Tuesday, December 31, 2013

ஆக நீங்கள் ஒரு எழுத்தாளனாக வேண்டுமா?

-----சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எல்லாவற்றையும் மீறி உங்களிடமிருந்து
அது பீறிட்டு வெளிவராத வரை
அதை செய்யாதீர்கள்
உங்களை கேளாமல்
உங்கள் இதயத்திலிருந்தும்,
உங்கள் மனதிலிருந்தும்
உங்கள் வாயிலிருந்தும்
உங்கள் வயிற்றிலிருந்தும்
அது வரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.
மணிக்கணக்கில் அமர்ந்து
கணிப்பொறித் திரையை வெறித்தபடியோ
தட்டச்சு எந்திரத்துடன் குறுக்கி அமர்ந்திருந்தோ
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

பணத்திற்காகவோ, புகழுக்காகவோ
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

உங்கள் படுக்கையில்
பெண்கள் வேண்டுமென்பதற்காக
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.
அங்கு அமர்ந்து
நீங்கள் அதை
மீண்டும் மீண்டும் எழுதுவதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

அதைச் செய்வது பற்றி சிந்தித்திருப்பதென்பதே
கடும் உழைப்பாகுமானால்
அதைச் செய்யாதீர்கள்.
யாரோ ஒருவரைப் போல நீங்கள் எழுத முயல்வதாயிருந்தால்
அதை மறந்துவிடுங்கள்.

உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேற
நீங்கள் காத்திருக்க வேண்டியிருந்தால்
பொறுமையாக காத்திருங்கள்.
உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேறவே
இல்லையென்றால்
அதை
மறந்து விடுங்கள் 

முதலில் உங்கள் மனைவியிடமோ
அல்லது உங்கள் பெண் நண்பியிடமோ,
அல்லது உங்கள் ஆண் நண்பரிடமோ
அல்லது உங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு யாரிடமோ
படித்துக்காட்டவேண்டியிருந்தால்
நீங்கள் தயாராக இல்லை

மற்ற அத்தனை எழுத்தாளர்கள் போலிருக்காதீர்கள்
தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
பல்லாயிரம் மனிதர்களைப் போல் இருக்காதீர்கள்

உப்புச்சப்பற்று, சலிப்பாக,
பாசாங்கு மிகுந்து
சுயகாதலால் கபளீகரம் செய்யப்பட வேண்டாம்.

உலகின் நூலகங்கள்
உங்களைப் போன்றோரால்
கொட்டாவி விட்டுதூங்கிவிட்டன.

அதில் சேராதீர்கள்
அதை செய்யாதீர்கள்

உங்களின் ஆன்மாவிலிருந்து
ஒரு ராக்கெட்டினைப் போல
அது வெளிவந்தாலொழிய

சும்மாயிருப்பது உங்களைப் பைத்தியத்தில் ஆழ்த்திவிடும்,
அல்லது தற்கொலையில்
அல்லது கொலையில் என்றால் ஒழிய
அதைச்செய்யவேண்டாம்.

உங்களுக்குள் இருக்கும் சூரியன்
உங்கள் குடலை எரித்துக்கொண்டிருந்தால் ஒழிய
அதைச் செய்ய வேண்டாம்.

நிஜமாகவே அதற்கான நேரம் வந்து விட்டால்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
அது தானாகவே செய்துகொள்ளும்
அது தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கும்

நீங்கள் சாகும்வரை அல்லது
அது உங்களுக்குள் சாகும்வரை

வேறெந்த வழியுமில்லை
என்றுமே இருந்ததுமில்லை.


ஆங்கில மூலம்

--------Charles Bukowski

if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.
if you're doing it for money or
fame,
don't do it.
if you're doing it because you want
women in your bed,
don't do it.
if you have to sit there and
rewrite it again and again,
don't do it.
if it's hard work just thinking about doing it,
don't do it.
if you're trying to write like somebody
else,
forget about it.


if you have to wait for it to roar out of
you,
then wait patiently.
if it never does roar out of you,
do something else.

if you first have to read it to your wife
or your girlfriend or your boyfriend
or your parents or to anybody at all,
you're not ready.

don't be like so many writers,
don't be like so many thousands of
people who call themselves writers,
don't be dull and boring and
pretentious, don't be consumed with self-
love.
the libraries of the world have
yawned themselves to
sleep
over your kind.
don't add to that.
don't do it.
unless it comes out of
your soul like a rocket,
unless being still would
drive you to madness or
suicide or murder,
don't do it.
unless the sun inside you is
burning your gut,
don't do it.

when it is truly time,
and if you have been chosen,
it will do it by
itself and it will keep on doing it
until you die or it dies in you.

there is no other way.

and there never was.



நன்றி
விநாயக முருகன் 

 

Sunday, December 29, 2013

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

'ராஜீவ் காந்தி சாலை' என்ற எனது முதல் நாவலின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருக்கும் (ஸ்பென்சர் எதிரே) புக்பாயிண்ட் புத்தகக்கடை அரங்கில் நடக்க உள்ளது. உயிர்மை பதிப்பக சார்பில் நடக்கும் இந்த விழாவில் மேலும் பல நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர உள்ளன. நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 



காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுகளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.
ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
(நாவலின் பின்னட்டையிலிருந்து)

நன்றி
விநாயக முருகன்


ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

அகநாழிகை 

டிஸ்கவரி புக் பேலஸ்

வீகேன்

Thursday, December 5, 2013

பட்ட விரட்டி



காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

Monday, December 2, 2013

எறும்புத் தின்னி


எப்போதாவது

சாலையோரம்

கையிலிருக்கும் காந்தக்குச்சியால்

தரையை துடைத்துக்கொண்டேச் செல்லும்

இரும்பு பொறுக்கியை சந்தித்ததுண்டா



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

பூட்டிலிருந்து சாவிக்கள் உதிர்கிறன



அவனைக் கண்டு

சிறுசிறு ஆணிக்கள் பின்தொடர்கிறன

வீடுகளின் மேற்கூரையிலிருந்து

இரும்புச்சட்டங்கள் விடுபடுகிறன

கொடிக்கம்பங்கள் சாய்ந்து வளைகிறன



இரும்புக்கதவுகளை இறுக தாழிட்டுக் கொள்கிறார்கள்

இருசக்கர வாகனங்களை இறுகப் பிடித்து கொள்கிறார்கள்

இரும்பு பணப்பெட்டிகளை பூட்டி வைக்கிறார்கள்

தொடர் வண்டிகள் மெதுவாக செல்கிறன

தண்டவாளங்கள் நெளிகிறன



அவனைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்

அவனைக் கண்டு நாய்கள் குரைக்கிறன

அவனைக் கண்டு பறவைகள் பதறி பறக்கிறன

அவனைக் கண்டு கடவுளுக்கு பயம் வருகிறது



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

ஒருக்கணம் உலகம் பதறி

மீண்டும் சுழல ஆரம்பிக்கிறது