Thursday, July 25, 2013

ஒரு சிறுகதை இரண்டு சம்பவங்கள்

பாஸ் நீங்க உங்களோட கட்டுரைகளை அப்படியே சிறுகதையா எழுதலாமே என்று பேஸ்புக்கில் ஒருத்தர் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நான் சமீபத்தில் பார்த்த கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகின்றேன்.

சம்பவம்-1
----------------
சேகரும் , நானும் ஒன்பதாம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்தோம். பத்தாம் வகுப்பு வந்தவுடன் அவன் வேறு பிரிவு சென்று விட்டான். சென்று விட்டான் என்பதை விட அனுப்பி வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு வித அரசியல் நடக்கும். ஒன்பதாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் ஒரு பிரிவுக்கு அனுப்புவார்கள். மோசமான மாணவர்களை இன்னொரு பிரிவுக்கு அனுப்புவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வடிகட்டி அனுப்பி அதன் மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி விடலாமென்பது அவர்கள் கணக்கு. சேகருக்கு வருகின்றேன்.

நடிகர் அரவிந்த்சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்துக்கொள்ளவும். அப்படியே இருப்பான் சேகர். அப்படியே அரவிந்தசாமிக்கு திருநீறு பட்டை போட்டுக்கொள்ளவும். பட்டை என்றால் திக்காகவும் இருக்கக்கூடாது. மெலிதாகவும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விபூதி பட்டையை அவனது வீட்டில் எப்படி வைத்து விடுவார்கள் என்று இன்னமும் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த பட்டையை உங்க வீட்டுல வச்சாங்களா இல்ல செஞ்சாங்களா என்று கிண்டல் செய்வோம். சிரித்து க்கொள்வான். சேகர் அப்படிதான். என்ன கிண்டல் செய்தாலும் அதிர்ந்து பேசமாட்டான். எவ்வளவு வம்பு இழுத்தாலும் நகர்ந்து சென்று விடுவான். ஆனால் படிப்பு என்று வந்துவிட்டால் அவன் குட்டி தாதா. கணக்கில் செண்டமும் மற்ற பாடங்களில் செண்டத்திற்கு ஒன்றிரண்டு மார்க்குகள் குறைவாகவும் எடுப்பான். .

எந்தளவு சேகரை நாங்கள் கிண்டல் செய்து வம்பு இழுக்கின்றோமோ அந்தளவு எங்களுக்கு திட்டும்,அடியும் விழும். சேகரிடமிருந்து இல்லை. வாத்தியார்களிடமிருந்து. கணக்குப்பாட விடைத்தாள் திருத்தப்பட்டு வரும். சேகரது விடைத்தாளில் மூன்று இலக்க மதிப்பெண் இருக்கும். எங்கள் விடைத்தாளில் அந்த மதிப்பெண்ணின் கடைசி இலக்கம் இருக்கும். சேகர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா என்று வாத்தியார் கத்துவார். நல்லவேளை மூவாயிரம் பேர் படிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் பொண்ணுங்களுக்கென்று தனி பிரிவு இருந்தது. இருபாலாரும் இணைந்து படிக்கும் பிரிவுகளும் உண்டு. ஆனால் எங்கள் பிரிவில் வெறும் பசங்க மட்டும்தான். எந்தளவு சேகரை வாத்தியார்கள் நேசித்தார்களோ அந்தளவு நாங்கள் அவனை எதிர்த்தோம். அவனை பெயில் மார்க் ஆக்க எவ்வளவோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. தேர்வுக்கு முதல் நாள் அவனது புத்தகங்களை ஒளித்து வைத்தோம். வருடம் முழுவதும் படிக்கின்றவனுக்கு ஒருநாள் என்ன செய்யும்? அவனுக்கு சினிமா ஆசையை காட்டி சினிமாவுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால் எங்களுக்குத்தான் சினிமா பைத்தியம் பிடித்தது. இப்படி கல்லுளி மங்கன் போல படிப்பையே ஒரு தவம் போல செய்த சேகர் என்ற முனிவர் பத்தாவது வரும்போது அவனும்,நானும் வேறு வேறு பிரிவுகள் மாறி இருந்தோம். பத்தாவதில் நான் சுமாரான மதிப்பெண்களோடு பாஸ் செய்து வேறு பள்ளிக்கு சந்தோஷமாக சென்றேன். சேகர் ஸ்டேட் பர்ஸ்ட் வருவானென்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை. இரண்டு பாடங்களில் மட்டும் மாநில அளவில் மூன்றாவது. கணக்கில் வழக்கம் போல செண்டம். இதெல்லாம் இருபது வருட கதை.

இதெல்லாம் இருபது வருட கதை. கடைசியாக சேகரை எங்கு நான் பார்த்தேன். மறந்து விட்டது. நினைவுப்படுத்திச் சொல்கின்றேன. மேற்கொண்டு படிக்கவும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு பலான புத்தகங்களும், சினிமாக்களும் அறி முகமானது. பள்ளியில் வெளியே யானையடி என்ற இடமிருக்கும். அந்தக்காலத்தில் யாரோ பெரிய யானை சிலையை அங்கு கட்டி வைத்து விட்டு சென்று விட்டான் போலிருக்கு. அதனால் அந்த பகுதிக்கு யானையடி. யானை கட்டி போராடித்த நெல்வயல்கள் கும்பகோணத்தில் இருந்ததால் யானையடி என்றும் வந்ததாக சொல்வார்கள். ராஜராஜ சோழன் கும்பகோணத்தில் (குடந்தை) இருந்து தஞ்சாவூர் செல்ல இந்த வழியைத்தான் தேர்வு செய்வானாம். சுவாமிமலை வழியாக தஞ்சாவூர் செல்லும். ஆனால் இப்போது யாரும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்லை. இப்போது வேறு வழி இருக்கின்றது. அப்படி ராஜராஜனோ வந்தியத்தேவனோ,குந்தவை நாச்சியாரோ செல்லும்போது இங்கு யானையை கட்டிவைத்து ஓய்வு எடுப்பார்களாம். அதனால் யானையடி. நமக்கு எதுக்கு வரலாற்று புரட்டு எல்லாம். அந்த யானை சிலை பக்கத்தில் இருக்கும் பழைய பேப்பர் கடையில்தான் சரோஜாதேவி,பருவராகம்,மருதம் , இளமை ஜுஸ் போன்ற புத்தகங்கள் கிடைக்கும்.

யானையடியிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிக்கூடம். புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. என்ன அப்போதெல்லாம் காசுதான் பிரச்சினையாக இருக்கும். அதற்கும் ஒரு வழி வைத்தோம். மாணவர்கள் எல்லாரும் காசு போட்டு பாதி விலையில் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒவ்வொருத்தனும் ஒருநாள் புத்தகத்தை எடுத்துச் செல்வோம். ஒரு வாரம் கழித்து அதே புத்தகத்தை கால் விலைக்கு விற்று விடுவோம். பலானபடங்கள் பார்க்கதான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். எப்படியாவது டியூசன் பீஸ் அது,இதுவென்று தேத்தி விடுவோம். கும்பகோணத்தில் இருக்கும் ஆறு,ஏழு தியேட்டர்களில் எப்படியும் அவளோட ராவுகள், அவள், பூக்காரி ஏதாவது ஓடும். ஆனால் சேகர் மானஸ்தன். செத்தாலும் பலான படங்களுக்கோ,பலான புத்தகங்கள் பக்கமோ தலைவைத்தும் படுக்க மாட்டான். மற்றபடி கட் அடித்து நாங்கள் செல்லும் விஜயகாந்த் ,சத்யராஜ் படங்களுக்கு அவன் வருவான்

நினைவு வந்து விட்டது . சேகரை நான் மீண்டும் பார்த்தது. அரிசோனாவின் பீனிக்ஸ் ஏர்போர்ட்டில். கடந்த வருடம் ஜூலை மாதம். ஜூலை மாதம் பீனிக்ஸ் என்றால் வெயில் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த சில விநாடிகளுக்குள் முகம் பழுத்து விட்டது . அது சேகர்தானா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. பக்கத்தில் சேட்டு வீட்டுப்பெண் போல. அவள் பக்கத்தில் ஆறு ஏழு வயதிருக்கும். மகனா மகளா என்று தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான். பத்து வருடங்களாக யு.எஸ்.சில்தான் குப்பை கொட்டுவதாகவும் நியூயார்க் ,புளோரிடா, ரிச்மாண்ட், கலிபோர்னியா என்று யு.எஸ் முழுவதும் அலைந்து விட்டதாகவும் சொன்னான். இப்போது பீனிக்சிலிருந்து கும்பகோணத்திற்கு கிளம்புவதாகவும் ஒரு மாதம் லீவ் எடுத்து விட்டு சென்னைக்கு வந்து வேறு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய போவதாகவும் சொன்னான். அதிக நேரம் பேசவில்லை இருவரும். போன் நம்பர்கள் வாங்கிக்கொண்டோம். அவனுக்கு அடுத்து கனெக்டிங் பிளைட்டை பிடிக்கும் அவசரம். சேகரின் வேலை,சம்பளம் பற்றி விசாரித்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. நான் வாங்கும் அதே சம்பளம்தான்

பீனிக்ஸ் சென்ற பிறகு ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே நான் சேகரை மறந்தேப்போனேன். இரண்டு மாதங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டேன். கடந்த மாதம் எதேச்சையாக கும்பகோணம் சென்றபோதும் எனக்கு சேகர் நினைவுக்கு வரவில்லை. அந்த யானையடி யானை சிலையை எனது காரில் தாண்டியதும் ஆர்வமாகி பழைய புத்தகக்கடையை பார்த்தேன். கடை இல்லை. அங்கெ ஷாப்பிங் மால் போல ஏதோ ஒரு பில்டிங் இருந்தது. சேகர் நினைவுக்கு வந்தான். சேகரின் நம்பரை தேடினேன். அது எனது யு.எஸ் செல்போனில் சேமிக்கப்பட்ட நினைவு. அந்த செல்போன் சென்னையில் விட்டு வந்திருந்தேன். சரியென்று ஒரு பள்ளிக்கூட நண்பருக்கு போன் செய்து சேகரை பற்றி விசாரித்தேன். அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. தெளிவாக சொல்லு. அவன் சாமியாரா போய்ட்டாண்டா. தேட வேணாம்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்ட்டான். எங்க போனான்னு தெரியலை. தேடிகிட்டிருக்கோம் என்றான்.


சம்பவம்-2
-----------------
கடந்த வாரம் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. எனது அலுவலக நண்பர் தான் இதை சொன்னார்.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர். அவரும் எங்கள் அலுவலகத்தில்தான் (கோயம்புத்தூர் கிளை) மாட்யூல் லீடாக வேலை செய்தார்) மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர். வீட்டிற்கு ஒரே பையன். வயது இருபத்தைந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை. நல்ல வசதியான குடும்பம் வேறு . அப்பா ஜின்னிங் பேக்டரி வைத்துள்ளார். இருந்தும் பையன் ஆசைப்படி கணிப்பொறி படிக்க வைத்துள்ளார் . அவர் திடீரென ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவர் எனது நண்பரிடம் அடிக்கடி சொல்வாராம். 

இந்த வாழ்க்கை நிலையற்றது. செல்வத்தை தேடி ஓடும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் போல ஏதாவது மனிதகுலத்துக்கு சேவை செய்துவிட்டு செத்துப்போகவேண்டுமென்று நண்பரும் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் திடீரென அலுவல வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜக்கி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாராம்.

இதுக்கு மேல் நடந்ததுதான் ஹைலைட். நேற்று நானும் எனது நண்பரும் டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். எனது நண்பர் என்னிடம் ஒரு பயோடேட்டாவை கொடுத்து,

"இந்த நபருக்கு உங்கள்  டீமில்  ஏதாவது  வேகன்சி உள்ளதா?" என்று கேட்டார்.

"யார் உங்களுக்கு தெரிந்த நபரா?" என்றேன்.

"நான் சொல்லலை..அந்த கோயம்புத்தூர் ஆசிரம பார்ட்டி அவருதான் இவரு" என்று சொல்ல ஒருக்கணம் திகைத்துவிட்டேன்.

 "என்னாச்சு?" என்று கேட்க,

"அதை ஏன் கேட்கறீங்க? இவன் ஆசிரமத்திற்கு போயிருக்கான். அங்க செம வேலை. பெண்டு கழற்றியிருக்காங்கா. கிணத்துல தண்ணி இறைக்கறது. தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறது. சமையல் செய்யுறது. எச்சி தட்டு கழுவறது. கக்கூஸ் கழுவறது எல்லா வேலைகளையும் இவனை செய்ய சொல்லியிருக்காங்க. நண்பர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா? பிஞ்சுக்கை வேற.. கையெல்லாம் கொப்புளம் வந்து உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் சேரும்படி ஆகிவிட்டதாம். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரம சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு ஓடி வந்துட்டாராம். ஒரு மாசம் வேலை இல்லாமல் இருக்கவே தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல் தாங்க முடியாமல் இப்போது மீண்டும் வேலை தேடுகின்றாராம்" என்றார்.


முதல் சம்பவத்திற்கும் இரண்டாவது சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவர் பெயர் சேகர். இவர் பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை. அவர் யு.எஸ் முழுவதும் அலைந்து கும்பகோணத்தில் காணாமல் போயுள்ளார். இவர் கோயம்புத்தூரை கூட தாண்டாதவர். அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். இவருக்கு கோவையில் சொந்தமாக ஜின்னிங் பேக்டரி உள்ளது. ஒருவேளை அவரு சென்ற அதே ஆசிரமத்தில் இவரும் சேர்ந்திருக்கலாம். யார் கண்டது அந்த இரண்டு பேரும் சந்தித்து கூட பேசியிருக்கலாம். இப்படி ஏதாவது கற்பனை கலந்து அடித்து விட்டால் ஒருவேளை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கக்கூடும்.

2 comments:

  1. மிக அற்புதமான கதை .எனது பழைய கும்பகோணம் நிகழ்வுகளை நினைவு படுத்தியதுபோல் உள்ளது .நீங்கள் தேடிய அந்த புத்தக கடை எதோ R .S நாதன் என்ற பெயரில் பார்த்ததாக ஞாபகம் . நீங்கள் எங்கு கம்ப்யூட்டர் படித்தீர்கள்? குடத்தை கல்லூரியில் எந்தவருடம் படித்தீர்கள் கூறமுடியுமா?
    SATHEESH MENON
    KOCHI

    ReplyDelete