Friday, February 26, 2010

கற்பு

கற்பு
----
கற்பு பற்றிய
கருத்து முரண்பாட்டில்
கோயில் கட்டி கும்பிட்ட
நடிகையொருத்தியின் சிலையை
இடித்துவிட்டோம்
கடவுளென்றால் கடவுள்
கற்பென்றால் கற்பு
உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை

Wednesday, February 24, 2010

கண்டதே காட்சி - விகடன் கவிதை

இந்த வார விகடனில் வெளிவந்த எனது கண்டதே காட்சி எ‌ன்ற கவிதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்...

கண்டதே காட்சி
———————————————
ஒரு குத்துப்பாட்டுக்கும்
ஒரு கல்லூரிப்பாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
விளம்பரத்தில்
குளிர் பானம்
ஆயத்த ஆடைகள் விற்கிறார்கள்


ஒரு கல்லூரிப்பாட்டுக்கும்
ஒரு காதல்பாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
காண்டோம்,சானிடரி நாப்கின்கள்
விற்கிறார்கள்
சிவப்பழகு கிரீம் விற்கிறார்கள்
புதுமாடல் பைக் விற்கிறார்கள்


ஒரு காதல்பாட்டுக்கும்
ஒரு குடும்பபாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
மிருதுவான சப்பாத்தி
கோதுமை மாவு,சமையல் எண்ணெய்


ஒரு குடும்பப்பாட்டுக்கும்
ஒரு தத்துவப்பாட்டுக்கும் இடையே
செய்கூலி சேதாரமற்ற நகைகள்
காப்பீட்டு திட்டம்
ஓய்வூதிய திட்ட விளம்பரங்கள் வருகின்றன


தத்துவப்பாட்டின் இறுதியில்
சீர்காழி மெதுவாக முடிக்கிறார்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா….
தொலைக்காட்சியை அணைத்துவிட்டு
அனைவரும் நிம்மதியாக
உறங்கச் செல்கிறார்கள்


நன்றி
என்.விநாயக முருகன்

தெளிவு

தெளிவு
———————
ஒரு பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
மகனையோ,மகளையோ சுமந்து
ஆயாசமாய் திரும்பும்
தகப்பன்மார்கள் சற்று இளைப்பாறலாம்

ஒரு கோவிலின் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
தத்துவ, வேதாந்த விசாரங்களில்
களைத்து முடியும்,அடியும்
காண முடியாத பக்தர்களுக்கு
கொஞ்சம் கடவுள் தெரியலாம்

ஒரு சினிமா தியேட்டர் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
‌சில செளகரியங்கள் உள்ளன
தலைவலியுடன் திரும்புகிறவர்கள்
ஒரு கட்டிங் அடித்துவிட்டு
இயக்குநரையோ,கதாநாயகனையோ
தீட்டி தீர்த்து விட்டு போகலாம்

ஒரு மருத்துவமனை பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
‌சில செளகரியங்கள் உள்ளன
பிணவறைகளை காவல் காக்கும்
இரவு காவலர்களுக்கு தேவைப்படலாம்
ஆயிரம் பேரை கொன்றவர்கள்
பிழைத்த ஒருவனுக்காக கொண்டாடலாம்

ஒரு பேருந்து நிறுத்தம் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
‌சில செளகரியங்கள் உள்ளன
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாவென்று
குதிக்கும் கணவன்மார்கள்
களித்து திரும்பலாம்

ஒரு டாஸ்மாக் கடை பக்கத்தில்
இன்னொரு டாஸ்மாக் கடை
இருக்கக்கூடாது என்பதில் மட்டும்
தெளிவாகவே இருக்கிறார்கள்
காரணமும் சொல்கிறார்கள்

ஒரு பள்ளிக்கூடம்
ஒரு கோவில்
ஒரு சினிமா தியேட்டர்
ஒரு மருத்துவமனை
ஒரு பேருந்து நிறுத்தம்
போலில்லையாம் ஒரு டாஸ்மாக் கடை

Tuesday, February 23, 2010

டாமியின் வீட்டுக்காரர்

டாமியின் வீட்டுக்காரர்
--------------------

நாயோடு அவர் பேசிக்கொண்டே வருவார்
அண்ணாந்து அவரை பார்த்தபடி
கூடவே வரும் குள்ள டாமி.
என் வீடு வந்ததும்
மூவருமாய் நடை பயிற்சியை தொடருவோம்
எதைக் கேட்டாலும்
ஏடாகூடமாகவே பதில் சொல்லுவார் அவர்

டாமியின் மொழி தெரியுமா? கேட்டால்
இந்த நாய் என் பொண்டாட்டிபோல என்பார்
நாயும் பொண்டாட்டியும் ஒன்றா? கேட்டால்
நாயென்று சொல்லக்கூடாது கத்துவார்

நாய்களை பற்றி நீள நீளமாய் விவரிப்பார்
லேட்டா வ‌ந்தா அல்வாவோடதான் வரணுமென்று
சொல்லாதாம் நாய்கள்
பிளாட்டின நெக்லஸ் கேட்காதாம் நாய்கள்
வார இறுதியில்
மாயாஜால் போக வேண்டுமென்று அழுவாதாம்
புதுமாடல் பைக் கேட்காதாம்
குறிப்பாக துணிக்கடைகளில்
நாள்கணக்கில் காக்க வைக்காதாம்
செல்போனில் மணிக்கணக்காய்
அரட்டையடிக்காதாம்

விடைபெறும்போது கேட்க தோன்றியது
இத்தன வருசமாய் எப்படிங்க
இதோட குப்பை கொட்டுறீங்க…?
பதில் சொல்ல வாய் திறந்தார்.
உங்களிடம் கேட்கவில்லை
டாமியிடம் கேட்டேன்
அவர் முகம் சுருங்கிவிட்டது
தன் மனைவியிடம்
வேறு ஆண்கள் பேசுவதை
விரும்பமாட்டார் போலும்

Saturday, February 20, 2010

சாந்தாமணியும் இன்ன ‌பிற காதல் கதைகளும்


சாந்தாமணியும் இன்ன ‌பிற காதல் கதைகளும்

சமீபத்தில் ஒரு நாவல் படித்தேன். உலுக்கி எடுத்து விட்டது. வா.மு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன ‌பிற காதல் கதைகளும்.

நாவலின் முற்பகுதியில் கல்யாண்ஜி கவிதை வரிகள் போல கவித்துவம் தொக்கி நிற்கிறது.நாவல் படிக்க,படிக்க கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏறுகிறது. நாவலின் இரண்டாம்பகுதியில் உண்மையான வாழ்க்கை காட்டப்படுகிறது. திடீரென கல்யாண்ஜி காணாமல் போய் கலாப்ரியா கவிதைகள் வரிகள் போல வாழ்க்கையின் கவுச்சியும்,வலியும் உக்கிரமாக தாக்குகிறது.

விதவிதமான பெண்ணுடல்கள் அவர்கள் எதிர்கொள்ளும் வலிகள் பெண்ணுடல்கள் ‌மீது அவிழ்த்துவிடப்படும் கட்டற்ற வன்முறை எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார். சிலர் முகம் சுழிக்கலாம். சிலர் மூக்கை பொத்தலாம். சமூகத்தில் இதெல்லாம் நடக்கவே இல்லை எ‌ன்று யாராவது சொல்ல முடியுமா?

ஜி.நாகராஜன் உலகில் வரும் பெண்களின் வாழ்வு, அக நெருக்கடிகள், வாழக்கை சிக்கல்கள் ‌மிக ‌மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். வா.மு.கோவிடம் இந்த நுட்ப பதிவு மட்டும் மிஸ்ஸிங் எ‌ன்று தோன்றுகிறது. ‌சில காதல் (!?) கதைகள் மேலோட்டமாக தினந்தந்தி கள்ளக்காதல் செய்திகள் போல மட்டும் வ‌ந்து ஒட்டாமல் போகிறது. உதாரணம் எங்கள் ஊரில் பிட்டு படம் ஓட்டும் தியேட்டர்களின் கழிப்பறைகளில் திருநங்கைகள் வாய்போட்டு விடுவார்கள். மெரினா‌‌‌ பீச்சிலும் சென்னையில் ‌சில கட்டண கழிப்பறைகளிலும் இ‌து போன்ற விஷயங்களை பார்த்துள்ளேன். வா.மு.கோமு இதை பதிவு செய்துள்ளார். அதேநேரம் அந்த திருநங்கைகள் எதிர்கொள்ளும் புற உலகின் நெருக்கடிகள், அகசிக்கல்கள் மிஸ்ஸிங். நவீன உலகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான இந்த செல்போன் பலருக்கு சுயஇன்ப வடிகலாக இருக்கிறது. இதை அழகாக பதிவு செய்துள்ளார். ஆனா‌‌‌ல் இ‌துவே ஒரு கட்டத்தில் ஓவராகி சாருவின் ராஸலீலா நாவல் நினைவுக்கு வரு‌கிறது.

இந்த நாவல் பற்றி சில வலைப்பூக்களில் இதையெல்லாமா போய் எழுதனும்? எ‌ன்று சமூக அக்கறையுடன் எழுதியிருந்தார்கள்.

அவர்களுக்கு இந்த வரிகள்....

''நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் 'இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது' என்று வேண்டுமானால் கேளுங்கள். ''இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?'' என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்''

குறத்தி முடுக்கு நாவலில் ஜி.நாகராஜன்

எனது வருத்தமும் இதுவே. இன்னும் கொஞ்சம் முழுமைப் படுத்தியிருக்கலாம். வா.மு.கோமு நாற்பதே நாட்களில் இந்த நாவலை எழுதியிருந்ததாக முன்னுரையில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Friday, February 19, 2010

சில்லறை

சில்லறை
—————————
நான் அவனுடன்
சுற்றியலைந்த நாட்களில்
கோனா‌‌‌ர் மாந்தோப்பில்
மாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்

பெண்கள் படித்துறைப்பக்கம்
மறைந்திருந்து பார்த்ததில்
பஞ்சாயத்தில் செருப்படி விழுந்திருக்கிறது

ஊருக்கு வெளியே ஓடும்
பலான படத்தை பார்க்க
அழைத்துச் சென்றதே அவன்தான்

இந்த முறை
ஊருக்கு சென்ற போது
சந்திக்க நேரிட்டது
தொப்பையும் சங்கிலியும் மின்ன
ஆள் பருத்திருந்தான்
எம்.எல்.ஏவாகி விட்டான்
என் பால்ய சிநேகிதன்

இன்னுமொன்றும்
சொல்லியாக வேண்டும்

ஒருமுறை
கோயில் உண்டியலை
உடைத்து திருடியிருக்கிறான்

சட்டென நிழலாட நினைவூட்டினேன்
சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

இப்போதெல்லாம்
அது போன்ற
சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்

Tuesday, February 16, 2010

குரு

குரு
-----
தேநீர்க்கடையினுள்
நான் பார்த்த மனிதர்
தலைக்கு பின்னால் ஒளிவட்டம்


அர‌சிய‌ல் பேசாதீர் மீறி
அடித்துக் கொண்டிருந்தோம்
அவரை பார்த்தேன்
அமைதியாக தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்


விலைவாசி ஏற்றம் பற்றி
விலாவாரியாக விவாதிக்க ஆரம்பித்தோம்
அவரை பார்த்தேன்
கருமமே கண்ணாய் உறிஞ்சிக்கொண்டிருந்தார்


கடவுள் பற்றியும்
வாழ்க்கை பற்றியும் பேச்சை தொடர்ந்தோம்
அவரை பார்த்தேன்
மவுனப்புன்னகையுடன் டீயை பார்த்தார்


காராசாரமாய் ஆரம்பித்தோம்
கள்ளக்காதல் செய்தியொன்றை
அவரை பார்த்தேன்
கடைசிக்கோப்பை அமிர்தத்தை ரசித்துக்கொண்டிருந்தார்
ஜென் குருவாய் இருப்பாரோ?


தியானத்தின் உச்சத்தில்
வெறுமையான கோப்பையுடன்
எழுந்தவர்
என்னை கைகாட்டி
ஏதோ சொல்லி நடந்தார்
க‌ல்லா முதலாளியிடம்
ஜென் குருவேதான்


பரவசமாய் ஓடிய என்னை
வழிமறித்த முதலாளி
இரண்டு டீக்கு காசு தரணும்
கேட்ட நொடியில் ஞானம் பெற்றேன்

Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை-5

சென்னைக் காதல்
----------------

தண்ணி லாரி சத்தம் கேட்டு
ஓடிய மனைவியை
ஐந்து நிமிடம் கழித்து
அழைக்கிறான்
அலுவலகம் செல்லும்
வாசுகியின் கணவன்

குற்றம் பார்க்கின்
சுற்றம் இ‌ல்லை
குடத்தை பார்க்கின்
காதல் இல்லை

காதலர்தின கவிதை-4

தெய்வீகக்காதல்
----------------------
கோயிலில் காதலியை
சந்திப்பவனா‌‌‌ல்
ஒருக்கணமேனும் மானசீகமாக
ஒப்பிடாமல் கும்பிட முடிந்ததில்லை
காதலியின் முலையையும்
பெண்தெய்வத்தின் முலையையும்

காதலர்தின கவிதை-3

காதலின் முடிவு
---------------

ராமசாமியும் விமலாவும்
பக்கத்து பக்கத்து வீடு
முனுசாமியும் கமலாவும்
பக்கத்து பக்கத்து வீடு

எதிர்வீட்டு கமலாவை
ராமசாமி மானசீகமாக காதலித்தான்

எதிர்வீட்டு விமலாவை
முனுசாமி மானசீகமாக காதலித்தான்

திருமணத்துக்கு பிறகு
ராமசாமிக்கு விமலா மேல்
வந்தது காதல்
முனுசாமிக்கு கமலா மேல்

எல்லா காதலும்
இடவலமாற்றத்தில்தான் முடிகிறது

காதலர்தின கவிதை -2

மானசீக காதல்
----------------

இதயத்தை பார்த்து
காதலிப்பதொன்றும்
சிரமமாக தெரியவில்லை

என்ன...
இரண்டு முலைகளில்
எந்த முலையில் இதயம்
எ‌ன்பதில்தான் குழம்புகிறார்கள்

காதலர்தின கவிதை-1

அதற்கு தக...
-------------

பத்தாவது படிக்கும் பத்மா
பன்னிரண்டாம் வகுப்பு ஆனந்துடன்
ஓடிப்போனா‌‌‌ளாம்

சின்ன வயசுல படித்தது
நேற்று இரவுதான்
அர்த்தமும் புரிந்தது
கற்றாரை கற்றாரே காமுறுவர்

Wednesday, February 10, 2010

விகடனில் மூன்று கவிதைகள் - இமைச்சிறகு

காதலர் தின ஸ்பெஷலாக வந்த இந்த வார விகடனில் எனது மூன்று கவிதைகள்...

இமைச்சிறகு

முதல்முறை பார்த்தபோது
கோயில் தூணில்
நான் தட்டிச்சென்ற
திருநீறை பூசிக்கொண்டிருந்தாய்
காதல் தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்குமென்று அறிந்தேன்

ஒரு மழை இரவில்
எதிர் ஜன்னலில் நீ
உன் அக்கா குழந்தைக்காக
கத்திக்கப்பல் செய்து
விளையாட்டு காட்டுகிறாய்
ரசிக்கிறேன் நான்
கன்னத்தில் கைவைத்தபடி
யாரோ குரல் ஒலிக்க
ஓடுகிறாய் உள்ளே
மீண்டும் ஒரு பார்வை வீசி…
கத்தி இறங்கியது.
கப்பல் மூழ்கியது


ஒரு நிமிடத்தில்
இருபது எஸ்எம்எஸ்
அனுப்பியது உலக சாதனைதான்
அதைச் சொல்லப்போக
முப்பது முறை
இமைகளை சிறகடித்து
அதையும் முறியடித்தாய்

Tuesday, February 9, 2010

சூலம்

சூலம்

வடக்குத்தெரு ராமசாமி
வட்டிப்பணம் தந்து ஆறுமாதமாகிறது

வசூலிக்க கிளம்புகையில்
தொலைக்காட்சி ஜோதிடசிகாமணி
மேஷ ராசி அன்பர்களுக்கு
வடக்கே சூலம்
தென்கிழக்கு திசையே உகந்தது
உகந்த நிறம் பச்சை

பச்சை சட்டையுடன்
பின்வாசல் வழியாக கிளம்பினேன்
தெற்குதெருவில் நுழைந்து
மேற்கில் ஒரு முட்டுச்சந்தில்
மதில்மேல் ஏறிக்குதித்தேன்
‌பிறகு கிழக்குப்பக்க
தேனீர்க்கடையில் நுழைந்து
தென்கிழக்காக வ‌ந்து
ராமசாமி வீட்டுக்குள் குதித்தேன்

சூலத்தை குழப்பிவிட்டு
வீட்டுக்குள் நுழைகையில்
சன்னமாய் கேட்டது
‌சில விசும்பலொலிகள்
‌சில ஒப்பாரிகள்

நேற்று இரவு யாரோ
டாஸ்மாக் கடையில்
சூலத்தால் குத்திவிட்டானாம்
ராமசாமி குடல் சரிந்துவிட்டதாம்

Wednesday, February 3, 2010

ராக்கோழி

(எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு சிறுகதைப்போட்டிக்காக எழுதியது... எனக்கு சிறுகதை எழுத தெரியாது..ச்சும்மா..ஒரு டிரை செய்தது)


ராக்கோழி
------------

பிரான்ஸ் தேசம் பற்றி சுவையாக விவரித்து எழுதப்பட்டிருந்தது அந்த கட்டுரை.தேவதைகள் வசிக்குமிடம் என்று முடித்திருந்தது சற்று மிகையாக தெரிந்தாலும் ரசித்து படித்தேன். கட்டுரை எழுதிய இந்த ரைட்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். மணியை பார்த்தேன். ஒன்பது. கணித்திரையை லாக் செய்தேன். அமெரிக்காகாரனிடம் இருந்து இன்னும் முப்பது நிமிடத்தில் போன் வரும். எப்படியெல்லாம் கத்தப்போகிறானோ? குடலை ரம்பத்தால் அறுப்பது போல இருந்தது. போன ஜென்மத்துல செஞ்ச பாவம் சாப்ட்வேர் இன்ஜினியராக பிறந்து தொலைத்து விட்டேன். சகதர்மினியிடமிருந்து எப்ப கிளம்புவீங்க எ‌ன்று எஸ்.எம்.எஸ். பதில் அனுப்பவில்லை. மூன்று முறை போன் செய்து திட்டு வாங்கியவள் பேச பயந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். நாய் பொழைப்பு. கீழே கேண்டினில் என்ன இருக்கும்? தோசை? நாய் கூட திங்காது. வாய்ல வைக்க முடியாத கண்றாவி. கீழே இறங்கி வந்தேன். அப்படியே அலுவலகம் வெளியே நடந்து வ‌ந்து ஒரு டீ குடித்தேன். ஒரு தம்மை பார் வைத்தேன். அடிநெஞ்சு வரை கோபத்துடன் இழுத்து கோர்வையாக வெளியே விட்டேன். புரை ஏறியது.அம்முக்குட்டி நினைத்திருப்பாள். இந்நேரம் தூங்கியிருப்பாளா? வாட்சை பார்த்தேன். அப்பா சீக்கிரம் வந்துடுவாரு எ‌ன்று சொல்லி மனைவி விழிக்க வைத்திருக்கலாம். சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தன. சுட்ட பழத்தை காலில் போட்டு நசுக்கி அலுவலகம் உள்ளே நடக்க ஆரம்பித்தேன். ஆபீசா இ‌து? இரண்டு கிலோமீட்டருக்கு கட்டியிருக்காங்க. ஒரு தம் அடிக்க கூட இரண்டு கிலோமீட்டர். என்ன வாழ்க்கை இ‌து? அந்த ரைட்டரின் தளத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ச்சே. பிரான்ஸில் பிறந்திருக்கலாம். அடு‌த்த நொடியே இன்னொரு மூலை சிரித்தது. எங்க பொறந்தா என்ன? இந்தியனா‌‌‌ பொறந்தா போற இடம் எல்லாத்துலயும் இப்படித்தான் வேலை செய்ய வேண்டும். அடுத்த ஜென்மத்துல பிரான்ஸில பிரான்ஸ் குடிமகனா‌ ‌பிறந்து டக்கீலா அடிக்கனும். இல்ல திருக்காட்டுப்பள்ளி கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல பி.டி.மாஸ்டரா பொறக்கனும்.


க்யூபிக்கினுள் நுழைந்து கணினித்திரையை திறந்தேன் செல்போனை வைப்ரேட்டரில் வைக்கவும் அதிர ஆரம்பித்தது. வீட்டிலிருந்து போன்.இம்சை.இம்சை அலுவலக தொலைபேசிக்கு உயிர் கொடுத்தேன். Please Enter your PassCode என்றாள் முகம் தெரியாத ஆங்கில தேவதை. அடு‌த்த ஜென்மத்துல பிரான்ஸில பொறக்கும்போது மறக்காம இவளை கல்யாணம் செய்துக்கொள்ளவேண்டும். பாஸ்கோடை அவளே எண்டர் செய்து தருவாள். என்ன கல்யாணத்துக்கு பிறகு இன்னொரு பிரான்ஸ்காரன் இடையில் ரூட் போடாம தேவுடு காக்கனும். ஆன்சைட்ல இருக்கும் இந்திய மேனேஜேர் கத்தினார்‌‌‌. ச்சே அடுத்த ஜென்மத்துலயாவது பிரான்ஸ்காரங்க யாராவது மேனேஜேரா வரனும். நான் அனுப்பிய டாக்குமெண்டில் ஒற்றுப்பிழை, சந்திப்பிழை,இலக்கணப்பிழை எல்லாம் கண்டுபிடித்து கத்தி முடித்தபோது மணி பத்து. சக அலுவலக நண்பன் பக்கத்து இருக்கை மேல் ஒட்டியிருந்த Rose is the Rose கண்ணில் பட்டது.

ஸேக்ஸ்பியரிடம் எநத ஆன்சைட் மேனேஜேர் கத்தினாரோ? என்ன வெறுப்புல இப்படி எழுதியிருப்பான் மனுஷன்? ஷேக்ஸ்பியர் பிரான்ஸா? அய்யோ. வளசரவாக்கத்துக்கு பத்து மணி CAB பதிவு செய்திருந்தது நினைவுக்கு வந்தது. இறங்கி ஓட ஆரம்பித்தேன்.

வெள்ளை நிற இண்டிகோ அலுவலக வாசலில் நின்றிருந்தது. டிரைவர் இருக்கை பக்கத்துல செத்த சவம் போல ஒருத்தன் அமர்ந்திருந்தான். பாவம் இவனது கவிதையில் எத்தனை ஒற்றுப்பிழை சந்திப்பிழையோ? அடு‌த்த முறை மேனேஜேர் கத்தினா‌‌‌ல் எத்தனை பிழை இருக்கோ அந்த அளவு சம்பளம் கொடுங்க எ‌ன்று கேட்க வேண்டும். அது சரி. பிழையே இல்லாவிட்டால் கவிதைக்கு என்ன இரண்டு மடங்கு சன்மானமா கிடைக்கப்போகிறது? பின்சீட்டில் அம்ர்ந்தேன். இடதுப்பக்க சீட் காலியாக இருந்தது. ஆசுவாசமாக சாய்ந்து போன் செய்தேன்.

“கிளம்பியாச்சு” என்றேன் மனைவியிடம்.

“ஒரு மணிநேரத்துல வந்துடறேன். கதவை பூட்டிக்க. வீட்டுக்கிட்ட வந்தவுடன் மிஸ்டு கால் தர்றேன்.
அம்மு தூங்கிட்டாளா?” கேட்டேன்

“இன்னும் இல்ல. அப்பா…அப்பானு மூனு தடவை சொல்லிட்டா. அந்த மஞ்சக்கரடிய கட்டி பிடிச்சுட்டு படுத்துக்கிடக்கறா” மனைவி சொன்னாள்.

“வந்துடறேன். இன்னும் சாப்பிடல. சாம்பார் இருக்கா? சரி வச்சுடு.வந்துடறேன். ”

கடந்த இரண்டு வாரங்களாகவே அலுவலகம் முடித்து வீடு செல்ல பத்து மணிக்கு வீட்டுக்கு செல்வது வாடிக்கையாக இருக்கின்றது. யாரோ இண்டிகோவின் இடதுப்பக்க கதவை தட்டுவது போல இருந்தது. எந்த சவமோ? கதவு இறுக்கமாக பிடித்திருந்தது. திறக்க உதவினேன். சத்தியமா பிரான்ஸில இருக்கறோமா என்று சந்தேகம் வந்தது. போனி டெயில் வைத்திருந்தாள். தேங்க்யூ என்றபடி என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். சினேகமாக என்னை பார்த்து புன்னகை செய்தது போல எனக்கு தோன்றியது. பிரமையோ?

வண்டியை எடுக்க வந்த டிரைவரை பார்த்தேன். புதுசாக இருந்தார்.

“நீங்க கிண்டியா” எ‌ன்று முன்சீட்டில் இருந்தவனை கேட்டார்.

“வளசரவாக்கம்தான் கடைசியா?” என்னை பார்த்தார். நான் அவளை பார்த்தேன். வடபழனி எ‌ன்று சொல்லியபடி டிரைவர் தந்த நோட்டில் கையெழுத்து போட்டாள்.

வண்டி புறப்பட்டதும் டிரைவர் எப்.எம்மை போட்டார். நான் அடிச்சா தாங்க மாட்ட கத்தியது. அந்த எழுத்தாளரின் பிளாக்கில் படித்த பிரான்ஸ் இசைகலைஞனும், டக்குமுரா கொட்டாரா வரிகளும் மனதில் ஒடியது. ச்சே இந்த பாடல் வரிகள் பிரான்ஸில் இருந்தால் எப்படி இருக்கும்? வண்டி டைடல் பார்க் முன்னா‌‌‌ல் போய்க்கொண்டிருந்தது. பேஷன் டெக்னாலஜி கல்லூரி முன்னால் பிரான்ஸ் தேச உடைகளை அணிந்தபடி இளைஞர்களும், இளைஞிகளும் அமர்ந்திருந்தனர். இந்திய பொருளாதார பிரச்சினைகள் மற்றும் பிரான்ஸ் தேச அரசியல் பேசியபடி அமர்ந்திருந்தனர்.ஆரோக்கியமான விஷயம். ஆனால் ஏன் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து காதோடு பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஏதாவது அரசாங்க சீக்ரெட்டாக இருக்கும். பக்கத்து இருக்கை தேவதை இடதுப்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது. மூன்று வருடமாக இதே அலுவலகத்தில் வேலை செய்கின்றேன். இந்த பெண்ணை ஒருமுறை கூட பார்த்ததில்லையே. அதுசரி தினந்தோறும் பார்த்தால் அது தேவதையா? ஒருக்கணம் மனைவி நினைவு வ‌ந்து மறந்தது. அம்முக்குட்டி தூங்கியிருப்பாளா?

இடதுப்பக்கம் பார்த்தேன். சாலையோர பிளாட்பாரத்தில் மனிதர்கள் படுத்து கிடந்தார்கள் தலைக்கு வானத்தை கூரையாக வைத்து. ஆறு வயது‌ குழந்தையொன்று தலைக்கு இரண்டு செங்கல்லை முட்டு வைத்து படுத்து இருந்தது. கரடி பொம்மை இல்லாட்டி படுக்கமாட்டேன் போ எ‌ன்று சொல்லும் அம்முக்குட்டி முகம் வ‌ந்து போனது. பிரான்ஸில சாலையோர மனிதர்கள் இருப்பார்கள்? இதுபோல செங்கல்லை முட்டு வைத்து தூங்கும் மனிதர்கள் இருப்பார்கள்? ச்சே.. இருக்காது. அந்த ரைட்டர் பிரான்ஸ் சொர்ர்க்கமென்று அவரது தளத்தில் எழுதியிருந்தாரே. அவரு பொய் சொல்ல மாட்டார். மணியை பார்த்தேன். பத்து முப்பது. கிண்டியில் முன் இருக்கையில் இருந்த சவம் இறங்கியது.

கிண்டி தாண்டும்போது சாலையோர விளக்கு கம்பங்களின் வெளிச்சம் பின் சீட்டில் விழ லேசாக நாசூக்காக அவளை பார்த்தேன். த்ரிஷாவா, நயனா எ‌ன்று மனது பட்டிமன்றம் நடத்தியது. வெளியே டாஸ்மாக் கடைகள் இன்னும் திறந்திருந்தன. ரோட்டிலேயே நின்று குடித்தபடி ஆபாசமாக கத்திக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் கொஞ்சம் மிரண்டிருந்தது போல எனக்கு தோன்றியது. பிரான்ஸ் போல ந‌ல்ல தேசத்தை எங்கு தேடினாலும் கிடைக்காது. அ‌ங்கு எல்லாம் ரெட் ஒயின், வொயிட் ஒயின்தான் சாப்பிடுவார்கள். இதுபோல கட்டிங் அடித்து ரோட்டில் படுத்து கிடக்க மாட்டார்கள்.

டிரைவரை பார்த்தேன். சலனமற்று இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. வெளியே ஜகன்மோகினி போஸ்டரில் நமீதா அடுப்புக்குள் கால்களை விட்டிருப்பதை பார்த்தபடி வண்டி ஓட்டிகொண்டிருந்தார். நான் பார்ப்பதை கண்ணாடி வழியாக டிரைவர் கவனித்திருக்கக்கூடும். இந்த டிரைவரை இப்போதுதான் புதிதாக பார்க்கின்றேன்.

“போரூர் வழியா போலாமா சர்? உங்கள வளசரவாக்கத்துல வுட்டுட்டு இவங்கள வடபழனில டிராப் பண்ணிடறேன். போரூர் பக்கம் ட்ராபிக் இருக்காது. “ டிரைவர் கேட்டார்.டிரைவர் பேச்சில் கொஞ்சம் தெலுங்கு வாடை வீசியது.

வாகன வெளிச்சம் பட்டு சாலையின் இருபக்கமும் cat’s eye மின்னியது. வெறிப்பிடித்த பூனையின் கண்கள் போல சிவப்பாய் இருந்தன

அந்த பெண்ணை ஒருக்கணம் திரும்பி பார்த்தேன். அவள் கண்களில் ஏதோ பயம் தெரிந்தது போல உணர்ந்தேன். வண்டி கத்திப்பாரா ஜங்க்ஷனை தொட்டது.

“இல்ல நீங்க வடபழனி வழியாவே போங்க.” சொன்னேன்

“இல்ல சார் அது சுத்து.லேட்டாகும். “உங்கள முதல்ல டிராப் பண்ணிட்டு இவங்கள வடபழனில வுட்டுடறேன்” “ டிரைவர் சொன்னார்.

அவள் பதற்றமாக இருப்பது போல எனக்கு தெரிந்தது.எனக்கு பி.பி ஏறியது. “வடபழனி வழியாவே போங்க. நான் இன்னும் சாப்பிடல. ஏதாவது வாங்கிட்டு வீட்டுக்கு போகனும். போரூர்ல இந்நேரத்துக்கு மாட்டுக்கறி பிரியாணிதான் கிடைக்கும்.” கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னேன் என்று சொல்வதை விட கத்தினேன் என்று சொல்ல வேண்டும். டிரைவர் எதுவும் பேசவில்லை. மெளனமாக ஒட்ட ஆரம்பித்தார்.

கத்திப்பாரா மேம்பாலத்தில் வண்டி ஏறி வளைந்து இறங்கி ஏறி அமர்க்களமாக இருந்தது. வண்ணத்துப்பூச்சி முதுகில் ஏறி பார்ப்பது போல இருந்தது. கத்திப்பாரா மேம்பாலத்தில் பயணிக்கும்போது வண்டியின் இடது வலது எந்த புறம் அம்ர்ந்திருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் நிலா பார்க்க முடிந்தது.பிரான்‌சில நிலா சத்தியமாக இதை ‌விட இன்னும் அழகாக இருக்கும்.

வடபழனியில் அவள் வீடு அருகே இறங்கிக்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டுக்குள் செல்வது தெரிந்தது. என்ன அவசரமோ?

வண்டி விருகம்பாக்கம் தாண்டியது.

“ஹோட்டல்ல நிப்பாட்டவா?” டிரைவர் கேட்டார்.

“வேண்டாம் பசிக்கல. வளசரவாக்கத்துல நிப்பாட்டுங்க” சொன்னேன். டிரைவர் என்னை விநோதமாக ஒரு வினாடி திரும்பி பார்த்து மீண்டும் ஒட்ட ஆரம்பித்தார்.

வளசரவாக்கம் நெருங்கும்போது மிஸ்டு கால் தந்தேன். அபூர்வமாக ஒரு வீட்டின் வாசலில் கோலம் போட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து செம்பருத்தி பூவை நட்டு வைத்திருந்தார்கள். மார்கழி மாத கோலம் அழகாகவே இருந்தது. சாலையில் இரண்டு மூன்று நாய்கள் அநியாயம் செய்துக்கொண்டிருந்தன. பிரான்‌‌ஸில் நாய்கள் இதுபோல சாலையில் அநியாயம் செய்யுமா எ‌ன்று தெரியவில்லை. ரைட்டரிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்க வேண்டும். மனைவி கவலையுடன் கேட்டின் அருகே நிற்பது தெரிந்தது. வீட்டினுள் நுழைந்தபோது அம்மு உறங்கி இருந்தாள். மணி பதினொன்று. மனைவி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

முகம் கழுவும்போது அந்தப்பெண் அவசர அவசரமாக வீட்டுக்குள் சென்றது மனதில் ஓடியது. என்ன அவசரமோ? ச்சே..அடு‌த்த ஜென்மத்துல பிரான்ஸ்ல பொறக்கனும்.

Tuesday, February 2, 2010

நான்கு கவிதைகள்

முன்னாள் காதலிகளை சந்திக்கையில்
———————————————————————————————

முன்னெப்போதும் இல்லாத
முன்னெச்சரிக்கையோடு
வார்த்தைகளை தேடிப்பிடித்து
பேச வேண்டியுள்ளது
ஒரு சதுரங்க ஆட்டத்தின்
நேர்த்தியோடும் சாதுர்யத்தோடும்
செயல்பட வேண்டியுள்ளது
எப்படி முடிப்பது ஆட்டத்தையென்று
உதறல் எடுக்கிறது

பலநேரங்களில்
அங்கிளுக்கு பை சொல்லுடாவென்று
அவர்களே செக்மேட் வைத்து
முடித்து விடுகிறார்கள்


கடைசிக் கோப்பை
——————————————————
கடைசிக்கோப்பை மதுவைப்பற்றி
கவிஞர்கள் பலர் சிலாகித்ததுண்டு

கிறிஸ்து அருந்திய
கடைசிக்கோப்பையும் கூடவே
முப்பது வெள்ளிக்காசுகளும் நினைவிலாடுகிறது

முத‌ல் கோப்பை மதுபோல
நண்பர்களோடு மோதி
போலியாக சந்தேகிக்க தேவையில்லை

ஒரு விருந்தில்
கடைசிக்கோப்பை மதுவின்போது
மேலாளரை நான் செருப்பால் அடிக்க
அவரும் சிரித்தபடி ஆமோதித்தது
நினைவிலாடுகின்றது

கடைசிக்கோப்பை
மதுவை குடிக்கும்போது
எதைக் கடித்தாலும் ருசிக்கின்றது

முத‌ல் காதலியின்
முத‌ல் முத்தம் போன்று
அவ்வளவு மகிழ்ச்சியானது

அவ்வளவு மூர்க்கமானது
அவ்வளவு கிக்கானது

பிரச்சினை என்னவென்றால்
கடைசிக்கோப்பை எதுவென்று
கணக்கு வைத்துக்கொள்வதுதான்


பின்னர்
-------
இந்த ஊரில்
எனக்கு தெரிந்து
எத்தனையோ பேர் இறந்துவிட்டார்கள்
கடைசியாக
எனக்கே எனக்கு மட்டும்
தெரிந்த ஒருவரும் இறந்துபோனா‌‌‌ர்
அதற்குபின்னர்
யார் இறந்ததும் எனக்கு தெரியவில்லை


பரிசோதனை
------------
மின்சார ரயிலில் கேட்டது
யாரோ யாரிடமோ
சொல்லிக்கொண்டிருந்தார்
சாவற வயசா சார்? அவனுக்கு.....
இப்படி அல்பாயுசல போயிட்டானே...
கலவரமாகிவிட்டது எனக்கு
சக்கரை கொழுப்பு போல
மாதாமாதம் இனி
சாவற வயசையும்
சரிபார்க்க வேண்டும்

கவிதை தோரணம்

எங்கள் காதல்
—————————————

வலதுப்பக்கம் வருபவள் கமலா
இடதுப்பக்கம் வருபவள் விமலா
நடுவில் வருபவள்தான் சசிகலா

கமலாவுக்கு தெரியாது
ஒருநொடி மானசீகமாக
விமலாவை பார்த்தது

கமலாவை திருட்டுத்தனமாக
பார்த்தது விமலாவுக்கு தெரியாது

இருவரையும் பார்த்தது
சசிகலாவுக்கு தெரியவே தெரியாது

சசிகலாவை இப்படி
திருட்டுத்தனமாக பார்க்க வேண்டிய
அவசியம் எனக்கு இ‌ல்லை
ஏனென்றால் அவள்தான் என் காதலி


மனைவியுடன் ஒரு சண்டை
——————————————————————————
சிலநேரங்களில்
குரங்கை பிடித்து
கிளியின் கையில் கொடுப்பதும் உண்டு
கிளி பேச குரங்கு கேட்க
குரங்கு கேட்க கிளி பேச
என்று பார்க்க
தமாஷாகத்தான் இருக்கும்


உலகளந்தவர்
—————————————
பக்கத்து நாற்காலியில்
குடித்துக்கொண்டிருந்தவர்
முட்டைதோசையை பார்த்தபடி
முணுமுணுப்பது தெரிந்தது
நாசுக்காக கவனித்தேன்

நிலா மாதிரி வட்டமா இருக்கு என்றார்
மெல்லிய குரலில்
வட்டம் வட்டமா முட்டை என்றார்
முட்டைக்குள் ஒரு வட்டம் என்றார்
சன்னமாக ஒலித்தது
வட்டம்….நிலா…உலகம்
ஏதோ கவிதை போல இருந்தது

திரும்பி பார்த்தபோது
வாயில் உலகம் தெரிந்தது


வாக்குமூலம்
————————————
திருட்டு தம் அடிக்க
சுப்பிரமணி கற்றுக்கொடுத்தான்
பீர் குடிக்க கற்றுக்கொண்டது
எதிர் வீட்டு கோபாலனிடம்
சைட் அடிக்க சென்றது
மேலத்தெரு நண்பர்களோடு

இந்த பலான படம்
பார்க்கச் சென்றது மட்டும்
நானே எனது சொந்த முயற்சியில்

அதுவும் டி.வியில் பார்த்த
மகாபாரத ஏகலைவனின் பாதிப்பில்


ஒரு நாள்
—————————
ஒரு நாள் செத்துவிடுவோம்
என்றே நம்புகின்றோம்
ஒவ்வொருவரும்
அந்த ஒருநாள்
எது என்பதில்தான்
பிரச்சினையே