Tuesday, July 20, 2010

காந்தியை கொன்றது தவறுதான்

கடந்த சனிக்கிழமையன்று கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸில் விஜயமகேந்திரனின் "நகரத்திற்கு வெளியே" சிறுகதைத்தொகுப்பு விமர்சனக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் துவக்கத்தில் ஒருவர் (அவர் பெயர் தெரியவில்லை) கவிதை நிகழ்த்துதல் என்ற அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தி பிரமிக்க வைத்தார்.அதில் சி.மணியின் சி.மோகனின் கவிதையையும், ரமேஷ்பிரேதனின் "காந்தியை கொன்றது தவறுதான்" தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளையும் வாசித்து அற்புதமாக நடத்திக் காட்டினார். நவீன நாடகத்திற்கு கவிதை வரிகளை பின்புலமாக பயன்படுத்தியது மிகவும் புதுமையாகவும் இருந்தது.

ரமேஷ் பிரேதனின் "காந்தியை கொன்றது தவறுதான்" கவிதைத் தொகுப்பை அண்மையில் படித்தேன். இத்தொகுப்பு ஒரு விநோத அனுபவத்தை தருகிறது. வாசிக்கையில் இதொகுப்பிலுள்ள கவிதைகள், வாசகனிடையே ஒரு சுவாரசிய கண்ணாமூச்சி ஆட்டத்தை விளையாடுகிறது.

பிரிவு என்ற தலைப்பில் இருக்கும் ரமேஷ் பிரேதனின் கவிதை வரிகள் இப்படி தொடங்குகின்றன...

நீந்தி அடையமுடியாத தூரத்தில் நீ
உனது கப்பலை நிறுத்திவைக்கிறாய்


நூறு கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் காந்தியை கொன்றது தவறுதான் என்ற தலைப்பில் பத்து கவிதைகள் உள்ளன.

அதில் பத்தாவது கவிதைதான் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நவீன நாடகத்தில் நடித்து காண்பிக்கப்பட்டது.

காந்தியை கொன்றது தவறுதான் -10

நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து
அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்

ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழந்த மெளனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே

என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னை சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள
கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்

திடுக்கிட்டு கனவிலிருந்து
வெளிப்பட்டேன்
உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்
விளக்கைப் போட்டேன்
சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்

வியர்வை புழுக்கத்தில்
என் நெற்றி குங்குமம் வழிந்து
மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது
நதையைப் போல
காந்தியின் ரத்தம்

இந்த கவிதையை தொகுப்பில் படித்தபொழுது சாதாரணமாக இருந்தது.ஆனால் நிகழ்ச்சியில் அவர் நடித்துக்காட்டிய விதம் அதிர வைத்தது. குறிப்பாக அவரது நெற்றியில் பொருத்தி// வெடித்தேன் என்ற வரிகளுக்கு அவர் துப்பாக்கி தோட்டா வாங்கி தரையில் மூர்ச்சையாக விழுந்த விதம் கவிதை வரிகளின் வீரியத்தை இன்னும் கூடுதலாக்கியது.“பலூன் வியாபாரி” என்ற இன்னொரு ரமேஷ் பிரதேனின் அழகிய கவிதையும் நடித்துக் காண்பிக்கப்பட்டது

பலூன் வியாபாரி

கோமாளிகள் நிறைந்த திருவிழாவில்
பலூன் வியாபாரியான நான்
குழந்தைகளின் குதூகலத்திற்கான
கோமாளியாகிறேன்

நான் வாய்கொண்டு ஊத
நீல நிறப் பாம்பு படம் எடுக்க
அதன் வால்முனையை முடிந்து
குழந்தையிடம் கொடுத்தேன்
கூட்டத்திற்குள் பலூன் பாம்பை
தூக்கிக்கொண்டு ஓடினாள்
கூட்டம் மருண்டு விலகியது

இன்னொருப் பிள்ளை
கீரிப்பிள்ளை பலூனைப் பெற்றுக்கொண்டு
பாம்பை துரத்தினாள்
கூட்டம் சிரித்து அலைமோதியது

பலூன்களால் கை கால் முகம் உடம்பு
எனச் செய்யப்பட்ட சாமி
தேரில் பவனி வந்தது
ஓடிச்சென்ற பாம்பு
சாமியின் கழுத்தில் சுற்றி
தலைக்கு மேல் படம் விரித்து
கீரியைப் பயமுறுத்தியது
குழந்தையின் கையைக் கடித்துவிட்டு
பிடிவிலக்கிக்கொண்ட கீரி
கூட்டத்துக்குள் தாவி ஓடியது

பாம்பையும் கீரியையும் இழந்த
இரு குழந்தைகள்
பலூன் வியாபாரியான என்னிடம் வந்தனர்
நான் அவர்களின் அழுத முகம் துடைத்து
ஆப்பிள் பலூன்களை தந்தேன்
தின்றபடி வீடு திரும்பினர்
நேற்றைய எனது கனவில்


நிகழ்ச்சிக்கு வந்திருந்த எத்தனை பேர் ரமேஷ்பிரதேனின் "காந்தியை கொன்றது தவறுதான்" தொகுப்பை படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து இந்த கவிதைகளை பார்வையாளர்களிடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கவிதைகளை பொதுவெளியில் பகிரும்போது அதுவும் இதுபோன்ற நவீன நாடக உத்தியில் கொண்டு வரும்போது அதன் வீச்சும், இருப்பும் இன்னுமொரு பரிமாணத்தில் மின்னுகிறது.இதுபோல அடுத்தடுத்த கூட்டங்களில் மற்ற கவிஞர்களின் கவிதைகளையும் நவீன நாடக வடிவில் நிகழ்த்தி காட்டினா‌‌‌ல் உண்மையில் இதுவொரு ஆரோக்கியமான முயற்சியாக இருக்கும்

காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பில் இருக்கும் பல கவிதைகளை அவ்வளவு சுலபமாக கடந்து செல்ல இயலவில்லை.ஒவ்வொரு கவிதையையும் மீண்டும்,மீண்டும் படிக்கிறேன்.கவிதைகளின் அதிர்வுகளிலிருந்து மீள்வதற்கு. ஆனால் ஒரு மாய சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட பூச்சி போல வாசகர்களை வெளியே விட முடியாமல் உள்ளே உள்ளே இழுத்துச்செல்கிறது.


காந்தியை கொன்றது தவறுதான்
ரமேஷ் பிரதேன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ 100

9 comments:

  1. அற்புதமான நிகழ்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க.. ரமேஷ் - பிரேம் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை..

    ReplyDelete
  3. அந்த நடிகரின் பெயர் தம்பி சோழன்..கூத்துப்பட்டறை மாணவர்.சி.மணியின் கவிதை அல்ல அது சி.மோகனின் தண்ணீர் சிற்பம் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை......பகிர்வுக்கு நன்றி விநாயகமுருகன்

    ReplyDelete
  4. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி மகேந்திரன்

    ReplyDelete
  5. இரு கவிதைகளையும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி விநய்.

    ReplyDelete
  6. see my blog http://thandapayal.blogspot.com/

    if u like it get its template code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en#

    create an archive page using

    http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

    ReplyDelete