வளையலில் இருந்து கறுப்புவெள்ளை ஒளிக்கீற்றுகள் கிளம்புகின்றன. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படமொன்று அவள் கண் முன்னால் ஓடுகிறது. ஒரு இளம் காதல் ஜோடிகள் கூத்து ஆடுகிறார்கள். (காதலனாக நடித்திருப்பது நடிகர் சேரன்) அதை தொடர்ந்து கிராமத்து கொடுமைக்கார ஜமீன்தார் சிலரை காட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் திரைப்படக் காட்சி. (ஜமீன்தாராக நடித்திருப்பது பிரகாஷ்ராஜ்)

மணிமேகலை அந்த கறுப்புவெள்ளை திரைப்படத்தை பார்த்து பயந்து ஊருக்குள் ஓடிபோய் முத்துவிடம் தகவலை சொல்கிறாள். முத்துவுக்கு பயம் வந்து அவன் மாமாவிடம் மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது. அவள் என்ன என்னவோ உளறுகிறாள் என்று சொல்கிறான். மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அனைவரும் வீட்டுக்கு டாக்டரை அழைத்து வருகிறார்கள். பிற்பாடு அந்த ஊரில் நிஜமாகவே ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அனைவரும் மணிமேகலை சொன்னது பொய்யில்லை உண்மையென்று நம்புகிறார்கள்.

1975 ஜீன் 27 ஆம் வருட நாளிதழை முத்து மணிமேகலையிடம் காட்டுகிறான். அதில் அந்த வருடம் கடையநல்லூர் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு நின்றுபோன ஒரு பழைய தமிழ் திரைப்படம் பற்றிய தகவல் இருக்கிறது. ஒரு பெண்ணை மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த தகவலும் செய்திதாளில் இருக்கிறது. மணிமேகலை அந்த செய்தித்தாளை படித்து அதிர்ச்சியடைகிறாள். முத்துவும். மணிமேகலையும் உடனே கடையநல்லூர் செல்கிறார்கள்.

அந்த ஊரில் வயதான வாத்தியார் ஒருவர் வசிக்கிறார். ஊருக்கு வெளியே தனியாக வீடெடுத்து வசிக்கிறார். அவர் பெயர் லூயிஸ் பாபு. (லூயிஸ்பாபு வேடத்தில் நடித்திருப்பவர் பிரகாஷ்ராஜ்) 1975-ல் ஒரு படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனதாகவும் அந்த படத்தின் டைரக்டர் பெயர் டைரக்டர் ஞானசேகரன்(டைரக்டர் வேடத்தில் நடித்திருப்பவர் சேரன்) என்றும் தகவல் சொல்கிறார். அந்த திரைப்படம் ஏன் நின்றுபோனது என்பதற்கும் அவர்களுக்கும் விடை கிடைக்கிறது. தலித் பிரச்சினை, 1977-ல் இந்திராகாந்தி ஆட்சியில் நடந்த எமர்ஜென்சி போனஆ பிரச்சினைகளை மையப்படுத்தி அழகான பிளாஷ்பேக் விரிகிறது. அந்த படம் ஏன் நின்றுப்போனது? அந்த படத்தில் நடித்த நடிக,நடிகைகள் என்ன ஆனார்கள் என்று லூயிஸ் பாபு விவரிக்கிறார்.

திரைப்படத்தில் மெல்லிய அங்கதம் ஆங்காங்கு விரவி கிடக்கிறது. மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவள் வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அவளாது தந்தை அழைத்து வருகிறார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்கிறார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்கிறார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா,அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருகிறார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார்.
மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைக்கிறார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்கிறாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்கும் இடம்.

இன்னொரு காட்சி. தன் அப்பாவை மோசமாக விமர்சித்து திரைப்படம் எடுப்பதாக கேள்விப்பட்டு அடியாட்களுடன் கோபமாக வருகிறார் ஜமீன்தார் மகன்(நடிகர் சீமான்) . அவர் முதன்முறையாக அப்போதுதான் ஷூட்டிங் பார்க் க்கிறார். அவர் பிரகாஷ்ராஜிடம் வெகுளித்தனமாக படப்பிடிப்பு பற்றி கேள்வி கேட்பது. மணிமேகலையிடம் காதலை சொல்லும் அவளது தமிழ் வாத்தியாரை கண்டு மணிமேகலை சிரிப்பது.. சொல்லிக்கொண்டே போகலாம்.

சேரனின் நடிப்பு பிரமாதம். மணிமேகலை கனவில் அவர் நடனம் ஆடும்போதெல்லாம் பிண்ணனி இசை ஒன்று ஒலிக்கும்.கேட்டு பாருங்கள். நாதஸ்வரம், உருமி எல்லாம் கலந்து நாட்டுபுறக்கூத்து இசை. அந்த இசையில் சொக்கி போய் மீண்டும்,மீண்டும் கேட்டேன். அதைவிட சேரன் ஆடும் அந்த துள்ளலான நடனம்..அட..அட.. அட. அருமை. அருமை. இந்த படத்தின் இயக்குனர் டி.வி. சந்திரன். எடிட்டர் வேணுகோபால். இசையமைத்திருப்பவர் ஐசக்.தாமஸ்.கோட்டுகாபள்ளி.