Saturday, November 6, 2010

நவீன விருட்சம் - தந்தைமை

கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் தளத்திற்கு நன்றி

தந்தைமை

என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, November 4, 2010

சொல்வனம் - இரண்டு கவிதைகள்

சொல்வனம் இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகளை வாசிக்க... கவிதைகளை வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி..

நிபுணன்
-----------
ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர்
நோயாளியின் நாடித்துடிப்பை
முத‌லி‌ல் பரிசோதிக்கிறார்
மரத்துபோகும் ஊசியை
கனிவாக பேசியபடியே
அவனுக்கு போடுகிறார்
அவன் நினைவுகள்
மெல்ல மெல்ல நழுவி
கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
தனது வேலையை தொடங்குகிறார்

கத்தியால் மெலிதாக கீறுகிறார்
இளஞ்சூடாய் கருவில் இருக்கும்
சிசு போல இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது
காலில் உள்ள அசுத்த ரத்தத்தை
இதயத்திற்கு கொண்டு செல்லும்
ரத்தக்குழாயை கவனமாக பரிசோதிக்கிறார்
நோயாளியும் கடவுளும்
எதையோ தீவிரமாக
விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்

இதய அறுவை சிகிச்சை நிபுணர்
இடது மற்றும் வலது
ரத்தக்குழாய்களை பரிசோதிக்கிறார்
எந்த குழாயில்
அடைப்பென்று கண்டுபிடித்தவர் முகத்தில்
அப்படியொரு சாவதானம்

இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்

நோயாளியும் கடவுளும்
தர்க்க சாஸ்திரத்தில் இறங்கி
தீவிரமாக வாக்குவாதம் செய்யும்போது
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
ரத்தக்குழாய்களில் படிந்துள்ள
அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சியெடுக்கிறார்

இதுநாள் வரை
இரத்தம் செ‌ன்றுக்கொண்டிருந்த
குழாயை தவிர்த்து வேறொரு
குழாய் வழியே இரத்தத்தின்
பயணத்தை மாற்றி அனுப்புகிறார்
ஒரு போக்குவரத்து காவலரை போல
பாதி வழியில் நின்றுபோன
பேருந்து பயணிகளை
பிறிதொரு பேருந்திற்கு மாற்றும்
ஒரு நடத்துனரை போல
ஒரு இறைத்தூதன் போல
ஒரு கடவுள் போல

கடவுள் சிரித்தபடியே
நோயாளியிடம் விடைபெற
நோயாளி மெல்ல மெல்ல
பூமிக்கு திரும்புகிறார்

வெற்றிகரமாக
ஒரு அறுவை சிகிச்சை முடிக்கும்
இதய அறுவை சிகிச்சை நிபுணரின்
முகத்தில் அப்படியொரு சாந்தம்
அப்படியொரு தெய்வீகம்
இரத்தம் கொழுப்பு
சூடான சதைத்துணுக்குகள்
துடிக்கும் நரம்புகள்
இவற்றினூடே
அவருக்குக்கே அவருக்கு
மட்டும் தெரிந்திருக்கலாம்
அந்த இதயத்தில் ஒளிந்திருந்த
‌சில துரோகங்கள்
‌‌சில வலிகள்
‌சில புறக்கணிப்புகள்
சில கேவல்கள்
‌சில ரகசியங்கள்


கலைஞன்
-------------
இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

முன்பு இந்த உலகத்தில் தோன்றி
மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்
மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்
கண்களை மூடிக்கொள்கிறான்
எதையோ தீவிரமாக யோசிக்கிறான்
அந்தக்கோழியை விட்டுவிட்டு
இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

அதன் கழுத்தை திருக
அவனுக்கு தயக்கமாக இருக்கிறது
கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்
கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்
கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்
கடவுளை தொழுகிறான்

இறைச்சிக் கடை உரிமையாளர்
அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்
தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்
ஆற்றுப்படுத்துகிறார்
கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்
சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்
கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்
கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்
அவன் கொலை செய்யும் உயிர்கள்
துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

பருவத்துக்கு வந்துவிட்ட
போர்வீரனாய் கர்வம் கொள்ளும்
அந்த சிறுவன்
செய்யும் முத‌ல் கொலை
மிகுந்த கொடூரமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் எடுத்துக்கொண்ட கால அளவு
மிகுந்த நீளமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் மனதில் விவாதித்தது
மிகுந்த தத்துவார்த்தமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் வாழ்ந்த வாழ்க்கை
மிகுந்த சிக்கலானது
அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்
‌மிகுந்த எண்ணிக்கையிலானது

அந்த சிறுவனது
மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன

இப்போதெல்லாம்
அவன் விரல்கள்
ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்
ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்
ஒரு மிருதங்க கலைஞனாய்
இறைச்சியை வெட்டுவதற்கு
பழக்கமாகியிருந்தது



நன்றி
என்.விநாயக முருகன்