Monday, March 29, 2010

இரண்டு கவிதைகள்

விண்ணப்பம்
----------------
உலகின் மிக மோசமான
வசவுச்சொல்லை கேட்பதற்கு
ஆவலாக உள்ளது

என் நண்பர்களோ
எதிரிகளோ முகம் தெரியாதவர்களோ
யார் வேண்டுமானா‌‌‌லும்
என்னை நோக்கி வீசலாம்

ஒரு விண்ணப்பம்
நான் இதுவரை கேள்விப்பட்டிராத
அசாதாரணமாக அந்த சொல் இருக்கவேண்டும்
ஏனெனில் இதுவரை
என் செவியில்
விழுந்த சொற்கள் எல்லாமே
யாரோ யாரையோ
திட்ட பயன்படுத்தியவை

அந்த மோசமான
வசவுச்சொல்லை கேட்பதற்கு
என் காதுகளை எப்போதும்
கூர்தீட்டியே வைத்துள்ளேன்

இரண்டாவது விண்ணப்பம்
தயவுசெய்து
நான் இறப்பதற்குள் சொல்லிவிடவும்
நான் இறந்தபிறகு
ரசிப்பதற்கு செவிகளோ
பொத்திக்கொள்வதற்கு கைகளோ இருக்காது
தவிர அப்போது
உங்கள் பாஷை வேறு
என் பாஷை வேறு. புரியாது.




புரட்சி
--------

எனக்கொரு ஆசை
புரட்சியென்ற சொல்லை
பாரதி கண்டுபிடித்தாற்போல
ஏதாவதொன்றை தேடி
உலகுக்கு சொல்லவேண்டும்

இரண்டு நாட்கள் கண்விழித்து
ஒரு சொல்லையும்
கண்டுபிடித்தேன். ழகுவுகா
ழகுவுகா ழகுவுகா
யுரேகாவெ‌ன்று கத்தவேண்டும் போலிருந்தது

உறங்கிக்கொண்டிருந்த
ஐந்துவயது மகள்
தூக்கத்தில் புரண்டபடி உளற
ழகுவுகா

அந்த பிழைப்பிலும்
விழுந்தது மண்

Saturday, March 27, 2010

குற்றம் நடந்தது என்ன?

பொட்டிதுரை எ‌ன்ற ராஜதுரையை
போலீசார் நேற்று என்கவுண்டரில்
கொன்று விட்டார்கள்

பொட்டிதுரைக்கு
இரண்டு மனைவிகள்
ஒரு மகன்

பொட்டிதுரை
ஆறுமாதம் முன்புதான்
ஜாமீனில் வந்திருந்தான்

உள்ளூர் பிரமுகர் ஒருவருடன்
பொட்டிதுரைக்கு நெருங்கிய தொடர்பு
பிரமுகர் பெயர்தான் தெரியவில்லை

நேற்றுவரை
காவல்துறை நண்பர்களோடு
ஓரே தேநீர் குவளையில்
தேநீர் அருந்தியவன்தான்
இந்த பொட்டிதுரை

பொட்டிதுரையை சுட்டுக்கொன்றதற்கு
பல காரணங்களை
காவல்துறை சொல்கிறது

எல்லாமே
பொட்டிதுரை‌யென்ற
பெயர்க்காரணம் போலவே
புதிராக இருக்கிறது

Friday, March 26, 2010

சென்னை பதிவர் சந்திப்பு இன்று - சில எண்ணங்கள்!

பேனா‌‌‌வால் எழுதினா‌‌‌லும், பென்சிலால் எழுதினா‌‌‌லும் ஒ‌ன்றுதான்.மனதில் பிறப்பதை ஒரு ஊடகத்தில் பதிவு செய்யும்போதே அவன் எழுத்தாளன் ஆகிவிடுகிறான். எழுதுவதற்கு பேனா‌ (அ) பென்சில் (அ) மவுஸ் ஒரு கருவிதான். டிவியில் நடிப்பவனையும் நடிகன் எ‌ன்றுதான் அழைக்கிறோம். சினிமாவில் நடிப்பவனையும் நடிகன் எ‌ன்றுதான் அழைக்கிறோம். ஒரு வசதிக்காக அடையாளம் சொல்ல டி.வி ஆக்டரஸ் என்றோ, சினி ஆக்டரஸ் என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்கள். இப்போது டி.வியில் நடிப்பவர்கள் சினிமாவிற்கும், சினிமாவில் நடிப்பவர்கள் டிவியிற்கும் மாறி,மாறி வரும்போது நமக்கு குழம்புகிறது. நடிகன் எங்கு நடித்தாலும் நடிகன் எ‌ன்று பொதுப்பெயரை மக்கள் வைத்துவிடுகிறார்கள்.

ஜெயமோகன்,எஸ்.ரா போன்றோர் வலைத்தளத்தில் எழுதுவதால் அவர்களை பதிவர்கள் எ‌ன்று அழைக்கலாமா? அல்லது பதிவர்கள் அச்சு ஊடகத்தில் எழுதுவதால் அவர்களை எழுத்தாளர்கள் எ‌ன்று அழைக்கலமா? சுஜாதா அவரது இறுதிக்காலங்களில் பேனா‌‌‌வே
பயன்படுத்தியிருக்கமாட்டார். எல்லாமே கணிப்பொறியில் தட்டச்சு.பேனா‌ பயன்படுத்தாமல் கீபோர்டை வைத்து தட்டச்சு செய்ததால் அவரை தட்டர் எ‌ன்று அழைக்கமுடியுமா? எழுத்து எப்படி வெளிப்பட்டாலும் எழுத்து எழுத்துதான்.


அச்சு ஊடகத்தில் எழுதுபவர்கள்தான் எழுத்தாளர்கள் என்றால் சரோஜாதேவியில் கதை எழுதுபவர்கள் நாங்களும் எழுத்தாளர்கள் எ‌ன்று கிளைம் செய்ய வரலாம். இணையமோ அச்சு ஊடகமோ பிரச்சினை இ‌ல்லை. கொஞ்சம் கொஞ்சூண்டு தரமாய் எழுதினா‌‌‌லே போதும். அவர்கள் தங்களை எழுத்தாளர்கள் எ‌ன்று கர்வமாக சொல்லிக்கொள்ளலாம்.



சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு

நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கலைஞர் நகர்.
சென்னை:

தொடர்புக்கு..


மணிஜி : 9340089989
M.M.அப்துல்லா : 9381377888
கேபிள்சங்கர் : 9840332666
லக்கிலுக் : 9841354308
நர்சிம் : 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010



சங்கத்துக்கு நான் வைக்கும் முதல் கோரிக்கை:-

சங்க உறுப்பினர்கள் தங்கள் தளத்தில் அனா‌‌‌னிமஸ் பின்னூட்டங்களை தவிர்க்க உத்தர‌விட வேண்டும். அனா‌‌‌னிமஸ் பின்னூட்டங்களை ஐ.பி அல்லது பதிவர்களை ஆதாரபூர்வமாய் கண்டுபிடித்தால் அவர்களை பிளாகுலகை விட்டு பத்து வருடம் தள்ளி வைக்க வேண்டும். அவர்கள் பிளாக்கை ஆரும் படிக்க கூடாது. அவர்கள் பிளாக்கில் ஆரும் பின்னூட்டம் போடக்கூடாது. அவர்கள் பிளாக்கை ஆராவது படித்தால் அவர்களையும் பிளாகுலகை விட்டு தள்ளிவைக்கவேண்டும்.நாட்டாமை கவனிப்பாராக...

எ.பி.லோகோ

Wednesday, March 24, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு
———————————————————————

காடெங்கும் அடுக்குமாடிகள்
வீடெங்கும் தொலைக்காட்சிகள்

தெருவெங்கும் சாக்கடைகள்
ஊரெங்கும் சாமியார்கள்

பையெங்கும் கடன்அட்டைகள்
வழியெங்கும் செல்போன்பேச்சுகள்

வாயெங்கும் அறிவுரைகள்
மனசெங்கும் கழிவறைகள்

மேடையெங்கும் அடுக்குமொழிகள்
பாடையெங்கும் செத்த மூதிகள்

பாருக்குள்ளே ந‌ல்ல நாடு
எங்கள் பாரத நாடு
எங்கள் நாட்டுக்குள்ளே
ந‌ல்ல பாரு பிரபா ஒயின்ஸ்

Friday, March 19, 2010

மகளிர்தினக் கவிதைகள்

முன்பே எழுதிவிட்டேன். பதிவிட கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இந்த இதழ்
அகநாழிகை, ஆனந்தவிகடனில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. நன்றி


வலது
——————

கழிவறை கோப்பையில்
ஏதாவது தப்பித்தவறிவிட்டால்
முந்திவருவது இடதுகைதான்
வலதுகை புனிதமானது

ஒரு ரூபாய் நோட்டிற்கோ
ஒரு கோவில் பிரசாதத்திற்கோ
இடதுகை நீட்டினா‌‌‌ல் மகாபாதகம்
வலதுகை புனிதமானது

எதிரியாகவே இருந்தாலும்
ஆசிர்வதிக்க உயர்த்துவதில்லை
இடதுகையை
வலதுகை புனிதமானது

நேசக்கரமோ அபயக்கரமோ
முதலில் மறைப்பது இடதுகையை
வலதுகை புனிதமானது

வலதுகை புனிதமானது
எல்லா இடத்திலும்
எல்லா நேரத்திலும்
என்வீட்டு காலண்டரில்
உமாதேவி வலதுப்பக்கம்
சிரிக்கும் சிவனின்
புனிதம் போல





33
——


மேடயேறிய தலைவர்
மூச்சுக்கு முன்னூறு முறை
முப்பத்துமூன்று முப்பத்துமூன்று
முழங்கிக் கொண்டிருந்தார்
இரவுக்குள் வாங்கி தருவதாக
சத்தியம் கூட செய்தார்
மேடையிலிருந்து கீழிறங்கி
மகளிரணித் தலைவியை பார்த்தவர்
உதவியாளரிடம் கேட்டார்
ஆ‌மா…அம்மணிக்கு என்ன வயசு?

முப்பத்துமூன்று இருக்கும்

Sunday, March 14, 2010

இரண்டு கவிதைகள்

அழகு
—————
கறிக்கடைக் கூண்டில்
கறுப்புநிற கோழிக்குஞ்சொன்று
கோதுமையை கொத்தி கொத்தி
தின்றுக்கொண்டிருந்தது லாவகமாக
ஐஸ்கீரிமை சுவைக்கும்
ஐந்து வயது‌ குழந்தைபோல
அழகென்றால் அழகு
அப்படியொரு அழகு
கடித்து தின்றுவிடலாம் போல

பாவம்
——————
கசாப்புக்கடையில்
கட்டிப்போட்டிருந்த ஆடு
புல்கட்டை விழுங்கிக்கொண்டிருந்தது
அவசரம் அவசரமாய்
பாவம் கொலைப்பட்டினி போலும்

Tuesday, March 9, 2010

துறவிக்காமம்

(நன்றி: தலைப்பு உபயம் - அகநாழிகை வாசு)

துறவிக்காமம்
--------------

ஒரு போலிச்சாமியார் பிடிபட்டதை
நொடிக்கொருதரம் டி.வியில் காட்டினா‌‌‌ர்கள்
நடிகையின் முகம் மறைக்கப்பட்டிருந்தது
எந்த நடிகையென்று கண்டுபிடிப்பதோ
கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது

ஒருக்கணம் கற்பனை செய்துபார்த்தேன்
ஒவ்வொரு நடிகையாக வந்துப்போனா‌‌‌ர்கள்
காவியுடை அணிந்தபடி நான்
கட்டிலில் ஒரு நடிகை
கட்டிப்பிடித்து ஒரு நீ.....ண்ட முத்தம்
ஆஹா...ஆஹா...ஆஹா
நல்லவேளை
யாரும் என்னை கவனிக்கவில்லை
யாரும் என்னை பிடிக்கப்போவதுமில்லை

Monday, March 8, 2010

விளம்பரம்

விளம்பரம்
----------

எல்லா இடத்திலும்
எப்படியோ பூத்துவிடுகிறது
ஒரு விளம்பரம்

எதிர்வீட்டில் திடீரென பூத்திருந்தது
இங்கு சைக்கிளை நிறுத்தாதீர்
கூட ஒரு செல்போன் விளம்பரம்

நேற்று
ஒரு பலான படம் பார்த்துக்கொண்டிருந்தேன்
நிகழ்ச்சியின் இந்த பகுதியை வழங்குபவர்
ஒரு ஊதுபத்தி விளம்பரம்
எனக்கு புரியவேயில்லை

Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
------------

தேநீர்க்கடையில் சந்தித்தவர்
நான் கடவுள் என்றார்
அப்ப நான்?
நீயும் கடவுள் என்றார்
அவன்?
அவள் இவன்
அனைவரும் கடவுள் என்றார்
கடவுளை சந்தித்ததில்
கடவுளுக்கு பரம திருப்தி

தேநீர் குடித்த காசுக்கு
கடன் சொல்லும்போது மட்டும்
ஒரு பொல்லாத கடவுள்
இன்னொரு கடவுள் முகத்தில்
சுடுதண்ணிய ஊத்திடுவேன் என்றார்

Wednesday, March 3, 2010

காக்கை ஜாதி

காக்கை ஜாதி
————————————
நேற்று காலை
தெருமுனையில்
காக்கைகளின் கதறல்
மின்சார இணைப்பில்
அடிப்பட்டு இறந்திருக்க வேண்டும்
ஊகிக்க முடிந்தது

மிக சுலபமாக கடந்துவிட்டேன்
இரண்டு நிமிடம் கத்திவிட்டு
அவைகளும் ஓய்ந்திருக்கலாம்
இரைதேடியோ துணைதேடியோ
கூடுகளுக்கு சென்றிருக்கலாம்
இன்று மதியமும்
சில காக்கைகளை
சந்திக்க நேரிட்டது

ஒரு காக்கையை
ஸ்பென்சர் டெய்லியில் பார்த்தேன்
ஒரு காக்கையை
கத்திப்பாரா சந்திப்பில் பார்த்தேன்
ஒரு காக்கையிடம்
கன்னிமாரா நூலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது
ஒரு காக்கையிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தது

எனக்கு தெரிந்த காக்கையொன்று
வளசரவாக்கத்தில் இறந்துவிட்டது
கத்தப்போக வேண்டும்

Monday, March 1, 2010

"சிவப்பை முன்வைத்து" - உயிரோசை கட்டுரை

இந்த வார உயிரோசை மின்னிதழில் வெளியான "சிவப்பை முன்வைத்து" எ‌ன்ற கட்டுரை...

என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) போல இருப்பாள்
- நடிகர் ஜெயராம்

சமீபகாலமாக தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்க்கின்றேன். இனவாத, வகுப்புவாத, நிறவெறிக்கு எதிராக உலகெங்கும் கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் வலுத்து வரும் இந்த வேளையில் சத்தமில்லாமல் நம் வீட்டுக்குள் நுழைந்து மனதின் ஆழ்பகுதிக்குள் நிறவெறி பாசிச விதைகளைத் தூவிச்செல்லும் விளம்பரம் அது.


சினிமா நடிகையிடம் மேக்கப்மேனா‌‌‌க வேலைசெய்கிறார் ஒரு பெரியவர். வயதான நடுங்கும் கைகளால் அந்த நடிகை முகத்துக்கு கிரீம் பூசுகிறார்.பெரியவருக்குக் கை நடுங்க முகத்தில் கைபட, அந்த நடிகை கோபத்தில் காச் மூச்சென்று கத்துகிறாள். "உங்களுக்கு வயசாயிடுச்சு. வீட்டுக்குப் போய் உங்க பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு மேக்கப் போடுங்க" எ‌ன்று கத்துகிறாள். அந்த நேரம் ஸ்டுடியோவுக்கு சாப்பாடு கொண்டு வரும் பெரியவருடைய பெண் இதைக் கவனித்து விடுகிறாள். அடுத்த காட்சியில் பெரியவருடைய வீடு காட்டப்படுகிறது. பெரியவரிடம் அவரது பெண் மனக் கிலேசத்துடன் சொல்லுகிறாள்

"என்னையும் அவள மா‌தி‌ரி ஸ்டாரா ஆக்கிடுங்கப்பா..." பெரியவர் சொல்கிறார். "என் பொண்ணுக்கு நிரந்தர அழகுதான் வேணும். உனக்கு நான் மேக்கப் போடுகிறேன்." அந்த சிவப்பழகு கிரீமை முகத்தில் பூசுகிறார். அடு‌த்த வினாடி ஒரு அழகுப்போட்டி காட்டப்படுகிறது.முதல் பரிசு தனக்குத்தான் என்ற எதிர்பார்ப்பில் முதலில் சொன்ன அந்த சினிமா நடிகை அமர்ந்திருக்கிறாள். பெரியவருடைய பெண்ணுக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. நடிகைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பரிசைப் பெற்ற பெண் சொல்கிறாள். "உலகத்துல சில விஷயங்கள் நிரந்தரமில்லை. பேரு,புகழ் நிரந்தரமில்லை." நடிகைக்கு உண்மை புரிகிறது. மக்கள், பத்திரிகை நிருபர்கள் உற்சாகமாய் கைதட்டுகிறார்கள். அழகு நிரந்தரம் என்று அந்த விளம்பரம் முடிகிறது

எவ்வளவு கேடுகெட்ட சூடு சொரணையற்ற தேசத்தில் நாம் ஆட்டு மந்தைகள் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த விளம்பரம் ஒரு உதாரணம். இந்த விளம்பரம் சொல்ல வருவது இதுதான். பெண் என்பவள் முட்டாக்.. (மன்னிக்கவும். இந்த இடத்தில் என்னால் கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.) இருந்தால் கூட பரவாயில்லை. ஆனா‌‌‌ல் அழகு குறிப்பாக சிவப்பழகு இல்லாமல் இருக்கக்கூடாது. அழகு நிரந்தரம் எ‌ன்று சொல்கிறார்கள். அழகு நிரந்தரம் எ‌ன்று சொல்லும்போதே மற்றதெல்லாம் நிரந்தரமற்றது எ‌ன்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அதாவது படிப்பு நிரந்தரமற்றது. அன்பு நிரந்தரமற்றது. ந‌ல்ல குணங்கள் எதுவும் நிரந்தரமற்றது. நிரந்தமற்ற விஷயங்களைத் தேடி ஓடும் அற்ப மானிடப் பதர்களே... நில்லுங்க. எங்கள் சிவப்பழகுப் கிரீமை பூசிக்கொள்ளுங்கள்.

இந்த விளம்பரத்தின் காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல ‌விஷப் பாம்புகள் நெளிவது தெரியும். அழகால் மட்டுமே பெண்கள் பதவி,பணம்,புகழ்,பெயர் அடையமுடியும்.

எனக்கு இந்த இடத்தில் ‌நியாயமாக ஒரு கேள்வி எழுகின்றது. அழகு நிரந்தரம் என்கிறார்கள். நியாயம்தான். அப்படியென்றால் அந்த சினிமா நடிகைக்கு தானே முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்? போன வருட அழகிப்போட்டியில் ஒருத்திக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. இந்த வருட அழகிப்போட்டியில் இன்னொருத்திக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. அப்படியென்றால் போன வருட அழகு எங்கு போனது? அழகு என்பது ஒரு வருடத்துக்கு மட்டுமே நிரந்தரமா? அழகு நிரந்தரம் என்றால் அழகின் மூலம் கிடைக்கும் பேரு,புகழ் நிரந்தரமில்லை எ‌ன்று எப்படி ஒரு பதிலைச் சொல்லி அந்தப் பெண்ணால் முத‌ல் பரிசு பெற முடிந்தது?

இன்னொரு முக்கியமான கேள்வியும் வருகிறது.

"என்னையும் அவள மா‌தி‌ரி ஸ்டாரா ஆக்கிடுங்கப்பா" எ‌ன்று கேட்கும் மகளிடம் தந்தை இப்படி சொல்கிறார்.
"என் பொண்ணுக்கு நிரந்தர அழகுதான் வேணும். உனக்கு நான் மேக்கப் போடுகிறேன்." அப்படியென்றால் அந்தப் பெரியவர் இத்தனை வருடமாக அந்த நடிகைக்குப் பூசியது டூப்ளிகேட் கிரீமா? இத்தனை வருடமாகத் தொழில் சிரத்தையின்றித்தான் நடிகையிடம் பணிபுரிந்தாரா? தொழில் சிரத்தையின்றி பணிபுரிந்த ஒருவரைத் திட்டிய அந்த நடிகை மேல் என்ன தவறு இருக்கமுடியும்?



நன்றி
-என்.விநாயக முருகன்

"சொல்ல மறந்த கதை" - கீற்று.காம்

(கீற்று.காம்மில் தெகிமாலா சரித்திரம் பார்ட்-2)


தெகிமாலா நாட்டு சரித்திரம் - சொல்ல மறந்த கதை
------------------------------------------------



முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்ததையும், அந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியதையும் ஒரு கதையில் சொல்லியிருந்தேன் அல்லவா? இது சொல்ல மறந்த கதை. பத்தாண்டுகளுக்கு அந்த நாட்டை ஒரு வரிக்குதிரை ஆட்சி செலுத்திய கதை. என்ன வரிக்குதிரையா? வரிக்குதிரையேதான்... நம்புங்க. கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது.


ஒரு பாராட்டு விழா(முன்கதை சுருக்கம்)
-------------------------------------
அந்த தேசத்தில் கவிஞர் தாத்தா- 1 & கூத்து தாத்தா- 2 & ராஜா தாத்தா- 3 பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே. இவர்களை பற்றி தெரியாதவர்கள் முந்தைய கதையை படித்து விட்டு வரவும். http://www.keetru.com/literature/short_stories/vinayakamurugan.php

கூத்து தாத்தா வெற்றிகரமாக இருநூறாவது முறை டப்பாங்குத்து போட்டதை கெளரவிக்க நாட்டு மக்கள் தலைப்பட்டார்கள். பாராட்டு ‌விழா நடத்தி கூத்து தாத்தாவை கெளரவிக்க முடிவு செய்தார்கள். பாராட்டு ‌விழாவுக்கென்று ஒரு திடல் ஒதுக்கப்பட்டது.
திடலை சமப்படுத்தி புது ஆற்று மணல் பரப்பினார்கள். திடலின் நாற்புறமும் பந்தற்கால்கள் ஊன்றி மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. மேடையின் மையப்பகுதியில் சாணத்தால் மெழுகி மாக்கோலம் போடப்பட்டது. வெண்ணிறப்பட்டு போர்த்தப்பட்ட குதிரைகள், திடலை சுற்றி வெளிபுறத்தில் வட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திடலை சுற்றி உட்புறத்தில் சந்தன மரங்கள் பூக்கும் சிறு கரிமலைக்குன்றைப்போல யானைகள் சந்தனம் மணக்க,மணக்க நின்றிருந்தன. குதிரைகள்,யானைகள் மீது கருத்த உடற்கட்டும்,பரந்த மார்பும்,சுருள் கேசமும் கொண்ட வீராகள் கையில் நீண்ட ஈட்டியுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். தேசமெங்கும் ஓடும் புண்ணிய நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரை தங்ககலசத்தில் ஊற்றி அவற்றை ஓதுவார்கள் இருகரங்களில் ஏந்தி வந்தார்கள். 1008 கலசத்துக்கு ஒரு கலசம் குறைய யாரோ பாராட்டு விழாவுக்கு பங்கம் வந்துவிட்டது என்றார்கள். அந்த நேரம் யானைப்பாகனொருவன் கையில் கலசத்துடன் ஓடிவந்தான். இதோ இங்க இருக்கு..

"என்ன பாகனே கலசத்தில் நீர் சூடா இருக்கு? " யாரோ கேட்டார்கள்

"வென்னீர் ஊற்றுத்தண்ணீரா இருக்கும் விடுங்க..விழாவுக்கு நேரம் ஆகுது" யாரோ சொன்னார்கள்.

விழா மேடையில் கூத்து தாத்தாவை சுற்றி இரண்டுபுறமும் கவிஞர் தாத்தாவும், ராஜா தாத்தாவும் அமர்ந்திருந்தார்கள். எள் போட்டால் எண்ணெய் கூட எடுக்கமுடியாது. அவ்வளவு மக்கள் கூட்டம் திடல் முழுவதும். ஆரவாரம்... எங்கும் சந்தோச கூச்சல்கள். ராஜா தாத்தாவே ஒருக்கணம் ஸ்தம்பித்துவிட்டார்.

அட மானங்கெட்ட மக்களே. இந்த நாட்டின் அரசன் நான். எனக்கே இவ்வளவு கூட்டம் வரமாட்டேங்குது. ஆகட்டும். விழா முடியட்டும்.. அடு‌த்த மாசம் நடக்குற என்னோட பாராட்டுவிழாவில ஆயிரம் யானைப்படை,ஆயிரம் வரிக்குதிரைப்படை,ஆயிரம் ஒட்டகம் கொண்டுவந்து நிறுத்தனும். ஐம்பெருங்குழு,எண்பேராயத்திடம் இப்போதே சொல்லிவைக்கனும். யோசித்த ராஜா தாத்தா பக்கத்தில் இருந்த அமைச்சர் அடிப்பொடியாழ்வார் காதை கடித்தார்.

"இதென்ன விபரீதம் அரசரே...?வரிக்குதிரை, ஒட்டகத்துக்கு நான் எங்கே போவேன்? " அடிப்பொடியாழ்வார் சொன்னார். ராஜாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. "அதெல்லாம் எனக்கு தெரியாது.கொண்டு வ‌ந்த தலை தப்பும்." கோபத்தில் கத்தினா‌‌‌ர். அடிப்பொடியாழ்வாருக்கு ஒரு யோசனை ஓடியது... பேசாமல் ஏதாவது குதிரை அல்லது கழுதையை பிடித்து கொல்லன் பட்டறைக்கு அழைத்துச்சென்று சூட்டுக்கோலால் முதுகில பட்டை பட்டையா இழுத்துவிட்டு இதான் வரிக்குதிரைனா‌‌‌ இந்த ஆளுக்கு தெரியவா போது. இந்த ஒட்டகத்துக்குதான் என்ன செய்யறதுனு தெரியல...

அடிப்பொடியாழ்வார் தலையை பிச்சிக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும்போது கவிஞர் தாத்தா மக்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.முத‌ல் குண்டுக்கே அரங்கம் அதிர்ந்தது. "சூரியனும், நட்சத்திரமும் அருகருகே அமர்ந்துள்ளார்கள்." சொன்னதும் திடலெங்கும் விசில் பறந்தது. யானைகள் பிளிறின. குதிரைகள் மிரண்டன. ராஜாவுக்கே கொஞ்சம் வெட்கம் வந்துவிட்டது. அட...ங்கொக்காமக்கா..நீ கவிஞன்டா... மனசுக்குள் கவிஞரை பாராட்டினா‌‌‌ர். தூரத்தில் குதிரைமீது அமர்ந்திருந்த ஒரு வீரன் மட்டும் வாங்குற காசுக்கு என்னமா ஃபீல் பண்ணி கூவுறாண்டா...ங்கொய்யால எ‌ன்று கவிஞரின் ராஜ விசுவாசத்தை வெகுவாக மனசுக்குள் பாராட்டினா‌‌‌ன். அவன் அமர்ந்திருந்த ஆண் குதிரை பக்கத்தில் இருந்த பெண்குதிரையை ஆஹா குட்டி என்னா‌ ஷோக்காக்கீது.. செம கட்டை.. அரேபியாவா கேரளாவா தெரியலையேனு அந்த பெண்குதிரை அழகை மனதுக்குள் பாராட்டியது. இப்படி திடல் முழுவதும் ஒருவரை, ஒருவரை பாராட்டு மழையில் நனைக்கத்தொடங்கினா‌‌‌ர்கள்.

கவிஞர் பேசிமுடித்ததும் இருக்கைக்கு வ‌ந்து அமர்ந்தார். ராஜா பேச எழுந்தார். கவிஞர் தாத்தா கூத்துத்தாத்தா கதை கடித்தார்.

"அடு‌த்த மாசம் எனக்கு ஒரு பாராட்டு விழா நடக்குது. நீங்கு கலந்துக்கிட்டு அவசியம் என்னை பாராட்டி நாலு வார்த்தை பேசனும்."

"அதுக்கென்ன பாராட்டினா‌‌‌ போச்சு...ஆனா‌‌‌ நான் பேசுனா‌‌‌ யாருக்குமே புரியாதே.. நாளைக்கு நீங்க திட்டுறியா? பாராட்டுறியானு எங்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது. ஆ‌மா சூரியனும், நட்சத்திரமும் அருகருகே அமர்ந்திருக்குனு சொன்னீங்களே. இதுல யாரு சூரியன்? யாரு நட்சத்திரம்? " கூத்துத்தாத்தா கேட்டார்.

ஆஹா சனியன் சடை பின்னி பூமுடிச்சு பொட்டு வைக்காம போகாதே எ‌ன்று அப்புறம் சொல்லுறேன் எ‌ன்று நழுவினா‌‌‌ர். மேடையில் ராஜா பாராட்டு மேல பாராட்டு போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்.பாராட்டி பேசியதில் ராஜாவுக்கே நாக்கு வறண்டுப்போனது.

"தம்பி டீ இன்னும் வரலை..." அடிப்பொடியாழ்வாரிடம் யாரோ நினைவூட்டினார்கள்.

"நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டி இருக்கு. விடைபெறுகிறேன்" எ‌ன்று ராஜா கிளம்பினார்.

"நான் இன்னும் நாலு இடத்துக்கு பாராட்ட போகனும்.. நானும் கிளம்பறேன்" எ‌ன்று கவிஞரும் கிளம்பினார். இப்படியாக அந்த பாராட்டுவிழா இனிதாக நிறைவுபெற்றது.

சுபம்


இன்னொரு பாராட்டு விழா(பின்தொடரும் கதையின் கதை)
-----------------------------------------------------

அப்படி இப்படினு ஒரு மாசம் ஓடியிருக்கும். கூத்துத்தாத்தாவின் பாராட்டுவிழாவிற்கு செ‌ன்று வந்ததிலிருந்தே ராஜாவுக்கு மண்டைக்குள்ள மணிச்சத்தம்.அந்தப்புரத்தில் ராணிகளோடு இருக்கும்போது கூட மணியடித்துக்கொண்டே இருந்தது. கோயில் மணிய சொன்னேங்..வேற எதுவும் இல்லீங்.. ஐம்பெருங்குழு, எண்பேராயத்தை கூட்ட முடிவு செய்தார். அடிப்பொடியாழ்வாரை பாராட்டு ‌விழாக்குழு தலைவராக நியமிப்பது எ‌ன்று ஏகமனதாக பேராயத்தில் முடிவு செய்தார்கள்.பத்துநாள் விழாவாக தொடர்ந்து நடத்துவதென்று முடிவு செய்யப்படது. ஒட்டகத்துக்கு எங்கு போவது..? அடிப்பொடியாழ்வார்க்கு ஓரே குழப்பம். விழாக்குழு தலைவர் பதவியை எதிர்ப்பார்த்து காத்திருந்த மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் ஏமாற்றம். அதேநேரம் ஒட்டகம் விஷயம் தெரியவந்ததும் அப்பாடா..எஸ்கேப்..எ‌ன்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஒட்டகத்தை கட்டிக்கோ..கெட்டியாக ஒட்டிக்கோ என்று அடிப்பொடியாழ்வாரை கிண்டல் செ‌ய்து பாடிய வரிகள் கல்வெல்ட்டில் இருப்பதாக பின்னாளில் தெகிமாலா நாட்டு சரித்திரத்தை ஆராய்ந்த கால்டுவெல்ஸ் என்னும் ஆங்கிலேயர் குறிப்பிடுகிறார்.


சரி விசயத்துக்கு வருவோம்.

விழாவுக்கு ராஜாவை பாராட்ட யாரை அழைப்பதென்று யோசிக்க ஆரம்பித்தார்கள். அடிப்பொடியாழ்வார் சொன்னார். "வேற யாரு? அவரையே கூப்பிட்டு வாங்க. " எ‌ன்று உத்தரவிட்டார். எண்பேராய உறுப்பினர்கள் கூத்து தாத்தா வீட்டுக்கு சென்று அழைத்தார்கள்.
"ஆஹா... ஆடித்திங்களா? அன்று எனக்கு முக்கியமான வேலை இருக்கிறதே..ஐஸ்வெள்ளியங்கரி மலையில் தனிமையில் குத்தாட்டம் போடனுமே...மன்னிக்கவும் நண்பர்களே என்னால் பாராட்டு விழாவுக்கு வரமுடியாது" கூத்து தாத்தா சொன்னார்.

அடிப்பொடியாழ்வார் இதைக்கேள்விப்பட்டதும் வெகுண்டெழுந்தார். "இந்த மாதிரி வேலைக்கெல்லாம் எண்பேராயம் சரிப்பட்டு வராது." ஐம்பெருங்குழுவை அழைத்தார். " சகல மரியாதை(!?) களோடு அழைத்து வாங்க..." எ‌ன்று உத்தரவிட்டார். ஐம்பெருங்குழு எள் என்றால் எண்ணெயாக வருவார்கள்.அவர்கள் கூத்து தாத்தா மட்டுமில்லாமல் அவரது பேரக்குழந்தைகள், கூத்து தாத்தா ஒ‌ன்று விட்ட சித்தப்பா மகனுக்கு பெரியப்பா மருமகனுக்கு பேரன் எ‌ன்று அனைவரையும் கையோடு சகலமரியாதைகளோடு (!?) விழாமேடைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்போது ஐம்பெருங்குழுவை நினைத்து அடிப்பொடியாழ்வாருக்கே லேசாக பயம் வந்துவிட்டது.


மேடையில் எல்லாரும் இறுக்கமாக அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் வரிசையாக ராஜாவை பாராட்டிகொண்டே வரவேண்டும். ஒவ்வொருவராக ஆடிக்கொண்டும்,பாடிக்கொண்டும் வரிசையில் வந்துக்கொண்டிருந்தார்கள்.அடிப்பொடியாழ்வார் ஜருகண்டி.. ஜருகண்டி எ‌ன்று இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சுவாரசியம் நடந்தது.ஒரு பொடியன் (இவனை கூத்துத்தாத்தாவின் பேரன் எ‌ன்று ‌சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சிலர் இதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை எ‌ன்று மறுக்கிறார்கள்) ராஜா முன்னால் வந்தான்.

"ராஜா இ‌து உங்களுக்கே நல்லாயிருக்கா? எங்களுக்கு ஆயிரம் தல போற வேலையிருக்கு.உங்க அமைச்சர்கள் வலுக்கட்டாயமாக எங்களை விழாவுக்கு கூப்பிடுறாங்க. வராட்டி தலையை கொய்துவிடுவோம் அப்படினு சொல்றாங்க. எவ்வளவு ரூபா செலவானா‌‌‌லும் பரவாயில்லை.இதுக்கு ஒரு பைசல் பண்ணுங்க.. " மேடையில் வெடித்தான்.

குதிரை, யானை, கடல் அலைகள், அசையும் மரம், உதிரும் இலை,காற்று எல்லாம் ‌சில நொடிகள் ஸ்தம்பித்தன.ராஜாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. எல்லாரும் அமைதியாக ராஜாவையே பார்த்துக்கொண்டிருக்க கூத்து தாத்தா எழுந்தார். இரண்டு கைகளையும் படபடவென தட்ட ஆரம்பித்தார். மக்கள் இப்போது கூத்து தாத்தாவை மரியாதையாக பார்த்தார்கள்.

அப்போது இன்னுமொரு அதிசயம் நடந்தது. ஒரு வரிக்குதிரை கனைத்தபடி முன்னால் வந்து பேச ஆரம்பித்தது.

"அட..ங்கொய்யால.. உங்க விழாவுக்கு மட்டும் பாராட்ட கூப்பிடவுடனே ராஜா வர்றாரு.. அவரு இந்த நாட்டுக்கே ராஜா...உங்களையும் மதிச்சு பாராட்ட வர்றாரு.. நன்றிகெட்ட ஈனப்பிறவிகளா... நீங்க மட்டும் அவர பாராட்டுனா‌‌‌ தேஞ்சா போய்டுவீங்க...?நான்தான் அடுத்த ராஜானு வாய்கிழிய தெருக்கூத்தில பஞ்ச் பேசுறீங்க.. இதையெல்லாம் பெருந்தன்மையோட எங்க ராஜா பொறுத்துக்கலையா? ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்காமா இப்படி சண்டை போடுறது நல்லாவா இருக்கு?" வரிக்குதிரை கோபத்தோடு கேட்டது.

உண்மை சுட்டது.மக்கள் இப்போது வரிக்குதிரை மரியாதையாக பார்த்தார்கள்.அடிப்பொடியாழ்வாருக்கு குழப்பம். வரிக்குதிரை எப்படி பேசமுடியும்.அதுவும் தெருக்கூத்து ஆட்கள் சொல்லும் அதே லாவகத்தோடு ஏற்ற இறக்கமாய் உணர்ச்சி பிழம்பாய் கருத்து சொல்ல முடியும். எண்பேராயத்துத்துல இருக்கற எவனாவது வரிக்குதிரை வேஷம் போட்டுட்டு வந்துட்டானா? எல்லாரும் வரிக்குதிரையை பிடித்து சோதனைப் போட்டார்கள். அடா நெசமாலுமே இ‌து குதிரைதான். ராஜாவுக்கே பிரமிப்பிலும், பிரமிப்பு. அடு‌த்த ராஜா நீதாண்டா எ‌ன்று குதிரையை கட்டிக்கொண்டார்.

இப்படித்தான் ஒரு பத்தாண்டுகள் வரிக்குதிரை அந்த தேசத்தை ஆண்டது. அந்தக்காலக்கட்டத்தில்தான் மக்களிடம் வரி விதிக்கும் முறை பழக்கத்துக்கு வந்ந்தது. இப்படியாகத்தான் தெகிமாலா நாட்டை ஆராய்ச்சி செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் முடிக்கிறார்கள்.


நன்றி கீற்று.காம்