Monday, May 23, 2011

வெடிகுண்டு


வாதாம் மர இலைகள் உதிரும்
அந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு
வெடிகுண்டு வைத்துள்ளதாக
தகவல் வருகிறது

இன்னதென்று புரியாமல்
அவசரமாக வெளியேறும்
குட்டி கடவுளர்களால்
முன்பக்க வாசலில்
பரபரப்பு சூல்கொள்கிறது

தேவதைகள் போல் சிரிக்கும்
இள‌ம் ஆசிரியைகள்
இப்போது
கண்டிப்பான குரலில் உத்தரவிட்டபடி
கடவுளர்களுக்கு பாதுகாப்பரண் அமைக்கிறார்கள்

மணல்மூட்டைகள் நிறைந்த
ஊர்தியிலிருந்து இறங்கி
பள்ளிக்குள் ஓடும்
மோப்ப நாயை பார்க்கும்
கடவுளர்களது
விழிகள் அகல விரிகின்றன

புத்தகப் பைகளை தாண்டி
விரையும் காவலர்கள்
மைதானத்துக்குள் அநாதையாக
கிடக்கும் கால்பந்தை
கவனமாக பரிசோதிக்கின்றனர்

அவர்கள்
தலைமையாசிரியை அறைக்குள் தேடுகிறார்கள்

முடிவற்ற தேடுதலின் இறுதியில்
வெடிக்காத குண்டொன்றின்
வதந்தி திரி பற்ற வைக்கப்படுகிறது

வெடித்து விட்ட பாவனையில்
கடவுளர்கள் பயந்துபோய்
காதை பொத்திக்கொள்ளும்போது
வாரஇறு‌தி‌ நாளில் பள்ளிக்கூடம்
வழக்கம் போல இயங்குமென்று
அறிவிக்கப்படுகிறது

Sunday, May 1, 2011

தேன்மொழி - வல்லினம் கவிதை

வல்லினம் இதழில் வெளியான தேன்மொழி எ‌ன்ற கவிதையை இங்கு பகிர விரும்புகின்றேன்..வல்லினம் இணையத்தளத்திற்கு நன்றி!


அழைப்பிசை

ஏதொவொரு கோடை விடுமுறையில்
மொட்டை மாடி தாழ்வாரத்தில்
குடிவந்தது அந்த சிட்டுக் குருவி

குருவிக்கூட்டை கலைப்பது மகாபாவம்
கண்டிப்புடன் சொன்னாள் பாட்டி

உனக்கென்ன போச்சு
எனக்குதானே தலைவலி
சிதறிக்கிடக்கும் வைக்கோல் குச்சிகளை
அடிக்கடி பெருக்கியபடி
அலுத்துக் கொண்டாள் அம்மா

தாய்க்குருவி இல்லாத நேரம்
முட்டைகளை எடுத்து
அடிக்கடி ரசிப்பது
தங்கையின் வழக்கம்

இரைதேடி இர‌வி‌‌ல் அலையும்
கடுவன் பூனைகளிடமிருந்து
குஞ்சுகளை காப்பதிலேயே
பொழுது போனது பாட்டிக்கு

குஞ்சுப் பறவைகள்
பறந்து செல்ல
மாடிப் புழக்கம்
வெகுவாக குறைந்துப்போன நாளொன்றில்
மொட்டை மாடிக்கு
குடிவந்தது அந்த செல்போன் கோபுரம்

மீண்டுமொரு கோடை விடுமுறையின்
மதிய உறக்கப் பொழுதில்
திடுக்கிட்டு கண்விழித்தோம் அனைவரும்

இனம் புரியாத சோகத்தில்
தங்கையின் அலைப்பேசி
கீச் கீச்சென்று அழைப்பிசையில்
கதறிக் கொண்டிருந்தது

நன்றி
என். விநாயக முருகன்