Friday, September 21, 2012

குஞ்சுண்ணியும், வேதாளமும்

எழுதி எழுதியே எழுத்தாய் போன
குஞ்சுண்ணியின் கதையிது

குஞ்சுண்ணிக்கு திடீரென
பேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது

நடுநிசியில் எழுந்த குஞ்சுண்ணி
ஊர்க்கோடி கல்லறை நோக்கி
தனியாக நடக்க ஆரம்பித்தார்

நூறாண்டு வயதான
முருங்கை மரத்தடியில்
பேப்பர் பேனாவுடன் அமர்ந்தார்

இரிசிக் காட்டேரி
இரத்தக் காட்டேரி
ஆலகால பேய்
ஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்
கதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்

ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தார்
என்ன எழுதியும் குஞ்சுண்ணிக்கு
திருப்தி வரவில்லை
எல்லாமே ஏற்கனவே எழுதியாயிற்றே
இனி நடக்கப்போவதும் எழுதப்பட்டவையே

குஞ்சுண்ணி கண்மூடி வேண்டினார்
எண்டே பகவதி அம்மே அருள் பாவிக்கனும்
ஒரு வல்லிய கதையை தரணும்
கண்ணை திறந்தார்
எதிரே
வெளுத்த முடி வேதாளமொன்று
குறுநகையோடு நின்றது

நடுங்கி போனார் குஞ்சுண்ணி
எண்டே அம்மே அலறினார்

நோக்கா குஞ்சுண்ணியே அஞ்சற்க
உனக்கு ஞான் உதவி செய்யும்

நீ அறியா மரித்துப்போனவர்களின்
கதை சொல்கின்றேன். கேள்

நீ பிரான்ஸ் காப்கா அறியுமோ
அவன் தற்கொலை செய்த கதை சொல்கின்றேன்
கவனமாய் கேள்

குஞ்சுண்ணி சொன்னார்
காப்கா கதை தெரிந்ததுதானே
துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளுமுன்
அவன் என்னுடன்தான்
அரைமணிநேரம் கதைத்தான்
எனது நாவல் என்றால் அவனுக்கு உயிர்

வேதாளம் திகைத்தது

குஞ்சுண்ணியே கவனமாய் கேள்
உனக்கு பாரதியாரை தெரியுமா
அவரை மிதித்துக்கொன்ற யானையின் பெயர் .....

குஞ்சுண்ணி இடைமறித்தார்
நான் அப்ப திருவல்லிக்கேணியில்தானே இருந்தேன்
நாடி வைத்தியரை கூட நான்தான் அழைத்து வந்தேன்
தெரிந்த கதைதானே. வேறு சொல்

வேதாளம் சலிப்புடன் சொன்னது
குஞ்சுண்ணியே உனக்கு ஆத்மாநாம் தெரியுமா
கிணற்றில் விழுந்து இறந்த அவரை
இங்குதான் புதைத்தார்கள்

ஆத்மாநாம்..
அட நம்ம ஆதி
அவனுக்கு நான் என்றால் உயிர்
சாவதற்கு முன்னால்
அவனிடம் பேசிய ஒரே ஆள் நான்தான்

வேதாளம் எரிச்சலுடன் கேட்டது
உனக்கு கவிஞர் அய்யப்பனை தெரியுமோ?
குடித்து குடித்தே இரத்தம் கக்கி இறந்தவர்

அய்யப்பனோ...அறியாமலோ
அவன் என்னை பற்றி
ஆறு கவிதைகள் புகழ்ந்து எழுதியுள்ளானே
நீ படித்ததில்லையா?

வேதாளத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது
குஞ்சுண்ணியே இதுதான் இறுதி கதை
முன்னொரு சமயம்
இரத்தினபுரி தேசத்தில்
ரங்கராஜனென்று ஒருத்தன் இருந்தான்

அவன் எழுதாத விஷயமே இல்லை
திடீரென ஒருநாள்
அவன் இறந்தும் போனான்
அவன் கதை அறிவாயோ?
வேதாளம் கேட்டது

குஞ்சுண்ணி சொன்னார்
நம்ம ரங்குதானே
நானும் அவனும்
கோனார் தோப்பில்
மாங்காய் திருடி சாப்பிட்டுள்ளோம்
எனது எழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளுவான்

வேதாளம் தலை கிறுகிறுக்க
முருங்கை மரத்திற்கு தாவியது

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத
குஞ்சுண்ணி
வேதாளத்தை தோளில் சுமந்தபடி திரும்பினார்


நன்றி
என்.விநாயக முருகன்