Thursday, July 18, 2013

காந்தம்

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் ஒரு டீக்கடையில் தம் அடித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்தில் ஒரு விநோதமான நபர் வந்து நின்றார். அழுக்கு சட்டை அழுக்கு கட்டம் போட்ட லுங்கி இடது கையில் ஒரு பெரிய துணிப்பை... இருந்தது. வலது கையில் ஒரு நீண்ட பிளாஸ்டிக் கம்பு இருந்தது. கம்பின் ஒரு முனையில் பெரிய சைஸ் கைமுறுக்கு போல ஒரு வஸ்து இருந்தது. அதில் சில ஆணிக்கள், ஸ்டீல் ஸ்க்ருக்கள், சின்ன சாவியொன்றும் கூட கொஞ்சம் இரும்புத்துகள்களும் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த பிளாஸ்டிக் குழாயை பார்க்க விசித்திரமாக இருந்தது. அவரிடம் என்னங்க அதுன்னு கேட்டேன். இது காந்தம்ங்க என்றார்.

"காந்தமா?'

"ஆமாங்க. இந்த கம்பை பிடிச்சிக்கிட்டு தரையில் காந்தத்தை வைத்து நடந்துக்கிட்டே இருந்தா மண்ணுல கிடக்குற ஊசி,ஆணி,இரும்பு சாமான்கள் எல்லாம் இதில் ஒட்டிக்கும்"

"இதை வச்சு என்ன செய்வீங்க?"

"இந்த மாதிரி இரும்புகளை சேகரிச்சு எடைக்கு போட்டா காசு கிடைக்கும்" என்றார்

"அப்படியா எவ்வளவு கிடைக்கும்?" என்றேன் ஆர்வமாக

"அது கிடைக்குங்க. எடைக்கு போட்டா ஒருநாளுக்கு ஐம்பதும் கிடைக்கும். பத்தும் கிடைக்கும். சில நேரம் ஒண்ணுமே கிடைக்காது. சில நேரம் இரும்பு சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஆனால் பணம் செயின் கூட எதுன்னா கீழே கிடக்கும்"

"அது சரி ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இந்த வேலையை செய்யுறீங்க?"

"காலையில ஆறு மணிக்கு போரூர் சிக்னலாண்ட நடப்பேன். அப்படியே விருகம்பாக்கம் நெசப்பாக்கம் ,கேகேநகர்ன்னு நடந்துக்கிட்டே இருப்பேன். சாயங்காலம் வரைக்கும் இந்த காந்தத்துல என்ன ஒட்டுதோ அதை இந்த பைக்குள்ள போட்டுக்குவேன். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் இதுங்கள காயலான் கடையில போட்டுடுவேன்"

அவர் டீயை குடித்து விட்டு ஏற்கனவே பாதி குடித்து மிச்சமிருந்த ஒரு பீடித்துண்டை சட்டைப் பாக்கெட்டில் இருந்து பற்ற வைத்தார்

"உங்களுக்கு குடும்பம் இருக்கா?".கேட்டேன்

"சம்சாரம் இருக்குங்க" என்றார்.

"அவங்களும் இந்த வேலையைத்தான் செய்யுறாங்களா?" கேட்டேன்.

"இல்லீங்க. அவங்க வடபழனி சிக்னல்ல நோட்டு ,பென்சில் ,காது கொடயுற குச்சி, கார் தொடைக்கற துணியெல்லாம் விக்கறாங்க" என்றார்.

"உங்க வீடு போரூரா?" கேட்டேன்.

"வீடா தமாஷ் செய்யாதீங்க தம்பி. எங்களுக்கெல்லாம் வீடு இல்ல. நாங்க இப்படியே பகல் புல்லா ரோட்டுல சுத்திக்கிட்டு இருப்போம். நைட்டு பத்து பன்னிரண்டு ஆனா பிளாட்பாரம் ஓரமா துணியை விரிச்சு போட்டு படுத்துக்குவோம்" என்றார்

"எப்படிங்க பொண்டாட்டிய வச்சுக்கிட்டு ரோட்டுல குடும்பம் நடத்துறீங்க?"

"ஆமா நாங்க என்ன ஊர் மெச்ச கண்ணாலமா கட்டிக்கிட்டோம். அவ எந்த ஊர்ன்னே எனக்கு தெரியாது. சால்னா கடையில பார்த்தேன். கழுதைய புடிச்சிருந்துச்சு. சேர்த்துக்கிட்டேன்"

"பிளாட்பாரத்துல படுக்கறது கஷ்டமா இல்லீங்க?"

"என்ன செய்யுறது? பழகிடுச்சு. குளிக்கறது .மலம் கழிக்கறது. சம்சாராத்தோட படுக்கறது எல்லாமே ரோட்டுலதாங்க" என்றார். ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் டீயை குடித்தபடியே அவரை பார்த்தேன்.

"இவ்வளவு வெவரம் கேக்குறீங்களே. நீங்க பத்திரிக்கை ஆளா? போட்டோ புடிப்பீங்களா. எதுனா காசு தருவீங்களா ?"

"நான் பத்திரிக்கை ஆளு இல்லீங்க. பேஸ்புக்குல எழுதறவன்"

"ஓ புக்கு எழுதுறவரா?"

ஙே........

"நைட்டுல ரோட்டுல படுக்கறது சிரமமா இல்லீயா?". திரும்ப கேட்டேன்.

"நைட்டு வர்ற இந்த போலீஸ்காரங்கதாங்க தொல்லை செய்யுறாங்கா. கையில இருக்கற அஞ்சு பத்தை பிடுங்கிட்டு போயிடறாங்க." என்றார்.

"உங்ககிட்டேயுமா" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா. இந்த மாதிரி ரோடு ரோடா காந்தம் வச்சிக்கிட்டு இரும்பு சேகரிக்கறீங்களே. இந்த வேலையை எப்படி ஆரம்பிச்சீங்க?"

"முன்னாடி பிச்சைதான் தம்பி எடுத்துகிட்டிருந்தேன். என்னோட தோஸ்துதான் இப்படி ஒரு தொழிலை கத்து கொடுத்தான்" என்றார்

"அப்ப உங்கள போல நிறைய பேரு இந்த காந்தத்தால இரும்பு எடுக்கற தொழிலை செய்யுறாங்களா?" கேட்டேன்

"ஆமாங்க. சென்னையில எனக்கு தெரிஞ்சு அம்பது பேர் இந்த வேலையை செய்யுறாங்கன்னு நினைக்கின்றேன்"

சற்று நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

"முன்ன மாதிரிவீட்டுகாரங்க இல்லிங்க. நாங்க மெயின் ரோடாத்தான் போய் இரும்பு எடுக்கறோம். வீடு இருக்கற தெருவுக்குள்ள போனா இரும்பு திருடறோம்னு சொல்லி அடிச்சு தொரத்துறாங்க" என்றார்.

"போன வாரம் கூட ஒரு தெருல இந்த குச்சிய வச்சுக்கிட்டு நடந்து போய்கிட்டிருந்தேன். இந்த காந்தம் அவங்க வீட்டு இரும்பு கேட்டுல ஒட்டிக்கிச்சு. அந்த வீட்டமா என்னை திருடன்னு நெனைச்சு தெரு ஆளுங்க என்னை பிடிச்சு போலீஸ்ல கொடுத்துட்டாங்க. கால்ல ரொம்ப அடிச்சுட்டாங்க. அதான் தாங்கி தாங்கி நடக்குறேன்" என்றார்

டீக்கடையிலிருந்து கிளம்புபோது கவனித்தேன். அவர் கையில் இருந்த காந்தக்குச்சியில் என்னனவோ விநோதமான இரும்பு சாமான்கள் எல்லாம் ஒட்டியிருந்தன. அவரது காந்தம் கேட்டில் மாட்டிக்கொண்டபோது அந்த வீட்டம்மா ஓடிவந்ததை கற்பனை செய்து பார்த்தேன். மனித இதயம் இரும்பால் ஆனதுன்னு சொல்றாங்களே. ஒருவேளை அது அவர் கையில் இருக்கும் காந்தக்குச்சியில் ஒட்டியிருக்குமா என்று கவனித்தேன். அது தெரிந்துதான் அந்தம்மா பயந்து போய் ஓடிவந்து போலீசில் சொல்லியிருக்குமோ?

சிரிப்பாக இருந்தது.

2 comments:

  1. இப்படியும் சிலரது வருத்தப்பட வைக்கும் வாழ்க்கை...

    ReplyDelete