Saturday, July 27, 2013

நந்தி ஒரு மானஸ்தன்

இண்டர்நெட் வந்தபிறகு திட்டுகளும்,வசவுகளும் அதிகமாகி விட்டன. நிஜ வாழ்க்கையில் இல்லாத தாக்கத்தை மனஉளைச்சலை இந்த இண்டர்நெட் வசவுகள் ஏற்படுத்துகின்றன.   

சாலையில் டூவீலரில் செல்கின்றோம். தெரியாத்தனமாக ஆட்டோவில் இடித்து விடுகின்றோம். உடனே ஆட்டோக்காரர் டே..பாடு என்கின்றார் கோபத்துடன். உடனே நாம் பாடுவதில்லை. சாரி சார். தெரியாமல் இடிச்சுட்டேன் என்று பயந்து வந்து விடுகின்றோம். ஆட்டோக்காரர் சிக்னலில் கோடு தாண்டி வந்து நிற்கின்றார். டிராபிக் போலீஸ் கழுவி கழுவி ஊற்ற, சாரி சார். இதோ எடுத்துறேன் சார் ஆட்டோவை என்று பம்முகின்றார் . டிராபிக் போலீசை அவரது மேலதிகாரி திட்டுகின்றார் . அந்த மேலதிகாரியை வார்டு கவுன்சிலர் அவரை அமைச்சர் அவரை எதிர்கட்சி அமைச்சர் இவர்களை பத்திரிக்கைகாரர்கள் இவர்கள் எல்லாரையும் பொதுமக்களாகிய நாம் திட்டுகின்றோம். பிறகு பொதுமக்கள் நாம் நமக்கு நாமே திட்டி க் கொள்வோம். இப்படிதான் ஒரு ஆரோக்யமான ஜனநாயக அமைப்பு இயங்குகின்றது.

நேற்று ஒரு முகம் தெரிந்த அலுவலக நண்பரிடம் (பேஸ்புக் வந்தபிறகு யாரை நண்பர்கள் என்று குறிப்பாக எழுத வேண்டியுள்ளது) சாட்டுக்கு வந்தார். அவரது பேஸ்புக்கில் இவர் ஏதோ அசிங்க அசிங்கமாக திட்டி ஒரு கமெண்ட் போட அவர் இவரை அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். மிகவும் மனவேதனையாக உள்ளது என்றார்.  

"அந்த திட்டினவர் உங்களுக்கு ஸ்கூல் காலேஜ் நண்பரா?" என்றேன்.

"இல்லை" என்றார். 

"சரி.உங்களுக்கு தெரிந்தவரா?" என்றேன் 

"இல்லை" என்றார்.

"சரி.அவரை நேர்ல பார்த்து பேசி இருக்கீங்களா?" என்றேன்   

"இல்லங்க பேஸ்புக்கில்தான் பழக்கம்.அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு" என்றார்.

"வீட்ல உங்க பொண்டாட்டி,மேலதிகாரி,ரோட்டுல போறவன்,வர்றவன் எல்லாம் திட்டுறான். ஆனா அவங்க மேல வராத கோபம் உங்களுக்கு பேஸ்புக் FakeID திட்டுக்கள் மேல வருதா?" என்று கேட்டேன்.

"அதெப்படி எழுத்துல திட்டினா கோபம் வரக்கூடாதா? வள்ளுவர் கூட நாவினால் சுட்ட வடுன்னு சொன்னாரே" என்றார்.

"அது. விடுங்க அது அந்த காலத்துல பேஸ்புக் இருந்துச்சா? வள்ளுவரை யாராவது திட்டியிருப்பாங்க. அவர் பதிலுக்கு இப்படி ஒரு குறள் எழுதியிருப்பார்.எழுத்துல வாங்குறது, அடிச்சுக்கறது எல்லாம் அடியா?" கேட்டேன்.

"அப்படின்னா எழுத்தால மனவுளைச்சல் கொடுக்கறது உங்களுக்கு வலிக்காதா?படிக்கும்போது உங்களுக்கு வலிக்காதா?" என்னைப் பார்த்து கேட்டார்.            

"உண்மையான மனிதர்களின் திட்டு வலிக்கும். அவர்களின் எழுத்து வலிக்கும். ஆனால் பேஸ்புக்கில் அப்படி யாரும் இருப்பதாக தோன்றவில்லை. அறம் வைத்து பாடுவது எல்லாம் முடிந்து விட்டது" என்றேன்

"அது என்ன அறம் வைத்து பாடுவது?" என்றார் நண்பர்      

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு. அதாவது யார் மேல் அறம் வைத்து பாடுகின்றார்களோ (பாட்டுடைத் தலைவன்) அதை கேட்ட உடன் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான். போரில் நந்தி வர்மனை கொல்ல முடியாத எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள். அந்த புலவரும் காசுக்கு ஆசைப்பட்டு முதலில் நந்திவர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான். ஆனால் பிறகு மனம் மாறி பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லி விட்டான். அந்தப் புலவருக்கு ஒரு பரத்தையிடம் தொடர்பு இருந்தது. அவளோடு தனித்து இருக்கும் போது அந்த புலவர் தனது நந்தி கலம்பகம் என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களை பாடி காண்பித்துள்ளார்.

ஒருநாள் அந்த பரத்தை அரண்மனை வீதி வழியாக செல்லும்போது அவளுக்கு நினைவிலிருந்த சில நந்திக் கலம்பக பாடல்களை பாடிக் கொண்டே போனாளாம் .

அதை அரண்மனைமாடத்தில் நின்றுக் கொண்டிருந்த நந்திவர்மன் கேட்டுவிட்டான். அவனுக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்துபோக அவளை வரவழைத்து அந்தப் பாடல்களின் பிண்ணனி அறிந்துள்ளான். பிறகு அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை சொல்லி விட்டார்.

நந்திவர்மன் மகிழ்ச்சியோடு புலவனை கட்டிப்பிடித்து முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவர் சம்மதிக்கவில்லை . "அரசே , இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

நந்திவர்மன் கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவரைப் பாடச் சொன்னான்.

புலவன் சொன்னார் "மன்னா, மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒவ்வொரு பந்தலில் இருந்து கேட்க வேண்டும். அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றார்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் எரிந்து சாம்பலாய் போனான். இதுதான் நந்திவர்மன் கதை.

நந்திவர்மன்  எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஆனால் இந்த ஒரு வரி கதையில் அவ்வளவு சுவாரஸ்யம், திடுக்கிடும் சம்பவங்கள், புலவரின் கள்ளக்காதல் கிசுகிசு எல்லாம் இல்லாததால் அது உண்மையான வரலாறாக இருக்க முடியாது.               

இந்த கதையை சொன்னதும்

"அப்படியா? இது உண்மைதானா? " நண்பர் கேட்டார்.        

"அந்த காலத்துல உண்மை இருந்துச்சு. நேர்மை இருந்துச்சு. காசுக்கு ஆசைப்பட்டாலும் பிறகு மனம் மாறி புலவர் நல்லவரா மாறிட்டார். மன்னனிடம் உண்மையை சொல்லி விட்டான். கலைக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைத்தான் நந்திவர்மன். ஒருவேளை அந்த புலவர் பாடிய நூறாவது பாடலில் பந்தல் தீப்பிடித்து எரியாமல் இருந்திருந்தால் கூட பந்தலுக்கு தானே நெருப்பு வைத்து செத்திருப்பான். ஏன்னா நந்தி ஒரு மானஸ்தன்" என்றேன்  

"அப்படின்னா இப்ப உள்ளவங்க மானங்கெட்டவங்களா?" என்றார் நண்பர் கோபத்துடன்.

அப்படி நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் வீட்டுல பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க மலை உச்சிக்கு போயிருக்கார். தற்கொலை செஞ்சிக்க போனவன் அங்கே பாறைக்கு பக்கத்தில ஏதோ ஒரு நாவல் கிடந்திருக்கு. சரி. சாவுறதுதான் சாவுறோம். அந்த நாவலை படிச்சுட்டு அரைமணி நேரம் கழிச்சு சாவலாம். இப்ப செத்து அவ்வளவு சீக்கிரம் எங்க போகபோறோமுன்னு நாவலை பிரிச்சுருக்கான். நாவல் படிக்க படிக்க அது அவனை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைச்சுட்டு போயிருக்கு. அது இதுவரை பார்க்காத உலகம். அவனுக்குள் என்ன என்னவோ தோன்றியிருக்கு. இந்த நாவலை எழுதின எழுத்தாளரை உடனே பார்க்கனுமுன்னு மலை உச்சியிலிருந்து விடுவிடுன்னு இறங்கி எழுத்தாளர் வீட்டிற்கு போய் நடந்த உண்மைகளை சொல்லியிருக்கான். எழுத்தாளருக்கு செம ஆச்சர்யம். அப்படியா என்னால நீங்க தற்கொலை செஞ்சுக்கற முடிவை கைவிட்டுட்டியா? கேட்க, அவன் சொன்னானாம். என் பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க போனேன். இவ்வளவு கேவலமா கதை எழுதற உன்னை எத்தனை பேரு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்க. நீயே உயிரோட இருக்கும்போது நான் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது என்றானாம்

1 comment:

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி :)

    ReplyDelete