Thursday, January 24, 2013

முந்தி பிறந்தவன்

நான் இரண்டாயிரத்து பதிமூன்றில்
நின்றுக்கொண்டு
இரண்டாயிரத்து அறுபத்திமூன்றிற்கான
கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நான் ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்திருக்க வேண்டும்

அல்லது
எனது கவிதைகள்
ஐம்பது வருடங்கள் முந்தி பிறந்து விட்டன
அல்லது
நீங்கள் ஒரு ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்தால்
வானத்திலிருந்து இறங்கி வந்த இரண்டு தேவதூதர்கள்
ஒய்எம்சிஏ திடலில் நின்றுக்கொண்டு
எனது கவிதைத்தொகுப்பை விமர்சிப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
பச்சைநிறக் கொம்புகள் கொண்ட இரண்டு ஏலியன்கள்
எனது கவிதையை படித்து
கழிவிரக்கம் கழிவிரக்கமென்று
தலையில் அடித்துக்கொண்டுச் செல்வதை பார்த்திருக்கலாம்

அல்லது
நீலக்கண்களும் பொன்னிற கூந்தலுங்கொண்ட
தேவேலோக சுந்தரிகள் (ஒட்டிப்பிறந்த சகோதரிகள்)
எனது கையெழுத்து வேண்டி புத்தகக்கடை வாசலில்
ஏக்கத்துடன் தவமிருப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
…….
…….
…….

நீங்கள்
ஒரு ஐம்பது வருடங்கள் முந்திப்பிறந்து விட்டீர்கள்
அதை விட குறிப்பாக
இந்தக்கவிதையை ஒரு ஐம்பது வருடங்கள் முந்தி
படித்துத் தொலைத்து விட்டீர்கள்



நன்றி
என்.விநாயக முருகன் 

2 comments:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. Once Again...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5.html

    ReplyDelete