Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம்.

வலம்
----------
----இரா.முருகவேள்

தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் எழுத்துக்கள் எப்போதுமே முக்கியமானவை. அவைதான் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன. அதிலும் நூலாசிரியருக்கு தான் எடுத்துக் கொண்ட காலப் பகுதியின் மக்கள் வாழ்வைத் தேடிக் கண்டுகொள்ளும் பிடிவாதமும் ஆவலும் இருந்து அவர் அதற்காக உழைக்கவும் தயாராக இருந்து விட்டால் நிச்சயம் ஒரு நல்ல இலக்கியம் பிறந்து விடும்.

அந்த வகையில் விநாயக முருகனின் வலம் குறிப்பிடத்தக்க நாவலாக உருவாகியிருக்கிறது. சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் நாவலின் பின்னணி. நரிகளுக்கும் சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும் அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது வலம்.

தமிழக நாட்டுப்புறக் கதைகளில் நரிக்குத் தனி இடம் உண்டு என்று விமர்சகர் முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார். நரி எப்போதும் மனிதனுடன் போட்டி போடும். நரியை வெற்றி கொள்வதுதான் மனிதனின் சாம்ர்த்தியம் என்று நாட்டுப்புறக் கதைகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும். இயற்கையின் நுட்பமான வலைப் பின்னலில் நரி ஒரு தவிர்க்க முடியாத இணைப்பு. இப்போது தமிழக மலையோர கிராமங்களி நரிகளும் கீரிகளும் அழிந்ததால் மயில்களும் மற்ற பறவைகளூம் பெருகி விவசாயிகளுக்குப் பெரும் தொல்லையாக மாறிவருகின்றன. நரிகள் போதுமான எண்ணிக்கையில் இருந்திருந்தால் அவை பறவை முட்டைகளைக் குடித்து பறவைகளில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கும்.

நுட்பமாகப் பார்த்தால் இந்த உறவை நமது நாட்டுப்புறக் கதைகள் வலியுறுத்துவதை உணர முடியும். ஆனால் வெள்ளையர்களின் பார்வை வித்தியாசமானது. தங்கள் நாடுகளில் பெரும் காடுகளை அழித்தும் தனியுடமையாக்கியும் பெற்ற அனுபவங்களோடு வெள்ளையர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் நமது மலைக்காடுகளை வெட்டிச் சாய்த்தனர். சதுப்பு நிலங்களை வடித்தனர். யானைகளையும் புலிகளையும் மான்களையும் மற்ற மிருகங்களையும் கொன்று குவித்தனர். பின்பு நடந்ததை துன்பக் கேணீயும் தமிழக மலையக எஸ்டேட் இலக்கியமும் பேசும். இவற்றின் தொடக்கம் சென்னையைச் சுற்றி ஆரம்பித்தது என்பதை வலத்தில் காண முடிகிறது.

கதை நரி மேட்டு சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும் இயற்கைக்கும் சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரி மேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை ஒரு கொலை வழக்கு மற்றும் நரி வேட்டையின் பின்னணீயில் சொல்கிறார் விநாயக முருகன்.

ஓர் ஓவியம் வரையும் போது அதையொட்டிய காட்சிகள் அதனதன் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து விடுவது போல புதிய சென்னை நகரத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதி, அயோத்திதாசப் பண்டிதரின் தலைமையில் முதல் தலித் இயக்கம் துளிர்விடுவது, பஞ்சம், பாலியல் தொழிலாளர்களீன் நிலை, என்று அனைத்தையும் நம் முன்னர் விரித்து வைக்கிறது வலம். அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து விலகிச் செல்வதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோஹன் சென்னையின் காவல்துறை அதிகாரி. பிரபு குடும்பத்தில் வந்தவன். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய கோஹனின் பெயர் தனக்கு வைக்கப்பட்டிருப்பதை பெருமையாக உணர்பவன். மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

புளியந்தோப்புப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நரிகளால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறான். அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகள் நரிகளால் கொல்லப்பட்டன என்பதை நம்ப மறுக்கின்றனர். அங்குதான் கோஹன் உள்ளூரில் வாழும் ஆங்கிலம் தெர்ந்த தலித் மக்களின் தலைவனான ரத்தினத்தைத் சந்திக்கிறான். உடல்களை உயர்சாதி அதிகாரியின் வண்டியில் ஏற்றச் சொல்லும் போது அவர் மறுக்கிறார். சென்னையின் சாதி பற்றிய ஆரம்ப அறிவு அவனுக்குக் கிடைக்கிறது.

பேட்டர்ஸன் அய்ர்லாந்தைச் சேர்ந்த படைவீரன். அவனது அப்பா அயர்லாந்தில் பண்ணையில் வேலையாளாக இருந்தார். குலப்பெருமை அற்றவனாகவும் பணமில்லாதவனாக இருப்பதையும் உணர்ந்த தாழ்வு மனப்பான்மை அவனை உறுத்திக் கொண்டே இருக்கிறது. மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் கோபம் அதி தீவிரத்துடன் அவனை நரி வேட்டையில் ஈடுபடச் செய்கிறது. அவன் வெறி பிடித்தவனாக சென்னையைச் சுற்றி நரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான்.

சென்னையில் வேட்டைக்காரர்களுக்காக ஒரு கிளப் இயங்குகிறது. அதன் உரிமையாளர் மெக்கன்ஸி உயர்ரக நாய்களையும் குதிரைகளையும் நரிவேட்டையாடுபவர்களுக்கு அளிக்கிறார். கவர்னர் (கன்னிமாரா?) பெரும் குடிகாரராகவும் பெண் பித்தராகவும் இருக்கிறார். சென்னையை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுகிறார். அவரது இனிமையான குணமுடைய ஓவியரான மனைவி சூஸன் கவர்னரின் குணத்தால் வெறுப்படைந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சென்னையின் அக்கால வாழ்க்கை குறிப்பாக வெள்ளையர் வாழ்க்கை நம் கண் முன் விரிகிறது.

பஞ்சப் பிரதேசங்களில் இருந்து மக்கள் நிழல்கள் போல நகரினுள் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். உணவின்றிக் குழந்தைகள் உயிர்விடுகின்றன. நெல் ஏற்றிச் செல்லும் வண்டிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அரசு சென்னைக்கு ரயில் பாதை அமைக்கவும் நகரை இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறது.

வலம் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு நாவலில் இருக்கத்தான் செய்கிறது.

சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பின் ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன.

நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்விடங்கள் ஆகிரமிக்கபட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்கு பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

இக்கதை நடக்கும் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மருது பாண்டியர், பூலித்தேவன், கட்டபொம்மன், எல்லோருக்கும் மேலாக ஊமைத்துரை தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போர்கள் நிகழ்ந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் எல்லா பாளையக்காரர்களின் படைகளீலும் தளபதிகளாகவும், வீரர்களாகவும் பணீபுரிந்தனர். அதற்கான தேவை இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சாதியக் கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு சாதிய அமைப்புமுறையைக் குலைக்காத ஒரு நுட்பமான பாதையைப் பின்பற்றியது. ராணுவத்துக்கும், ஆலைகளுக்கும் தேவைப்பட்ட அளவுக்கே தலித்துகள் அரசு அமைப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி சாலைகளீலும், நிறுவனங்களிலும் ப்ரந்து விரிந்த கிராமப் பகுதிகளீலும் சாதிய முறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் வலத்திலும் காண்கிறோம். பின்னி மில்லில் பாதிப்பேர் தலித்துகள். அவர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்து ஆங்கிலம் படிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் காயம் பட்ட ஒருவனை தன் வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்று சொல்லும் உரிமை உயர்சாதிக்காரனுக்கு அனுமதிக்கப்பட்டது. சாதியக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் மேல்சாதிக்காரர்களின் பொருளாதார பலத்தைத் தகர்க்காமல் சாதிய அமைப்பில் பலவீனத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதை அயோத்திதாசரின் அனுபவத்திலிருந்து இன்று வரையிலான அனுபவங்கள் காட்டுகின்றன. தலித்துகள் படிக்கவும், மில்களில் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் சாதி ஆதிக்க வாதிகள் சாதியைக் காப்பாற்றும் பொருளாதார மேல்நிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கபப்டுகின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடக்கம் வலத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவையனைத்தையும் விட நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பத்திரங்களின் உருவாக்கத்தில்தான் விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பாட்டர்ஸனின் பாத்திரம். ஒரு விளையாட்டாகத் தொடங்கி நரி வேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. பேட்டர்ஸனின் நாயான புல்லட்டின் விசுவாசம் சக்திக்கு மீறிய உழைப்பால் தளர்ந்து வரும் அதன் உடல்நிலை . . . விநாயக முருகனின் எழுத்துத் திறன் தனிச்சிறப்புடன் வெளிப்படுகிறது. அவர் வருணிக்கும் நரிவேடையின் நுணுக்கங்கள் இந்தப் பகுதியை நாவலில் மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.

நரி வேட்டை ராயல் விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது நரியைக் கொல்வது வேட்டை அல்ல, விளையாட்டு என்று பிரிட்டிஷாரால் கருதப்பட்டது. குதிரையில் செல்லும் வேட்டைக்காரன் நரியைச் சுடுவது கௌரவக் குறைச்சல் என்று கருதப்பட்டது. எல் போன்ற இரும்புத் தடியால் நரியின் மண்டையை அடித்துப் பிளப்பதே சிறந்த விளையாட்டு வீரனுக்கு அடையாளமாகும் .எதிர்ப்புக்காட்டாத மனித குலத்தின் ஒரு பகுதியை அடக்கி ஒடுக்குவதிலும் அதை அதன் அற்பமான வாழ்விடங்களில் இருந்து ஓரப்பகுதிகளுக்கு விரட்டியடிப்பதிலும் மற்ற பகுதி காட்டும் முனைப்பை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். பழைய கொண்டாட்டமான தமிழக கிராமப்புற வேட்டைக்கும், ஆங்கிலேயர்களின் இது போன்ற கேளிக்கை அல்லது உள்ளே குமையும் மூர்க்கத்திற்கு வடிகாலான வேட்டைக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் நகரம் நரிகள் வாழத் தகுதியில்லாததாக மாறிப் போகிறது. நரிகள் எங்கோ தொலை தூரங்களில் சென்று மறைகின்றன. பஞ்சமும், பசியும் நோய்களும் அவை விட்டுச் சென்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறுகின்றன.

நாவல் முழுக்க விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. நாவலில் சொல்லப்படும் எதைக் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டாலும் துல்லியமாக ஆதாரங்களுடன் அவர் விடையளிப்பதை முக நூலில் பார்த்திருக்கிறேன். சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல. ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை வலம் உணரவைக்கிறது.

ஓர் இடத்தில் மட்டும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தோடர் பழங்குடியின கரோலின் பாத்திரம் அது. வெள்ளைக்காரன் தொடர்பால் அவளது அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். கரோலின் கோஹனைக் காதலிக்கிறாள். கவர்னரின் வேட்கைக்கு இரையாகிறாள். குற்ற உணர்வால் உந்தப்பட்டு கோஹனின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் கன்னியாஸ்திரியாவதாக நாவல் முடிகிறது. பழங்குடியினங்களில் குழந்தைகள் ஒருபோதும் அனாதைகளாக விடப்படுவதில்லை. அவர்களது பாலியல் சார்ந்த பார்வையும் நமது மத்திய தரவர்க்கப் பார்வையிலிருந்து வித்தியாசமானது. விநாயக முருகன் கட்டாயம் ஏதோ ஒரு வரலாற்று ஆவண்த்திலிருந்துதான் இந்த பாத்திரத்திற்கான தாக்கத்தைப் பெற்றிருப்பார் என்று உணரமுடிகிறது. அந்த சூழலை சற்று விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னையின் ஆரம்ப நாட்களையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வையும் இயற்கையின் நுட்பமான வலைப்பின்னலின் பின்னணியில் சுவாரஸ்யமான நாவலாக்கிய விநாயக முருகன் பாராட்டத்தக்கவர்.

நன்றி:- இரா.முருகவேள்

Tuesday, August 2, 2016

வலம் நாவல் -- கண்ணன் ராமசாமி




வலம் நாவல் பற்றி எழுத்தாளர் கண்ணன் ராமசாமியின் விமர்சனம்

http://kannanwriter.blogspot.in/2016/08/blog-post.html

வலம் நாவலின் முன்னுரையில் அதன் எழுத்தாளர் விநாயக முருகன் இப்படியாக அறிவிக்கிறார்:
நான் வரலாற்று ஆசிரியன் அல்ல. கிடைத்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவது என் நோக்கமும் அல்ல. ஒரு கற்பனை சித்திரத்தை முன்வைக்கும் ஓவியன்
இது தான் வலம். எந்தவொரு வரலாற்று எழுத்தாளருக்கும் தன்னுடைய ஆய்வு முடிவுகள் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், வரலாற்றுப் பின்னணியில் சேதி சொல்லும் புனைவுச் சித்திரத்தை மட்டும் வரையும் ஓவியரின் இத்தகைய அசாத்திய தைரியம் பாராட்டுக்குரியது.
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்த நரிமேடு அறிமுகப் படுத்தப் படுகிறது. நரிகளும், நடிமேட்டினை நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாற்றிய ஆன்மிகமும், அந்த மேட்டினை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் கவனித்து நாசங்களை ஏற்படுத்திய ஆங்கிலேயரும், அந்த நரிமேட்டின் முக்கோண வடிவத்தில் சரியாகப் பொருந்துகின்றனர்.16ஆம் நூற்றாண்டில் இன்றைய பிராட்வே பகுதியில் கடல் மட்டம் உயர்ந்ததால், பல இடங்களில் குன்றுகளும் பள்ளங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் அட்டப் பாலம் என்று அழைக்கப் பட்டது.
அப்போது அய்யப்ப நாயகர் என்பவரிடம் இருந்து நல்ல விலைக்கு ஜார்ஜ் டவுன் இருக்கும் இடத்தை கிழக்கிந்திய கம்பெனியின் முதல் ஏஜெண்டான ஆண்ட்ரூ கோகன் வாங்கினான். அங்கு வாணிபம் செய்வதே அவனுடைய முக்கிய நோக்கம். அவனுக்கு அடியில் வேலை செய்தவனே பிரான்சிஸ் டே.
அப்படியே இருநூறு ஆண்டுகள் கடந்தால், ஸ்டீபன் போப்பம் (Stephen Popham’s) எனும் வரலாற்றுக் கதாபாத்திரம் Black town என்று அழைக்கப்பட்ட George Town ல் ஒரு இடத்தை வாங்கித் தங்குகிறார். அவருக்கு Fort St. George கோட்டைக்கு எதிரில் நிற்கும் நரிமேடு எனும் குன்று அச்சுறுத்தலாகத் தெரிகிறது. அதை உடனடியாக இடித்து தரைமட்டம் ஆக்க வேண்டும். அதோடு, போபம் தன்னுடைய நிலத்திற்கு அருகில் உள்ள அட்டப்பாலத்திற்குள் கொட்டி சமன்படுத்துவதற்கு மணலும் தேவைப்படுகிறது என்று எண்ணுகிறான். இதன் மேல் ஒரு விரிவான சாலையை அமைக்கவும் திட்டம். இந்த இரு திட்டங்களையும் சொல்லி போபம் நரிமேட்டினை தரைமட்டம் ஆக்குவதற்கு அனுமதி பெறுகிறான். அதிலிருந்து கிடைத்த மணலை எடுத்து அட்டப்பாலத்தில் நிரப்பி, George townவழியாக பெரிய சாலையை அமைக்கிறான். அது Popham’s Broadwayஎனும் பெயரைப் பெறுகிறது. இந்த Popham’s broadway தான் இப்போது வெறும் ப்ராட்வேவாக நம்மால் அறியப் படுகிறது. தரைமட்டம் ஆக்கப் பட்ட நரிமேட்டின் மேல் தான் தற்போது பொது மருத்துவமனையும், மெட்ராஸ் யுனைடட் க்ளப்பும், பார்க் டவுன் போஸ்ட் ஆபீசும் இருக்கிறது.
இந்த யோசனையை செயல்படுத்திய Stephen Popham’s தான் 1782 ல் மெட்ராஸ் காவல் படையை அமைத்திருக்கிறார். இந்த இணைப்பை,19 ஆம் நூற்றாண்டின் புனைவுக் கதாபாத்திரமான ஆண்ட்ரூ கோகன், மதராசப்பட்டின காவல் படையில் கேப்டனாக இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இங்கே, மதராசப்பட்டினத்தை உருவாக்கிய பெருமை பொருந்திய இரு நண்பர்களில் ஒருவரான ஆண்ட்ரூ கோகனின் வியாபாரப் பேராசையும், பொதுவாகவே சொந்த நாட்டில் தாங்காமல், வலம் சென்று பிற நாடுகளின் இயற்கை அமைப்புகளில் மாற்றங்கள் செய்யும் ஆண்களும், சாதிய உட்பிரிவுகளை ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து அடிமை படுத்த அனுமதி அளித்த நம்பிக்கை அமைப்பும் விமர்சிக்கப் படுகின்றன. இம்மூவரின் நடவடிக்கைகளால் எப்படி இயற்கையின் சமன்பாடு நரிமேட்டுடன் சேர்த்து உடைக்கப் படுகிறது என்று விளக்குகிறது நாவல்.
ஆண்ட்ரூ கோகனால் நரிமேடு தரைமட்டம் ஆக்கப்பட்ட பிறகு, மதராசப் பட்டினம் வடக்கில் வெள்ளையர் நகரமாக (அடையாற்றுக்கு அருகில்), சையதுஷாபேட்டை என்று அழைக்கப்பட்ட சைதாப்பேட்டையை ஒட்டிய ஆற்றங்கரையோரம் கருப்பர்களாகிய பணியாட்கள் தாங்கும் சேரிகளாக உருவாகுகின்றன. இந்நிலையில் நரிமேட்டில் இருந்து துரத்தப்பட்ட நரிகள் அடையாற்று காடுகளில் தஞ்சம் புகுகின்றன.

நரிமேட்டை தகர்க்கும் போது எதிர்த்த நரிகளையும், செம்படவர்களையும் ஒரே குழியில் இட்டு எரிக்கிறார்கள் கோகனின் ஆட்கள். இதை முதலில் படித்ததில் இருந்து இந்தக் கதை நெடுகிலும் எனக்கு உள்ளுணர்வாக ஒரு விடயம் அரித்துக் கொண்டே இருந்தது. நரிகளும் மனிதர்களும் தனித்தனியாக நடமாடுவது இக்கதையில் தெளிவு படுத்தப் பட்டிருந்தாலும், எனக்கு நரிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட நிஜ மனிதப் போராளிகள் என்றும், நரிகளைக் கொல்ல உதவும் பாக்ஸ் ஹவுன்ட் நாய்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னதைச் செய்யும் ராணுவ சிப்பாய்கள் என்றும், ராஜபாளையம் நாய்கள், சுய ஆதாயத்திற்காக தம் மக்களை தாமே கொல்லும் இந்திய ராணுவ மற்றும் மத நம்பிக்கையாளர்கள் என்றும் தோன்றியது. இத்தகைய ஒப்புமை கதையை மேலும் சுவாரசியமாக்குகிறது.

இதற்கான பல உதாரணங்களை மேற்கோளிட வேண்டும்:
1.  பிராசிஸ் டேவின் குழந்தை நரிமுகத்துடன் பிறக்கிறது. இது ஒரு வகையான மிஸ்டிகல் ரியலிச சிந்தனையை உருவாக்குகிறது. ஒருவேளை நரிமுகம் என்பது இந்திய முகம் தானோ? அப்படியானால், பிராசிஸ் டேவின் மனைவி, ஒரு இந்தியனோடு உறவு வைத்துக் கொண்டதால் தான் அப்படி எழுதி இருக்கிறாரோ? இந்திய ஆண்களை புணரும் பிரிட்டிஷ் பெண்களை நரிகளைப் புணரும் நாய்கள் என்று பேட்டர்சன் என்கிற கதாபாத்திரம் விமர்சிக்கிறான். இந்தியர்களை அவ்வப்போது நரிப்பசங்க என்று விமர்சிக்கும் இடங்களும் கதையில் இருக்கின்றன. இவை எல்லாம் நரிகளின் மூலமாக இந்தியர்களையும் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

2.   ஆங்கிலேயர்கள் விரட்டும் போது நரிகள் தந்திரமாக செயல்படுவது நமது இந்தியர்களின் கொரில்லா யுக்திகளை நினைவுபடுத்தாமல் இல்லை. வெள்ளையர்களால் விரட்டப்படும் நரிகள் ஏன் மறுபடியும் சொந்த இடத்திற்கே வருகின்றன என்கிற கேள்விக்கு, மாசானம் என்கிற கதாபாத்திரம் சொல்கிறார், நரிகளை இங்கிருந்து விரட்டினாலும், பிறந்த இடத்தின் நினைவுகளை அவற்றின் மனதுகளில் இருந்து அவ்வளவு எளிதாக விரட்ட முடியாது என்று. இதனை கிளர்ச்சியாளர்களின் மன நிலையோடும் பொருத்திக் காணலாம்.

3.   கோகனின் காவல் நிலையத்தை முற்றுகை இடுகிறார்கள் பறையர்கள். அப்போது பிரிட்டிஷ் அரசின் அதிகார அமைப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அவர்கள் எப்போதும் மேலதிகாரிகளுடைய கட்டளைக்கு கீழ் பதிவார்கள். ஆனால், நாமோ வேலூர் புரட்சியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், தனி மனித புரட்சி எந்த வித இலக்கும் அற்று இருக்கும் என்பது தான். இதை பாக்ஸ் ஹவுன்ட் நாய்களின் கீழ்படிதலுக்கும், ராஜபாளையம் நாய்களின் வெறித்தனமான தாக்குதலுக்கும் ஒப்பீடாகக் கருதலாம்.

4.   நரிகளைக் கொல்வது ஒரு கவர்ச்சிகரமான விளையாட்டாக ஆங்கிலேயர்களால் பார்க்கப் படுகிறது. அது அவர்களது சிறு வயதில் இருந்தே பழக்கமாக ரத்தத்தில் கலக்கப் படுகிறது. அவர்கள் தங்களுடைய சக்திக்கு மீறிய புலிகளைக் கொல்ல நினைப்பதில்லை. அதைக் காட்டிலும், சக்தி குறைந்த, ஆனால் தந்திரங்களின் மூலம் கொல்ல வேண்டும் என்கிற கிளர்ச்சியை ஏற்படுத்தும் நரிகளைத் தான் அவர்கள் கொல்ல பிரியப் படுகிறார்கள் என்கிற கருத்து, இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஏன் கொன்றார்கள் என்கிற கேள்விக்கு பதிலாகவும் அமைகிறது. நரி விளையாட்டுக்கு மாற்றாகத் தான் கிரிக்கெட் விளையாட்டும் இங்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு பண்டைய கால கலோசிய பாணியில் வட்டமாக உட்கார்ந்து அனைவரும் ரசிக்கும் விளையாட்டாகவும் இருப்பது இங்கு ஒப்புமை செய்து யோசிக்கத் தக்கது. ஆக நரிகளையும், இந்தியர்களையும் அவர்கள் க்ளாடியேட்டர்களின் நீர்த்துப் போன வடிவமாகத் தான் கருதியிருக்கிறார்கள் எனும் கருத்துக்கு இங்கு இடம் இருக்கிறது.
5.   இந்தியர்களின் புழு போன்ற உடலையும், கருப்பு நிறத்தையும், கிளிஞ்சல் கண்களையும் நரிகளின் குள்ள உருவத்தோடும், கண்களோடும் ஒப்பீடு செய்திருக்கிறார் வி.மு. இந்திய சாதிய கட்டமைப்பில் ஒரு சாதியினர் மற்றொரு சாதியை அடிமைப் படுத்துவதும், அவர்களே இன்னொரு சாதியினருக்கு கீழ் அடிமையாய் இருப்பதுமான வினோதம் நிகழ்கிறது. இதனை ஆங்கிலேயர்களின் கையால் மரணிக்கும் நரிகள், ஆமைகளையும் எலிகளையும் கொண்டாட்டமாக விளையாடிக் கொல்வதை ஒப்புமையாகக் கருதலாம்.

இவ்வாறாக, நரிகளையும், நாய்களையும் மனிதர்களோடு ஒப்பிட்டு நோக்கச் செய்து, வாசகனாகிய என்னையும் கதைக்குள் மாற்றங்கள் செய்ய வைக்கும் வலம் ஒரு முக்கிய படைப்பாகிறது.
அடுத்ததாக, பல முக்கிய பிரச்சனைகள் குறித்த அரசியல் பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. அவற்றையும் ஒவ்வொன்றாகக் காணலாம்:

மதம், சாதிய அமைப்பு:
பொதுவாகவே மதவாதிகளும், சாதியத்தின் பாதுகாவலர்களும் ஒரு பொதுவான கருத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வழக்கம். அது பகுத்தறிவாளர்கள் ஒற்றைப்படையாக இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு. இது நிஜத்தில் அடிப்படைவாத இந்திய நாத்திகர்களின் குணம். ஆனால், பகுத்தறிவு என்பதே ஒரு சார்பற்ற நிலைக்கு வித்திடும் உண்மை இவர்களுக்கு விளங்குவதில்லை. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த பகுத்தறிவாளரை இனம் காணச் செய்கிறது என்பதற்கான உதாரணங்கள்:

சாதிய அமைப்பின் அடிப்படையே கல்வியை மறுதலிப்பதாகும். காரணம், நம்பிக்கைகளும், பகுத்தறிவும் ஒன்றாக பயணிப்பது கடினம் என்பதே. நரிமேட்டுச் சித்தர், அணையாத விளக்கு என்று தொடங்கி இக்கதையில் நடக்கும் மரம், நரிமனிதன் என எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. நியாயமான கேள்விகளை எல்லாம் நம்பிக்கைகளுக்கு எதிரான புண்படுத்தும் கேள்விகளாகப் பார்க்கும் மனிதர்கள் இதிலும் இருக்கிறார்கள். பின்னி மில்லில் சாதிய அமைப்பின் மேல் நிலையில் உள்ள பிராமணர்கள் எவ்வாறு ஊதிய வேறுபாட்டின் மூலம் பிள்ளை, நாயக்கர், பறையர் சமூகத்திற்குள் வேற்றுமையை ஏற்படுத்தினார்கள் என்றும் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. சாதிய கட்டுமானம், இனக் கலப்பை குறைத்து இந்தியர்களின் உடல் உறுதியை உருக்குலைத்து விட்டதாக ஜாக் ஓரிடத்தில் கூறுகிறான். பிராமணர்களின் புத்தி கூர்மைக்கும் ரத்த சுத்திக்கும் தொடர்பில்லை என்கிற உண்மையை ரத்தினமும், தாசரும் உணர்த்துகிறார்கள். இந்து-பௌத்த மதங்களுக்கு இடையிலான சண்டைகளைப் பற்றிய விவாதமும் இடம் பெறுகிறது.
இதற்கு இணையாக, கிறித்தவ நடைமுறைகளைப் பற்றிய விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. கத்தோலிக்க கிரித்தவர்களுடைய மன நிலையும், பிராமணர்களுடைய மனநிலையும் ஒன்று என்கிற இந்த நாவல். இருவருக்கும் தாங்கள் உயர்குடியில் பிறந்தோமென்ற செருக்கு இருக்கும் என்று ஜாக் ஓரிடத்தில் சொல்கிறான். இங்கிருக்கும் உட்பிரிவுகளுக்கு இடையிலான மோதல், ஆங்கிலேயர்களுக்கு அநுகூலமாகி விட்டது என்று கருத்து தெரிவிக்கப் படுகிறது.
அதோடு, சில கிறித்தவர்களின் நற்பணிகளால் மக்களுக்கு நன்மை விளைந்தது உண்மை தான் என்றாலும், அதன் பின்னணியில் மத மாற்றம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது எனும் போது, அந்த சேவை விஷத்தன்மை கொண்டதாகும் என்கிற வெளிப்படையான கருத்தும் இடம் பெறுகிறது. பிரிட்டிஷாரின் உதவிகள் பெரும்பாலும் கிருத்தவ தொண்டு நிறுவனங்களுக்கே சென்றது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.
கத்தோலிக்கர்களை மட்டும் விமர்சிக்கிறாரே! இவர் ப்ராடஸ்டன்ட் அபிமானியா என்றும் கூட மத நம்பிக்கையாளர்கள் கேட்கலாம். இதற்கு விடையாக, பேட்டர்சனின் தந்தை கூறுகிறார். நாம் செல்டிக் இனத்தை சேர்ந்தவர்கள். ப்ராடஸ்டண்டுகளின் நடவடிக்கையால் நாம் துரத்தப் பட்டோம் என்று. இதன் மூலம், அதிகார வேட்கையால் செயற்கையாக அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட பஞ்சம் மற்றும், கிறித்தவர்களின் வெறியாட்டம் இந்திய நிலைமையோடு ஒப்புமை படுத்தப் படுகிறது.
ஆங்கிலேயே ஆட்சியில், மதத்தால் உந்தப்பட்ட பெண்கள் பிரசவத்தில் கூட இறக்க நேரிட்டது எனும் உண்மையை கோஷா அணியும் இசுலாமியப் பெண்களை முன்வைத்து சொல்லி இருக்கிறார் வி.மு.
இவ்வாறாக எந்த மதமும் ஒடுக்கப் பட்டவர்களை விட்டு வைக்க வில்லை என்கிற வலுவான ஆதாரத்துடனான வாதம் முன்வைக்கப் படுகிறது.

இயற்கை சீரழிவு:
ஒற்றை வைக்கோல் புரட்சியை எழுதிய மசனோபு ஃபுக்குவோக்கா, ஒரு வயலில் வெட்டுக் கிளியின் பங்கு என்ன? சிலந்திகளின் பங்கு என்ன? என்று தரம் பிரித்து, இயற்கை விவசாயம், ஒன்றும் செய்ய வேண்டியிறாத விவசாயம் என்று விளக்கி இருப்பார். மனிதன் இயற்கைக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் எதையும் செய்து வைக்கத் தேவையில்லை. இயற்கை தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்பார். அவ்வாறு மனிதன் இயற்கையை புரிந்து கொள்ளாமல் செய்யும் எதுவும் அதன் சமன்பாட்டை குலைத்து, நாசத்தை ஏற்படுத்தும் என்பதே அவர் கற்ற பாடம்.
இந்த நாவல் ஏறக் குறையை இதையே சொல்கிறது. முன்னேற்றம் என்பது யாது? என்கிற கேள்விக்கு விடையாக பலர் பலவற்றைக் கூறலாம். ஆனால், மனித சமுதாயத்தோடு கூடி இயற்கையின் அனைத்து படைப்புகளும் உயிர் வாழ வேண்டும் என்கிற ஒரு சூழலே முன்னேற்றத்திற்கான சூழல்.
ஆனால், நகரமயமாதலின் தொடக்கமாக ஆண்ட்ரூ கோகன் செய்த அந்த நாச வேலை தான் கதையின் பின் பகுதியில் வரும் அனைத்திற்கு காரணியாக விளங்குகிறது. ஸ்டீபன் போபம் தான் வாங்கிய நிலத்தின் மதிப்பு கூட வேண்டும் என்கிற காரணத்திற்காகத் தான் நரிமேடு கோட்டைக்கு அச்சுறுத்தல் என்று கூறி அதை இடிக்கவும் வைத்தான். இதன் மூலம் அவன் இரண்டாவது கோகனாகவும் மாறுகிறான்.
இந்த நாவலும் பல இடங்களில் இயற்கையின் ஒன்றுக் கொன்று தொடர்புடைய விடயங்களைப் பற்றிய செய்திகளை தூவிச் செல்கிறது.
1.   நரிகள், ஆங்கிலேயரும் பிறரும் நினைப்பது போல தந்திரமான விலங்குகள் இல்லை. அவை செத்துப் போன விலங்குகளை உண்டு காடுகளை சுத்தம் செய்கின்றன என்று சொல்வதில் இருந்து தொடங்குகிறது இது பற்றிய குறிப்புகள்.

2.   சாணி வண்டுகள் மட்டும் இல்லை என்றால் இந்த இடமே மிருகங்களின் கழிவுகளால் பாழ்பட்டுப் போகும் என்கிறார் மாசானம். இங்கு நம் கழிவுகளை அள்ளும் சக்கிலி, அருந்ததியர் மீது கவனம் திரும்புகிறது.
3.   கொசுக்களுக்கு விலங்குகளின் ரத்தமே போதும். காடுகளை அழிப்பதால் தான் அவை மனிதனை தேடி வருகின்றன.
4.   செம்படவர்கள் நரிகளை கடவுளாக ஏற்றுக் கொண்டதால் அவர்கள் என்றும் பஞ்சத்தினால் பாதிப்பை சந்தித்ததில்லை.  
5.   ஒரு புலி பசி அடங்கிவிட்டால் மான்களை வேட்டையாடுவதில்லை. மனிதனிடம் தான் அந்த எண்ணம் உள்ளது.
இவ்வாறாக பல இடங்களில் இயற்கையை புரிந்து கொள்ளாததால் தான் தவறுகள் நிகழ்கின்றன என்று கருத்துச் சொல்கிறது இந்த நாவல்.

பெண் அடிமைத் தனம்:
பெண்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சான்றாக கரோலினும், சூசனும் இக்கதையில் வலம் வருகிறார்கள்.
இங்கே குறிப்பிடப் படும் சூசன் என்பவர் நிஜ வரலாற்றில் ராபர்ட் போர்க் முதலாம் பேரன் கன்னிமாராவின் முதல் மனைவியான லேடி சூசன் ராம்சே என்பவர் தான். கன்னிமாரா மெட்ராஸ்-ன் கவர்னராக இருந்த போது சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் கிழக்குக் கோஸ்டல் ரயில்வே லைனை மேம்படுத்தினார். இவருடைய பெயரைத் தாங்கியே கன்னிமாரா நூலகம் இன்றும் இயங்கி வருகிறது.
அந்தக் காலத்தில் கன்னிமாரா விவாகரத்து பல செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கின்றன. சூசனுக்கு கொசுக்கடியால் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்ற சமயத்தில் அவரால் விருந்துகளில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. அப்போது கன்னிமாரா, லேடி ஈவா என்கிற பெண்ணை சூசனுக்கு உதவியாகவும், விருந்துகளில் உபசரிக்கவும் உடன் வைத்திருந்திருக்கிறார். நாளடைவில் சூசனுக்கு கன்னிமாராவின் மேல் சந்தேகம் ஏற்படத் தொடங்கி உள்ளது. கண்ணிமாராவுக்கும் லேடி ஈவாவுக்கும் (கதையில் இவள் பெயர் கரோலின்) ஒன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக கோடையில் சூசன் அவரோடு ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அக்டோபரில் சூசனுடன் சர்ஜியன் மேஜர் ப்ரிக்க்ஸ் (கதையில் டாக்டர் பைடி) ஊட்டியில் தங்க, கன்னிமாரா தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக லேடி ஈவா வை மறுபடியும் மதராசப் பட்டினத்தில் வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். இதற்குப் பிறகு 1890 ல் குடும்ப நபர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக சூசன் விவாகரத்து கோரியிருக்கிறார்.

இந்தக் கதையில் சூசனின் கதாபாத்திரம் கண்ணியத்தோடும், பரிவோடும் இந்தியர்களை நடத்தும் பெண்ணாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெண் தான் மனிதனின் வாழ்க்கையை முழுமை படுத்துகிறார். அவளுக்கு சொந்த இடத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயங்களே மனதில் தங்குகிறது. ஆனால், அவளை ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான். ஆண், எப்போதும் சொந்த இடத்தை விமர்சித்துக் கொண்டே இருக்கிறான். அதனாலேயே அவன் வலம் செல்கிறான். நாசங்களை ஏற்படுத்துகிறான். இது போன்ற வித்யாசனமான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
இக்கதையில் கரோலின் தமிழ் நாட்டுப் பெண்ணாக வருகிறாள். நிஜத்தின் அடிப்படையில் எழுதப் பட்டிருந்தாலும், இவளுடைய கதாபாத்திரத்தில் சற்று புனைவு கலந்துள்ளதாக தெரிகிறது. கரோலினுக்கும் (லேடி ஈவா) கவர்னருக்கும் தொடர்பு உள்ளது என்று அறிந்த பிறகு, சூசன் தன்னைத் தானே திட்டிக் கொள்கிறாள். தான்னால் தான் இவள் மெட்ராசுக்கு வந்தாள். அதனால் தான் இவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்று நினைக்கிறாள். அதனால் அவளை காக்க வேண்டும் என்பதற்காக கோகனுடன் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். நிஜத்தில் லேடி ஈவா கவர்னரின் உதவியாளரான கேப்டன் க்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

எனக்குத் தெரிந்த வரையில் இந்நாவலை நான் போதுமான அளவிற்கு அலசிவிட்டதாக நினைக்கிறேன். விமர்சனம் என்று வரும் போது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம் தான்.
இந்தக் கதையில் எழுத்தாளர் கையாண்டிருக்கும் நேர்த்தியை பற்றி முதலில் சொன்னால், குறைகள் இல்லை; வெறும் எதிர்பார்ப்புகள் மட்டுமே உள்ளன என்று புரிந்து கொள்ள முடியும். கதை சொல்லும் போது எழுத்தாளர் முதலில் சில அறிமுகங்களை செய்து பின், அதை விளக்கமாக தகுந்த இடங்களில் கட்டவிழ்த்துக் கொண்டே வருகிறார். இக்கதை எந்தெந்த அரசியல்களை பேச வேண்டும் என்பதை பட்டியல் இட்டு, அதன்படி நேர்த்தியாக கதையின் போக்கை வடிவமைத்திருப்பது புரிகிறது.
அதே நேரம், கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் பத்திகள் நிறைய உள்ளன. அடிப்படையில் இது ஒரு இன்வெஸ்டிகேஷன்-ஐ மையமாக வைத்து பயணிக்கிறது என்றாலும் கதையின் முதல் பாதியிலேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்று கணித்து விட முடிகிறது. ஒருவேளை, எழுத்தாளர் இதை சஸ்பென்ஸ்-ஆக முன்னிறுத்த வில்லையோ என்று கூட தோன்றுகிறது. ஏனெனில், முக்கிய கதாபாத்திரங்களுக்கு உரிய இடம் தரப் பட்டிருப்பதால் தான் இந்த சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் போது யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று நம்மால் கணித்து விட முடிகிறது.
மெட்ராஸ் ரீஜியனைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை என்பதால் இந்தக் கதையின் வரலாற்றுப் பின்னணி சற்று குறைவாக இருப்பது போலத் தெரிகிறது. நாம் தினமும் காணும் இடங்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதால் இது சற்று சமன்பட்டு தெரியாமல் போகிறது. ஆனால் கூடியவிரையில் வி.மூவிடம் இருந்து முழுமையான ஒரு வரலாற்று நூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் புனைவுக்கு இணையாக வரலாறும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

அன்புடன்
கண்ணன் ராமசாமி 
(பரமபதம் (2014) மற்றும், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’ நாவல்களின் எழுத்தாளர்)